காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று, கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். இது, தமிழக அரசின் கடுமையான சட்டப் போராட்டங்களுக்கும் தமிழக மக்கள் போராட்டங்களுக்கும் பின்னர், மத்திய அரசு அமைத்த காவிரி மேலாண்மை ஆணையத்தை கொச்சைப் படுத்தும் செயல் மட்டுமல்ல, தமிழகத்துக்கு கர்நாடகம் செய்யும் துரோகமும் கூட!
முந்தைய கர்நாடக காங்கிரஸ் ஆட்சியில் கர்நாடக அரசு கொடுத்த நெருக்கடிகளையும், பல்வேறு முட்டுக்கட்டைகளையும் மீறி, அவப்பெயரைச் சுமந்து கொண்டு காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்துள்ளது மத்திய அரசு. உச்ச நீதிமன்றத்திலும் பேச்சு வாங்கிக் கொண்டு, கர்நாடகத்திலும் பெரும்பான்மை பெற முடியாமல், தமிழக அரசியல்வாதிகளின் பொய்ப் பிரசாரங்களால் கெட்ட பெயரைச் சுமந்து கொண்டு, பல்வேறு இழுபறிகளுக்கு இடையே தமிழக மக்களுக்கு மத்திய அரசு செய்துள்ள ஆரோக்கியமான விஷயத்தை மீண்டும் பழைய குருடி கதவைத் திறடி என்ற பாணியில் சிக்கலாக்கி அரசியல் ஆதாயம் தேட இப்போது கர்நாடக அரசின் குமாரசாமி, இங்கே கமல்ஹாசன் என்னும் கைப்புள்ளையை பிடித்திருக்கிறார்.
குமாரசாமி ஏற்கெனவே காவிரி பாசன மாண்டியா பகுதியில் பிரிவினைவாத எண்ணத்தையும் காவிரி அரசியலையும் கையாண்டு, செல்வாக்கு பெற்றிருக்கிறார். தமிழகத்தில் திமுக., உள்ளிட்ட காழ்ப்புணர்வு அரசியல்வாதிகளின் பேச்சாலும், அய்யாக்கண்ணு போன்ற விவசாயிகளின் நலனை விற்றுவிட்டு ஆதாயம் தேடுபவர்களின் வழிகாட்டலாலும் அறிவு மழுங்கிவிட்ட தமிழக மக்களுக்கு குமாரசாமியின் குரூரப் பேச்சுகள் ரத்தத்தில் உணர்ச்சியை ஏற்றவில்லை. காரணம், இதே தமிழகத்துக்கு, காவிரி பாயும் திருச்சியிலேயே காலடி வைத்து, மழை பெய்தால் காவிரியில் தண்ணீர் தானாக வரும் என்று சொல்லிவிட்டு, டாடா காட்டிப் பறந்து விட்டார் குமாரசாமி. அப்படி ஒருவர் வந்து சென்றதற்கு இங்கே எந்த வித எதிர்ப்பையும் எவரும் காட்டவில்லை.
ஏற்கெனவே, குமாரசாமி தான் தன்னிச்சையாக இயங்க முடியாது என்றும், தான் காங்கிரஸின் கைப்பாவையான சூழ்நிலைக் கைதி என்றும், எந்த வித முடிவுகளானாலும் காங்கிரஸிடம் கேட்டுவிட்டே செய்ய முடியும் என்றும் கூறியிருக்கிறார். அப்படி இருப்பவரை, அரசின் எந்த தொடர்பிலும் இல்லாத, இன்னும் தேர்தல் அரசியலில் ஈடுபடாத, சொல்லப் போனால் அங்கீகரிக்கப் படாத நிலையில் இருக்கும் ஒரு லெட்டர் பேட் அமைப்பாக வைத்துக் கொண்டிருக்கும் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் போய்ப் பார்ப்பதும், தமிழகம் கர்நாடகம் இருதரப்பு உறவுகள் குறித்துப் பேசுகிறேன் என்பதும், காவிரி பிரச்னையை சுமுகமாக பேசித் தீர்க்க வேண்டும் என்று கூறுவதும், ஆண்டிகள் சேர்ந்து மடம் கட்டிய கதையாகத்தான் இருக்குமே ஒழிய வேறு எந்த ஆரோக்கியமான முடிவும் கிடைக்கப் போவதில்லை.
சொல்லப் போனால், உச்ச நீதிமன்ற வழிகாட்டலில் மத்திய அரசு ஏற்கெனவே காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்து, தமிழக அரசும் புதுவை அரசும் அதற்கான உறுப்பினர்களையும் அறிவித்து, ஆணையத்திற்கான திட்டமிடல் விரைவுபடுத்தப் பட்டுக் கொண்டிருக்கும் போது, கர்நாடகம் கையாளும் குயுக்தி அரசியலாகவே கமலஹாசனை அழைத்து இவ்வாறு பேசுவதையும் பேட்டி கொடுப்பதையும் கருத முடிகிறது.
மத்திய அரசு, இதனால்தான் காவிரி பாயும் நான்கு மாநிலங்களின் அரசுகளைக் கலந்து ஆலோசித்து சிக்கல்கள் ஏற்படா வண்ணம் மேலாண்மை ஆணையத்தை அமைக்க முயன்றது. அப்போதும் முட்டுக்கட்டை போட்டு சிக்கலை எழுப்பியது கர்நாடகமும் கேரளமும்தான். இப்போதும் கர்நாடகம் உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், மத்திய அரசு அமைத்துள்ள காவிரி மேலாண்மை வாரியத்துக்கு ஒத்துழைப்பும் கொடுக்காமல், இந்த ஆணையத்தால் கர்நாடகத்துக்கு சாதகமா பாதகமா என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருப்பதாக வெட்டிக் கதை அளந்து கொண்டிருக்கிறது.
இத்தகைய சூழலில், தமிழகத்துக்கும் தமிழர்களுக்கும் செய்யும் துரோக அரசியலாகத்தான், கமல்ஹாசன் மேற்கொண்டுள்ள பெங்களூரு பயணத்தை நாம் பார்க்க வேண்டியுள்ளது. கட்சி தொடங்கி அரசியலுக்கு வரும் முன்பே கமல்ஹாசன் மேற்கொண்டுள்ள மோசமான மதிகெட்ட பயணம், தமிழகத்தை படுகுழியில் தள்ளுமே அன்றி, எந்த வகையிலும் காப்பாற்றாது என்பது மட்டும் உறுதி!