கோவை – பெங்களூரு இடையே இரண்டு அடுக்கு வசதியுடன் கூடிய உதய் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இன்று துவங்கியது.
இந்த ரயில் சேவையை ரயில்வே இணை அமைச்சர் ராஜன் கோஹைன் தொடங்கி வைத்தார்.
கோவையில் இருந்து வாரத்தில் திங்கள்கிழமை தவிர மற்ற நாள்களில் காலை 5.45 மணிக்கு உதய் எக்ஸ்பிரஸ் ரயில் (22666) புறப்பட்டு, அதேநாளில் நண்பகல் 12.40 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.
இதே போல பெங்களூருவில் இருந்து திங்கள்கிழமை தவிர மற்ற நாள்களில் பிற்பகல் 2.15 மணிக்கு உதய் எக்ஸ்பிரஸ் ரயில் (22665) புறப்பட்டு, அதே நாளில் இரவு 9 மணிக்கு கோவை வந்தடையும்.
இரண்டு அடுக்கு வசதி கொண்ட இந்த ரயில் குளிர்சாதன வசதியுடன் கூடிய பெட்டிகளை கொண்டதாக இந்த ரயில் சேவை இருக்கின்றது.
இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், குப்பம், கிருஷ்ணராஜபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் .
கோவை தொழில் முனைவோர் மற்றும் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கோவை பெங்களூர் இடையே ரயில் சேவை வேண்டும் என்ற கோரிக்கையானது இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
துவக்கவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசும் போது, தமிழகத்தின் ரயில்வே மேம்பாட்டிற்காக சிறப்பு கவனம் மத்திய அரசு செலுத்துகின்றது எனவும் இந்த ஆண்டு 2548 கோடி தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.மேலும் மாநில அரசின் நிதி நெருக்கடியை மனதில் வைத்துக்கொண்டு மாநில அரசு பங்களிப்பு இல்லாமல் அனைத்து தொகையும் மத்திய அரசு செலவு செய்து வருகின்றது எனவும் 538 கீ.மீ தூரம் மின் மயமாக்கப்பட்டுள்ளது எனவுமல மேலும் 300 கீ.மீ தூரம் மின் மயமாக்கப்பட இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.கோவை உட்பட அனைத்து விமான நிலையங்களும் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும் என தெரிவித்த பொன்.ராதாகிருஷ்ணன்,
கோவை ரயில் நிலையத்தில் ரூ.75 லட்சம் மதிப்பில் தண்ணீர் சுத்திகரிப்பு, 6 நடைபாதைகள் நகரும் படிகட்டுகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட பல்வேறு உள் கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது எனவும் தெரிவித்தார்.மேலும் மேட்டுப்பாளையம் பயணிகள் ரயிலை புதுப்பாளையம், வீரப்பாண்டி ஆகிய ரயில் நிலையங்களில் நிறுத்தி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற எம்.பி. செல்வராஜின் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்படும் எனவும், இரு இடங்களிலும் பயணிகள் ரயிலை நிறுத்த நடவடிக்கை எடுக்கும் படி சேலம் கோட்ட மேலாளருக்கு உத்திரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.அந்த நடைபாதைகளை மேம்படுத்த ரூ.15 லட்சம் நிதி ரயில்வே துறை சார்பில் வழங்கப்படும் என தெரிவித்த இணை அமைச்சர், இரு எம்.பி.களின் கோரிக்கையான கோவை ரயில் நிலையத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க வட கோவை ரயில் நிலையம் மேம்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் மேட்டுப்பாளையம் – மதுரை இடையே ரயில் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இணை அமைச்சர் ராஜன் ஹோகைன் தெரிவித்தார்.