அப்பம்
தேவையானவை: பச்சரிசி – ஒரு கப், உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு – தலா 2 டேபிள்ஸ்பூன், வெந்தயம் – ஒரு டீஸ்பூன், துருவிய வெல்லம் – முக்கால் கப், துருவிய தேங்காய் – கால் கப், ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: அரிசி, உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றைக் கழுவி ஒரு மணி நேரம் ஊறவிடவும். ஊறியதும் தேங்காயையும் சேர்த்து நைஸாக அரைக்கவும். பிறகு, வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இந்த மாவைக் கரண்டியால் எடுத்து கொஞ்சம் ஊற்றி, ஒருபக்கம் வெந்ததும், மறுபக்கம் திருப்பிப்போட்டு வெந்தவுடன் எண்ணெயை வடியவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: ஆவணி அவிட்டத்துக்கு இந்த அப்பம் செய்து படைப்பது வழக்கம்.
கடலைப்பருப்பு இனிப்பு சுண்டல்
தேவையானவை: கடலைப்பருப்பு – ஒரு கப், துருவிய தேங்காய் – கால் கப், துருவிய வெல்லம் – அரை கப், ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்.
செய்முறை: கடலைப்பருப்பை குழையாமல் வேகவைத்துக் கொள்ளவும். வெந்த பருப்பில் உள்ள நீரை வடிகட்டிவிட்டு சூடாக இருக்கும்போதே துருவிய வெல்லம், துருவிய தேங்காய், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். கடலைப்பருப்பு இனிப்பு சுண்டல் தயார்.
குறிப்பு: கல்விக்கு அதிபதியான ஹயக்ரீவர் ஜெயந்தி அன்று இந்தச் சுண்டலைச் செய்து ஹயக்ரீவருக்குப் படைத்து, குழந்தைகளுக்கு அதைக் கொடுத்தால் குழந்தைகள் நன்கு படிப்பார்கள்.
வெள்ளிப்பிள்ளையார் கொழுக்கட்டை
தேவையானவை: பச்சரிசி – ஒரு கப், பாசிப்பருப்பு – 6 டேபிள்ஸ்பூன், தேங்காய்த் துருவல் – கால் கப், ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன், துருவிய வெல்லம் – ஒன்றரை கப், நெய் – 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: அரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் வெறும் வாணலியில் வறுத்து ரவை பதத்துக்கு உடைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு 2 கப் நீர்விட்டு ஒரு கொதி விடவும். பின்னர் இறக்கி கல், மணல் போக வடிகட்டி மீண்டும் அடுப்பிலேற்றி தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து உடைத்த ரவையைச் சேர்க்கவும். பாதி வெந்ததும் இறக்கி கைகளில் நெய் தொட்டுக்கொண்டு உருண்டைகளாக உருட்டி இட்லித்தட்டில் வைத்து ஆவியில் 8 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: ஆடி மாதம் வெள்ளிக்கிழமையில் வெள்ளி முளைக்கும் அதிகாலையில் வெள்ளியில் செய்த பிள்ளையாரை வைத்து இந்தக் கொழுக்கட்டையும் செய்து படைப்பது குடும்பத்துக்கு மிகவும் நன்மை தரும்.
ஔவையார் நோன்புக் கொழுக்கட்டை
தேவையானவை: பச்சரிசி – ஒரு கப், நல்லெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து நீரை வடிகட்டி, அரிசியை உலர்த்தி, மிக்ஸியில் அரைக்கவும். 2 கப் நீர்விட்டு மாவை வேகவிடவும். வெந்ததும் கைகளால் பிடித்துக் கொழுக்கட்டைகளாகச் செய்து இட்லித்தட்டில் வாழை இலையில் எண்ணெய் தடவி வைத்து 10 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: ஆடி மாதம் செவ்வாய்க்கிழமை இரவில் இந்தக் கொழுக்கட்டை செய்து படைப்பர். இதை ஆண்கள் பார்க்கவும் கூடாது