உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, தர்பார் படம், ஆந்திரா அரசியல், மோடி மீண்டும் பிரதமர் ஆவது குறித்து துல்லியமாக கணித்தவர் சேலத்தை சேர்ந்த ஜோதிடர் பாலாஜி ஹாசன்.
அவர் ரஜினிக்கு கண்டம் இருப்பதாக கூறியதாக ரஜினி ரசிகர்கள் கோபம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் பாலாஜியை சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்தனர். இது குறித்து அறிந்த பாலாஜி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது,
நான் நிஜமாக சமூக ட்ரெண்டிங் காரணமான தான் என்னைக் கேலி செய்கிறார்கள் என்று உண்மையில் இந்த நிமிடம் வரை நினைத்திருந்தேன். சற்றுமுன் சேலம் மாவட்டத்தை சேர்ந்த ரஜினி ரசிகரும், எனது அண்ணனும் நெருங்கிய தொழிலதிபருமான இந்த நேரத்தில் பெயர் சொல்ல விரும்பவில்லை. அவர் கூறிய பிறகுதான் தெரிகிறது ரஜினி ரசிகர்கள் கோபமாக இருப்பதற்கு காரணம் வேறு என்று.
உண்மையாக அவருடைய உடல் நலத்தில் ஒரு சிறு பின்னடைவு ஏற்பட்டு ஒரு சில நாட்கள் அவதிப்படுவார். அதற்கு பிறகு ஓய்வெடுப்பார். அப்புறம்தான் மீண்டும் அரசியலுக்கு வருவார் என்றே கூறினேனே தவிர வேறு அவருக்கு ஆபத்து, கண்டம் என்று எந்த அர்த்தத்திலும் சொல்லவில்லை. உண்மையிலேயே அவரது ஜாதகத்தில் அப்படி எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது. இப்பொழுது தான் புரிகிறது ஏன் இந்த குழப்ப நிலை என்று.
நிஜமாக அவருக்கு ஆயுள் கண்டம் என்பது இல்லை இதுதான் உண்மை. மேலும் அவர் அரசியலில் தனியாக நின்றால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் சொன்னேன். தொலைக்காட்சிப் பேட்டி ரெக்கார்ட் செய்து எப்படி அவர்கள் போடுவார்கள் என்று உங்களுக்கு தெரியும். நிஜமாக ரேடியோவிலும், தொலைக்காட்சியிலும் நான் கொடுத்தது ஒரு குறிப்பிட்ட காலம் அவருடைய உடல்நிலை பாதிக்கும் அதாவது ஒரு பத்து நாள் 20 நாள் அவர் அவதிப்படுவார். அதற்கு பிறகுதான் அவருடைய அரசியல் பிரவேசம் வேகமாக இருக்கும் என்று கூறினேன். அதை மக்கள் தவறாக புரிந்துகொண்டீர்கள்.
நான் சொன்னது தெளிவாக புரிந்து கொள்வதற்காக தான் இந்த பதிவே தவிர வேறொன்றும் கிடையாது. இதை புரிந்து கொள்ளுங்கள் இதைப் புரிந்து கொள்ளாமல் மீண்டும் திட்டினாலும் அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. மற்றப்படி எனக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை.
என் தந்தை சேலம் மாவட்டத்தில் ரஜினி ரசிகர் மன்றத்தில் எவ்வளவு பெரியஉறுப்பினர் என்று அவரை தெரிந்தவர்களுக்குத் தெரியும்.
எங்கள் கடையே இதற்கு முன்னாடி அருணாச்சலம் மளிகையாக தான் இருந்தது. மேலும் டிவிட்டர் அக்கௌன்ட் எனக்கு இல்லை அதில் யாரோ ஒருவர் எனது புகைப்படத்தை வைத்து அதில் யார் அடுத்த முதலவர் என்று ஒரு வாக்கெடுப்பு ( Twitter Poll ) செய்து அதில் திரு ரஜினி அவர்களை கடைசி இடத்திற்கு வரும்படி செய்து உள்ளார். அது நான் இல்லை தாராளமாக நீங்க அவர் ( Fake Account ) மீது வழக்கு தொடுக்கலாம்.
தவறாக புரிந்து கொண்ட அவரது ரசிகர்களுக்கும், இந்த குழப்பத்திற்கு ஒரு வகையில் நானும் காரணம் என்பதால் மனமார வருத்தமும் மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் பாலாஜி.