இந்து சமய அறநிலையத்துறைக்கு எதிரான வழக்கில் மனுதாரர் 3 .5 லட்சம் ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டுகோள் விடுத்து, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்கு எதிராக மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு ஒன்றில் நேற்று மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் மிக வினோதமான தீர்ப்பு ஒன்றை வழங்கி உள்ளது.
அறநிலையைத் துறைக்கு எதிராக வழக்கு தொடுத்த மனுதாரரின் நேர்மை தன்மையை நிரூபிக்கும் வகையில் வழக்கு ஒன்று ரூபாய் 50,000 வீதம் ஏழு வழக்குகளுக்கு மொத்தம் மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் டெபாசிட் தொகை செலுத்த வேண்டும் எனவும் வழக்கு நல்ல நோக்கத்துடன் தொடுக்கப்பட்டது நிரூபிக்கப்பட்டால் அந்த பணம் திருப்பித் தரப்படும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வேடிக்கையாக உள்ளது. ஆன்மீக சிந்தனையோடு தெய்வ பக்தியோடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஆலயங்கள் முறையாக செயல்பட வேண்டும் என்கின்ற நல்லெண்ணத்தோடு வழக்கு தொடுப்பவர்களுக்கு இது பேரிடியாய் அமைந்துள்ளது. அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையை பாதிப்பதாகவும் அமைந்துள்ளது.
சுற்றுச்சூழல், விலங்குகள் என எத்தனையோ பேர் விளம்பரத்திற்காக பல வழக்குகளை தொடுத்து வருகின்றனர் அதில் சிலர் ஆதாயமும் அடைந்து வருகின்றனர். ஆனால் அறநிலையத்துறை சீராக செயல்பட வேண்டும் என்கிற நோக்கில் தெய்வபக்தியோடு வழக்கு தொடுப்பவர்களுக்கு எந்த ஆதாயமும் கிடைக்கப் போவதில்லை அவர்களுக்கு விளம்பரமும் அவசியமில்லை அப்படிப்பட்ட சூழ்நிலையில் மாண்புமிகு உயர்நீதிமன்றம் இத்தகைய உத்தரவு பிறப்பித்துள்ளது பொதுநல வழக்கு தொடுக்கும் உரிமையை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.
அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு ஆலயங்களில் நித்தம் நித்தம் பல்வேறு முறைகேடுகளும் விதிமீறல்களும் அக்கிரமங்களும் நடைபெற்று வருகிறது சமீபகாலமாக மாண்புமிகு உயர் நீதிமன்றத்தின் பல்வேறு நியாயமான தீர்ப்புகளுக்கு பின்பு தான் இந்து சமய அறநிலையத்துறை ஓரளவு சீர்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் அறநிலையத்துறையில் நடக்கும் அவலங்களை எல்லாம் முடிவுக்கு கொண்டு வர நீதிமன்றமே இறுதி வாய்ப்பு என நம்பி இருக்கும் இந்துக்களின் கடைசி கட்ட நம்பிக்கையையும் சீர்குலைக்கும் வகையில் இந்த உத்தரவு அமைந்துள்ளது .
பொதுவாக ஏதேனும் விளம்பரத்திற்காக யாரேனும் வழக்கு தொடர்ந்தால் வழக்கின் முடிவில் அவருக்கு அபராதம் விதிக்கப்படுவது நீதிமன்றங்களின் மரபு. ஆனால் வழக்கை விசாரிக்க துவங்கும் முன்பே டெபாசிட் தொகை செலுத்த வேண்டும் என கூறுவது வேதனையாக உள்ளது.
ஆகவே மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய அத்தகைய தீர்ப்பை நியாயமுடன் மறுபரிசீலனை திரும்ப பெற வேண்டும் என இந்து முன்னணி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறது