காவிரி பிரச்சனையை வைத்து தமிழகம், கர்நாடகம் ஆகிய இரு மாநில அரசியல்வாதிகளும் அரசியல் செய்து வருவதால் காவிரி பிரச்சினையை எந்த அரசியல் கட்சியாலும் தீர்த்து வைக்க முடியாது என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் வரும் மே மாதம் 12ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து நடிகர் பிரகாஷ்ராஜ், அங்கு பாஜகவுக்கு எதிராக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் மிரட்டல்களுக்கு எல்லாம் நான் அஞ்சமாட்டேன். பாரதீய ஜனதாவுக்கு எதிராக தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபடுவேன். காவிரி பிரச்சினையை எந்த அரசியல் கட்சியாலும் தீர்த்து வைக்க முடியாது. தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கட்சிகள் காவிரி விவகாரத்தை வைத்து அரசியல் செய்து வருகிறது.
பல நாடுகளில் பாயும் நைல்நதியின் நீர் எந்தவித சிக்கலும் இல்லாமல் பிரிக்கப்படுகிறது. இதேபோல காவிரி நீரை நாம் பிரித்துக்கொள்ள முடியாதா? இந்த விஷயத்தில் தமிழக – கர்நாடக மாநில மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். காவிரி பாசன பகுதிகள் மிகவும் மோசமாக உள்ளது. காடுகளும், மலைகளும் அழிக்கப்பட்டு வருகின்றன. ஆற்று மணல் கொள்ளையடிக்கப்படுகிறது. இதனால் நிலத்தடி நீருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் தடுக்காமல் காவிரி பிரச்சினையை தீர்த்து வைக்க முடியாது.