கூட்டணி விவகாரத்தில் அவசர கைகுலுக்கலில் கை அழுக்காகி விடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், எங்களது கைகளை சுத்தமாக வைத்திருக்கிறோம் என்றும் கூட்டணி விவகாரத்தில் யாருடன் கை குலுக்குகிறோம் என்பது குறித்தும், கையில் கறை படிந்து விடக் கூடாது என்பதிலும் கவனமாக உள்ளதாகக் கூறினார்.
முன்னதாக, தனித்துப் போட்டி.யிடப் போவதாகக் கூறி, அனைவருக்கும் புரியும் அருமையான ஐடியாவை வெளிப்படுத்திய கமல், தனித்துப் போட்டி ஏன் என விளக்கியிருந்தார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் புதுவையில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாராக இருக்கிறோம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். இந்த யோசனை வந்த விதத்தையும் அவர் விளக்கிக் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்துக்கு ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால் தமிழகத்தில் கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்துள்ளது. வழக்கம்போல அ.தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், தி.மு.க. தலைமையில் மற்றொரு அணியும் உருவாகி உள்ளது.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி எந்த அணியில் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு கடந்த சில தினங்களாக நிலவியது. அ.தி.மு.க-பா.ஜனதா கூட்டணியில் சேர மாட்டேன் என்று திட்டவட்டமாக அறிவித்த கமல்ஹாசன் காங்கிரஸ் பக்கம் சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
தில்லி சென்று ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் பேசியதால் காங்கிரஸ் அணியில் நிச்சயமாக அவர் இருப்பார் என்று கருதப்பட்டது. ஆனால் திடீர் திருப்பமாக அவர் எந்த அணியிலும் சேராமல் தனித்து போட்டியிட முடிவு செய்துவிட்டார்.
காங்கிரஸுடன் கூட நெருக்கமாக இல்லை என்றும், திமுக., கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெறப் போவதால், அதில் இணைய தமக்கு விருப்பம் இல்லை என்றும் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் கமல்ஹாசன்.
இந்நிலையில், எவர் கையைக் குலுக்கினாலும் கையில் கறை படிந்துள்ளது என்று கமல்ஹாசன் கூறியுள்ளது இப்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊழலுக்கு எதிராகத் தாம் இயங்கப் போவதாக கூறிவரும் கமல்ஹாசன், தாம் சந்தித்தவர்கள் கறை படிந்தவர்கள், ஊழல் கறை படிந்தவர்கள் என சொல்லாமல் சொல்லியிருக்கிறார். திமுக., காங்கிரஸ் கட்சிகள் எல்லாம் ஊழல் கறை படிந்தவர்கள்; அதனாலேயே தமக்கு கைகொடுக்க விருப்பமில்லாமல் தனித்து நிற்கிறோம் என்று அவர் தமது கட்சியினருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.