தஞ்சாவூர்: தமிழர் வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகனை சிறப்பு விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர வேண்டும் என்று கோரி, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப் பட்டது.
இன்று தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் உடன் சென்று மனு அளிக்கப் பட்டது.
தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் சன் சிவா சார்பில் அளிக்கப் பட்ட மனுவில் குறிப்பிடப் பட்டிருப்பது…
பெறுநர்
உயர்திரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம். தஞ்சாவூர்
பொருள்
தமிழர் வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் அவர்கள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி திரு பொன் மாணிக்கவேல் அவர்கள் மற்றும் நீதிபதிகள் குறித்து அவதூறு பரப்பி வழக்கு நிலுவையில் இருக்கும்போது வழக்கை திசைதிருப்பும் நோக்கத்தில் பேட்டி கொடுத்துள்ளார். அவரை விசாரணை வளையத்திற்குள் படுத்த வேண்டிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு .
வணக்கம். நான் இந்து மக்கள் கட்சி தமிழகம் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் பொறுப்பில் இருந்து இந்து சமுதாயப் பணி செய்து வருகிறேன். நான் இந்து மதத்தை சார்ந்தவன். தஞ்சை பிரகதீஸ்வரர் மீதும், மாமன்னர் ராஜராஜ சோழன் மீதும் மிகுந்த பற்று, பக்தி கொண்டவன்.
தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அவர்கள் கடந்த 02. 10. 2018 அன்று ஒளிபரப்பான மாலைமுரசு தொலைக்காட்சியில் முரசரங்கம் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியதை பார்த்தேன்.
அதில் திரு வேல்முருகன் அவர்களிடம் நெறியாளர் கேட்ட கேள்விக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு பொன்மாணிக்கவேல் அவர்கள் ராஜராஜசோழன் சிலையை மீட்டு வந்ததாக சொல்கிறார்! அவர் மீட்டு வந்ததாக சொல்லக்கூடிய சிலை உண்மையானது அல்ல, இந்த மாலைமுரசு தொலைக்காட்சி வழியாக நான் இந்த உண்மையை அறிவிக்கிறேன்.
பொன்மாணிக்கவேல் அவர்கள் மீட்டுக் கொண்டு வரக்கூடிய சிலைகளைக் எல்லாம் 10 கோடி 20 கோடி என விலை நிர்ணயம் செய்கிறார். அப்படியானால் அந்த பணத்தை கொடுத்துவிட்டு சிலைகளை வைத்து கொள்ளட்டுமே, அந்தப் பணத்தை அரசு கஜானாவுக்கு செலுத்தட்டுமே! ஊடக பரபரப்புக்காக திரு பொன் மாணிக்கவேல் அவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார் .
இதற்காக உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரிடம்தான் இவர் சார்ந்த வழக்கு செல்கிறது. உயர்நீதிமன்ற நீதிபதியும் திரு பொன் மாணிக்கவேல் அவர்களும் சேர்ந்து கொண்டு 50 சிலைகளை மீட்டார் , 89 சிலைகளை மீட்டார், 60 சிலைகளை மீட்டார் , அப்படின்னு சொல்லி பரபரப்புக்காக பத்திரிகைகளை கூப்பிட்டு சொல்கிறார் , செயல்படுகிறார். நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவன். திமுக ஆட்சிக் காலத்தில் குஜராத்திற்கு சென்று இது ராஜராஜ சோழன் சிலை அல்ல என கைவிடப்பட்ட வழக்கு. பத்திரிகை பரபரப்பிற்காக ஐஜி பொன் மாணிக்கவேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்.
அவன் அவன் வீட்டில் அழகுக்காக வைத்திருக்கக்கூடிய சிலைகளையெல்லாம் கூட இவர் சோதனை போடுறாரு. அருங்காட்சியகத்தில் பொருட்காட்சியில் வாங்கிய சிலைகளை கூட சோதனை இடுகிறார் . சமீபத்தில் ஒரு மார்வாடி வீட்டில் சிலைகளை மீட்டதாக இவர் பரபரப்பு உருவாக்கினார். அதற்கெல்லாம் ரசீது இருப்பதாக மார்வாடி சொல்கிறார்…
இதுபோன்ற அவருடைய முழு பேட்டி வெளியாகியது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் உடைய வழிகாட்டுதலின் படி ஐஜி பொன்மாணிக்கவேல் அவர்கள் செயல்பட்டுக் கொண்டு வருகிறார். புராதானமான தொன்மை மிக்க சிலைகளை மீட்க கூடிய நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்.
இந்தச் சூழலில் நீதிமன்றத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்ற பொழுது வழக்கை திசைதிருப்பும் நோக்கத்தோடும், நீதிமன்றத்தின் மீதும் , நீதிபதி மீதும் அவதூறு பரப்பும் நோக்கத்தோடு தமிழர் வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் அவர்கள் பேசி இருப்பது பெருத்த சந்தேகத்தை உருவாக்குகிறது.
அதுமட்டுமல்லாது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு உயர் அதிகாரிகள் மீட்டு வந்த ராஜராஜ சோழன் சிலை உண்மைதானா அல்லது பொய்யானதா என்கின்ற சோதனைக்கு கொடுப்பதற்கு முன்பு தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அவர்களை விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் .
இவருக்கும் சிலை கடத்தல் குழுவினருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் இந்த பேட்டி மூலம் அறிய வருகிறோம். ஆகவே மதிப்பிற்குரிய காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தனிக் கவனம் செலுத்தி வேல்முருகன் அவர்களை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து விசாரித்த வேண்டுகிறோம். அப்படி விசாரித்தால்பல உண்மைகள் வெளி வரும்.
இதற்கு சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தமிழகத்தில் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் – என்று குறிப்பிடப் பட்டிருந்தது!