வரும் ஏப்.18ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவுக்கான வேட்பு மனு தாக்கலை அதிமுக.,வினர் இன்று துவக்கியுள்ளனர்.
இதனிடையே இரு தினங்களுக்கு முன்னர் நிறைந்த பௌர்ணமி நாளில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது பிரசாரத்தைத் தொடங்கி விட்டார். அதே நேரம், இன்று தனது ராசியான வெற்றி விநாயகரைக் கும்பிட்டு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.
கருமந்துறை: மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஏற்காடு கருமந்துறை மலை கிராமத்திலிருந்து தொடங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி !
பிரசாரத்தின் போது கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீஷை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர் பிரதமர் மோடி சிறப்பாக ஆட்சி செய்வதால்தான் அதிமுக ஆதரிக்கிறது! நாட்டை பாதுகாக்க பிரதமர் மோடியால் தான் முடியும்! நாட்டில் நிலையான ஆட்சி இருந்தால் தான் மக்கள் நிம்மதியாக வாழ முடியும்!
பாகிஸ்தானில் சிக்கிய விமானப்படை வீரர் அபிநந்தனை மீட்ட பெருமை பிரதமர் மோடியையே சேரும்!
எதிரிகளை தூள் தூளாக்கும் தைரியம் பிரதமர் மோடியிடம் தான் உள்ளது. எனவே நாடு பாதுகாப்பாக இருக்க மீண்டும் பிரதமராக மோடியே வர வேண்டும். ஆகவே பாரதிய ஜனதாவுடன் சேர்ந்து அதிமுக அமைத்துள்ள கூட்டணி வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.
பாரதிய ஜனதா – அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால்தான் தமிழகத்திற்கு தேவையான திட்டங்கள், நிதி எளிதாக கிடைக்கும் என்று பேசினார்.
தொடர்ந்து எல்.கே.சுதீஷிற்கும், சேலம் அதிமுக வேட்பாளர் சரவணனுக்கும் வாக்கு சேகரித்த முதல்வர் எடப்பாடி, தனது பிரசாரத்தை தொடங்கும் முன் தனக்கு ராசியான வெற்றி விநாயகர் ஆலயத்தில் வழிபாடு செய்தார்.
முதல்வருடன் அமைச்சர் சி.வி.சண்முகம், வேட்பாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோரும் வெற்றி விநாயகரை தரிசித்தனர். பின்னர் கருமந்துறை கீழ்வீதியில் துண்டு பிரசுரங்களை வழங்கினார் முதல்வர்!
கருமந்துறை, புத்தரக் கவுண்டபாளையம், வாழப்பாடி, , அயோத்தியாபட்டணம் உள்ளிட்ட இடங்களில் முதல்வர் பழனிசாமி வாக்கு சேகரித்தும், வேட்பாளரை ஆதரித்தும் பிரச்சாரம் செய்தார்.