எம்.ஆர்.எஃப். தொழிலாளர்களின் சிக்கலைத் தீர்க்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:
சென்னை திருவொற்றியூரில் உள்ள எம்.ஆர்.எஃப். தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்களுடன் புதிய ஊதிய ஒப்பந்தத்தில் ஆலை நிர்வாகம் கையெழுத்திட வேண்டும், தொழிலாளர்களை பழிவாங்கும் போக்கை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
எம்.ஆர்.எஃப். தொழிற்சாலை நிர்வாகத்திற்கும், தொழிற்சங்கத்திற்கும் இடையிலான ஊதிய ஒப்பந்தம் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே காலாவதியாகிவிட்டது. அதற்கு பதிலாக, புதிய ஊதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டிய ஆலை நிர்வாகம், இல்லாத காரணங்களைக் கூறி தட்டிக் கழித்து வருகிறது. இதுதொடர்பாக இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற பேச்சுக்களின் போது, தொழிற்சாலையின் இரு முக்கியத் துறைகளின் அனைத்துப் பணிகளையும் கவனித்துக் கொள்ளும் உரிமையை வேறு ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப் போவதாகவும், அதை தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொண்டால் தான் புதிய ஊதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியும் என்றும் நிர்வாகம் கூறிவிட்டதால் அதை எதிர்த்து தொழிலாளர் நல நீதிமன்றத்தில் தொழிற்சங்கங்கள் வழக்குத் தொடர்ந்தன. இந்த வழக்கு முடிந்தால், புதிய ஊதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டியிருக்கும் என்பதால், இந்த வழக்கை முடிவடையாமல் இழுத்தடிக்கும் பணியில் ஆலை நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது. இதை எதிர்த்து குரல் கொடுக்கும் தொழிலாளர்களுக்கு ஊதியத்தைக் குறைப்பது, தற்காலிக பணி நீக்கம் செய்வது, நிரந்தர பணி நீக்கம் செய்வது உள்ளிட்ட பழிவாங்கும் நடவடிக்கைகளை ஆலை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
தொழிலாளர்களுக்கு எதிரான ஆலை நிர்வாகத்தின் இந்த போக்கு கடுமையாக கண்டிக்கத்தக்கது. ஆலை நிர்வாகத்தின் இந்த செயல்பாடுகளைக் கண்டித்து தொழிற்சங்க நிர்வாகிகளான வெங்கடேசன், விஜயகுமார் ஆகிய இருவரும் கடந்த 02.02.2015 முதல் தொழிற்சாலை வளாகத்துக்கு அருகில் தொடர் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இதேகோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துத் தொழிலாளர்களும் கடந்த 21.02.2015 அன்று சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அறப்போராட்டம் நடத்தினார்கள். இவர்களின் போராட்டத்திற்கு வட சென்னையில் செயல்படும் அனைத்து தொழிற்சாலைகளிலும் பணியாற்றும் தொழிலாளர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இவ்வளவுக்குப் பிறகும் தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக அவர்களுடன் பேச்சு நடத்த ஆலை நிர்வாகம் மறுத்து வருகிறது. எம்.ஆர்.எஃப். தொழிற்சாலையில் மொத்தம் 1100 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதற்காக ஆண்டுக்கு ஓரிரு கோடிகள் மட்டுமே செலவாகும். ஆனால், ஆண்டுக்கு ரூ.1000 கோடிக்கும் அதிகமாக லாபம் ஈட்டி, அதில் ரூ.500 கோடியை உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான விளம்பரதாரர் கட்டணமாக வழங்கியுள்ள எம்.ஆர்.எஃப். நிர்வாகம் தொழிலாளர்களுக்கு உரிமைகளை வழங்க மறுப்பது கண்டிக்கத்தக்கது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.10 ஆயிரம் முதலீட்டில் பலூன் தொழிற்சாலையாக தொடங்கப்பட்ட எம்.ஆர்.எஃப். நிர்வாகம், இப்போது ஆண்டுக்கு ரூ.15,000 கோடி வருவாய் ஈட்டும் அளவுக்கு வளர்ந்திருப்பதற்குக் காரணம் அதன் தொழிலாளர்கள் தான் என்பதை மறந்து விட்டு, அவர்களை கொத்தடிமைகளைப் போல நடத்துவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
இந்தப் பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காண வேண்டிய தமிழக அரசு, வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது சரியல்ல. 2008 ஆம் ஆண்டு இதேபோன்ற சிக்கல் ஏற்பட்ட போது தொழிலாளர்களை பழிவாங்கும் நோக்கத்துடன் கதவடைப்புச் செய்வதாக ஆலை நிர்வாகம் அறிவித்தது. இதையடுத்து அப்பிரச்சினையில் தலையிட்ட தமிழக அரசு, ஒரு வாரத்திற்குள் கதவடைப்பை நீக்காவிட்டால், ஆலையை அரசே ஏற்று நடத்தும் என எச்சரித்தது. அதன்பிறகே எம்.ஆர்.எஃப். நிர்வாகம் பணிந்தது. அதேபோல், இப்போதும் இப்பிரச்சினையில் தலையிட்டு எம்.ஆர்.எஃப். ஆலை நிர்வாகத்தையும், தொழிற்சங்கங்களையும் அழைத்துப் பேசி சிக்கலுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.