ஸ்ரீநகர்: இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநில முதலமைச்சராக முஃப்தி முகமது சயீத் இன்று பதவியேற்றுக் கொண்டார். பாஜக., கூட்டணியில் இன்று அவர் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு பலதரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்தன. காஷ்மீரில் பாஜக – மக்கள் ஜனநாயகக் கட்சி கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் முஃப்தி முகம்மது சயீத் காஷ்மீரின் புதிய முதல்வராகவும், பாஜகவைச் சேர்ந்த நிர்மல்சிங் துணை முதல்வராகவும் பதவியேற்றுள்ளனர். காஷ்மீர் முதல்வராகப் பதவியேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்தார் முப்தி முகமது. அப்போது பேசிய அவர்… ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிறந்த வெளிப்படையான ஆட்சி இருக்கும். தற்போது ஏற்பட்டுள்ள கூட்டணி, மாநிலத்தில் ஒரு திருப்புமுனையாக இருக்கும் வகையில் செயலாற்றுவோம். எங்களுக்கு கல்வியும், வேலைவாய்ப்பும்தான் மிகப் பெரிய சவால். முரண்பாடுகள் இருந்தாலும் சாதகமான முறையில் அதை மாற்றிக் கொள்வதே அரசியல். 2002ல் காங்கிரஸுடன் இணைந்திருந்தோம். அப்போது ஜம்மு காஷ்மீரில் அமைதியான சூழல் நிலவ பாடுபட்டோம். அப்போது நடந்த தேர்தல் அருமையானது. 2008ல் 21 உறுப்பினர்கள் எங்களுக்கு இருந்தனர். ஜம்மு காஷ்மீர் மக்களுடன் பேச்சுவார்த்தைகளை தொடங்குமாறு இந்த நேரத்தில் மத்திய அரசுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். கடந்த காலத்தைத் தோண்டிப் பார்க்க நான் விரும்பவில்லை. எதிர்காலம் குறித்து மட்டுமே பார்க்கிறேன். வட முனையோ அல்லது தென் முனையோ, ஏதாவது ஒன்றுடன் நான் இணைய வேண்டிய நிலை. குஜராத் போல ஜம்மு காஷ்மீரையும் வளர்ச்சி அடைந்த மாநிலமாக்க பாடுபடுவேன். இந்த மாநிலத்தில் அமைதி தவழ வேண்டும். இங்குள்ள அனைவருக்கும் அமைதி, நிம்மதி, நியாயம் கிடைக்க வேண்டும். இன்று புதிய அத்தியாயம் மலர்ந்துள்ளது. நாட்டில் உள்ள ஒரே முஸ்லீம் மாநிலம் ஜம்மு காஷ்மீர் மட்டும்தான். இங்குள்ள நிகழ்வுகள் மூலம் நாடு முழுமைக்கும் செய்தி கிடைத்துள்ளது. எங்களால் எவ்வளவு செய்ய முடியும் என்று தெரியவில்லை. ஆனால் ஒருவருக்கு ஒருவர் தோள் கொடுத்து செயல்படுவோம். 1947ம் ஆண்டு முதல் ஒவ்வொரு பிரதமருக்கும் காஷ்மீர் பிரச்சினையாகவே இருந்து வருகிறது. பேச்சுவார்த்தைகளில் ஹூரியத்துகளையும், பிரிவினைவாதிகளையும்கூட சேர்க்கலாம் என்பதே எனது கருத்து. அவர்களுடைய கருத்தையும் கேட்போம். பாகிஸ்தானுடன் நாம் தோழமையாக இருப்போம் என்று பிரதமரிடம் கூறியுள்ளேன். பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை குறித்த நடவடிக்கையில், முதல்கட்டமாக வெளியுறவுத்துறைச் செயலாளரை அங்கு அனுப்பி வைக்க உள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி என்னிடம் உறுதி அளித்துள்ளார் என்று பேசினார் முப்தி முகமது. காஷ்மீர் முதல்வராக .இன்று பதவியேற்றுள்ள முப்தி முஹமது சையது பதவியேற்ற சிறிது நேரத்திலேயே பிரிவினைவாதிகளுக்கு அழைப்பு விடுத்தும், பாகிஸ்தான் குறித்தும் சர்ச்சையைக் கிளப்பும் வகையில் பேசியிருக்கிறார். இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவுக்காக உழைத்து வரும் பாரதீய ஜனதா அரசில் உள்ள ஒரு முதல்வரே இப்படிக் கூறும்போது காஷ்மீர் தேர்தலில் இந்திய ராணுவம் மற்றும் தேர்தல் பணியாளர்களின் பங்களிப்பு என்ன என்பதை உடனடியாக விளக்க வேண்டும். முஃப்தியின் கருத்துக்கு பாரதீய ஜனதாவின் நிலைப்பாடு என்ன என்பதையும் தெரிவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
முதல்வர் பதவி ஏற்றார் முஃப்தி முகமத் சயீத்: முதல் நாளிலேயே சர்ச்சை!
Popular Categories


