கோவை, ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (43) என்பவர் கருமத்தம்பட்டி, அன்னூர் சாலையில் ஸ்பின்னிங் மில் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இவர் சில மாதங்களாகவே விரக்தியுடன் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் இவர் கடந்த 28ஆம் தேதி ஸ்பின்னிங் மில்லில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கார் ரேஸில் அதிக ஆர்வம் கொண்ட விஜயகுமார் முதலில் கார் ரேஸில் கலந்து கொண்டார். பின்னர் ரேஸ் காரை ட்யூன் செய்யும் வேலையை செய்ய ஆரம்பித்தார். தொடர்ந்து, கோவையில் ரேஸ் கார் ட்யூன் செய்யும் வொர்க் ஷாப் தொடங்கினார். அவர் ட்யூன் செய்த ரேஸ் கார்கள், இன்டர்நேஷனல் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.
ஒரு கட்டத்துக்கு மேல் அது கை கொடுக்கவில்லை. ரேஸ் என்று நிறைய பணம் செலவு செய்துவிட்டார். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலைக்கு முயற்சி செய்தார். ஆனால் அவரை காப்பாற்றிவிட்டனர்.
பிறகு ஒரு மில்லை போக்கியத்துக்கு எடுத்து நடத்தி வந்தார். அதிலும் நஷ்டம் ஏற்பட்டதால் விரக்தியின் உச்சத்திற்கே சென்றார். இந்நிலையில் அவருடைய மகனின் பிறந்தநாளில் தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.