முஸ்லீம்கள் படுகொலை செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும்,
ஹிந்துக்களின் இலக்காகி வதைப்பட்டுக் கொண்டிருக்கும் முஸ்லீம் சமுதாயத்தினரே தன்னிடம் வந்து தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகச் சொல்ல வேண்டும்,
இரு சமுதாயத்தினரும் முன்பிருந்தது போல ஒருவருடைய பண்டிகை கொண்டாட்டங்களில் மற்றவர் கலந்துக் கொள்ள வேண்டும் என்பதே காந்தியின் எதிர்பார்ப்பாக இருந்தது.
கொந்தளித்து போயிருந்த ஹிந்துக்களிடையே மனமாற்றத்தை உருவாக்க பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
டெல்லி வாழ் ஹிந்துக்களிடையே இந்த முயற்சி சற்றே பலனளிக்க தொடங்கியது.
ஆனால்….
எண்ணிக்கையில் டெல்லியின் குடிமக்களுக்கு இணையாக இப்போது ஆகி போயிருந்த பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக வந்து சேர்ந்து விட்ட ஹிந்துக்கள் இந்த முயற்சியை புறம் தள்ளினர்.
உள்ளூர் தலைவர்கள்..அவர்களுக்கு யாரோ..அவர்கள் பேச்சை கேட்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை..
இவர்களுக்கு என்ன தெரியும் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி…
பாகிஸ்தானிலும்,இந்தியவிற்குள் வரும் வழி நெடுகிலும் முஸ்லீம் கயவர்களால் தாங்கள் நேரிடையாக பாதிக்கப்பட்டதே அவர்கள் மனதில் இருந்தது.
இந்த முஸ்லீம் வெறியர்களுக்காக காந்தி உண்ணாவிரதம் மேற்கொண்டதும் அதன் மூலம் மரணத்தை காட்டி பயமுறுத்துவதும் அவர்களுக்கு கோபத்தையே ஏற்படுத்தியது.
அது தவிர இப்போது பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாய் கொடுக்க ஒப்புக் கொண்டது தேசத்தை நாசப்படுத்தும் செயலாக அவர்களுக்கு தோன்றியது.
தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்க அவர்கள் பிர்லா ஹவுஸ் நோக்கி கோஷங்களை எழுப்பிய வண்ணம் சென்றனர்.
பிர்லா ஹவுஸின் நுழைவாயிலில் பாதுகாப்பு காவலர்களால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
பாதுகாப்பு காவலர்களை அவர்கள்,காதுகளால் கேட்க முடியாத ஆபாசமான வசைமொழிகளால் திட்டித் தீர்த்தனர்.
சாலையிலேயே அமர்ந்து விட்டனர்.
’ MARTHA HAI TO MARNE DO ! ‘ ( அவர் சாக விரும்பினால் சாகட்டும் ) என கோஷம் எழுப்பிய வண்ணம் இருந்தனர்.
‘ KHOONKA BADLA KHOONSE LENGE ‘ ( எங்களுக்கு இரத்தத்திற்கு பதிலாக இரத்தம் வேண்டும் ) என்பதாகவும் அவர்களின் கோஷம் அமைந்தது.
பிர்லா ஹவுஸின் கண்ணாடி ஜன்னல்களை நோக்கி கற்கள் எறியப்பட்டன.
அவர்களுடைய ஆர்ப்பாட்டம் கட்டுக்கடங்காமல் போகும் போதெல்லாம் போலீசார் தடியடி பிரயோகத்தில் ஈடுபட்டு அவர்களை கலைத்தனர்.
ஆனால்…
சில நிமிடங்களுக்கெல்லாம் அவர்கள் மீண்டும் மீண்டும் திரண்டு வந்து காந்திக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
எதேனும் ஒரு மந்திரியின் கார் பிர்லா ஹவுஸின் உள்ளேயோ வெளியோ செல்லும் போது அவர்களுடைய கோஷங்கள் காதை செவிடாக்கும் உச்சத்தை தொட்டது.
தங்கள் காதுகளில் எதுவுமே விழாதது போல மந்திரிகள் சென்றனர்.
ஆனால் நேரு வந்த போது அவர் தன் காரை நிறுத்தி..
‘’ காந்தி சாகட்டும் என்று கூறுபவர்கள் முன்னே வரட்டும்.என் கண் முன்னே அந்த வார்த்தைகளை மீண்டும் கூறட்டும்.காந்தியை கொல்லும் முன் அவர்கள் என்னை முதலில் கொல்ல வேண்டும் ‘’என்று கோபத்துடன் கூறினார்.
உடனே கூட்டம் அமைதியானது.
ஆனால் அந்த அமைதி நேரு கண் பார்வையிலிருந்து மறையும் வரைதான்.
மீண்டும் மீண்டும் கோஷங்கள் எழுப்பட்டன.
படுக்கையில் படுத்து உறங்க முயற்சித்துக் கொண்டிருந்த காந்தியை அந்த ALBUQUERQUE சாலை கோஷங்கள் மீண்டும் மீண்டும் எழுப்பிக் கொண்டிருந்தன.
‘ MARTA HAI TO MARNE DO ! KHOONKA BADLA KHOONSE LENGE ! ‘
இந்த முறை தன் உண்ணாவிரத முயற்சி வெற்றி பெறுமா எனும் சந்தேகம் காந்திக்கு எழுந்திருந்தால் ஆச்சரியமில்லை !
( தொடரும் )
- எழுத்து: யா.சு.கண்ணன்