தெலுங்கில் – பி எஸ் சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்
பூர்வாஹ்ன அபராஹ்ன சாயா நியாய: – முற்பகல் நிழல், பிற்பகல் நிழல்.
பூர்வாஹ்னம் – சூரியோதயத்திலிருந்து ப௧ல் 12 மணி வரை.
அபராஹ்னம் – பகல் 12 மணியிலிருந்து மாலை வரை
சாயா – நிழல்
‘பூர்வாஹ்ன அபராஹ்ன சாயா நியாய:’ என்பதைக் கொண்டு நட்பின் இயல்புகள் சிலவற்றைச் சென்ற கட்டுரையில் தெரிந்து கொண்டோம்.
சிலரிடையே ஏற்படும் நட்பு உலகப் பிரசித்தமாக ஔவையார் அதியமான் சிநேகத்தைப் போல ஆதரிசமாக நீடிப்பதைப் பார்க்கிறோம். சிலரிடையே ஏற்படும் நட்பு ஆர்ப்பாட்டமாக தலைப்புச் செய்திகளில் ஏறும். அதே வேகத்தோடு சீட்டுக்கட்டு மேடை போல விழுந்து விடும். இதற்கு அண்மை உதாரணம் ‘இன்டி கூட்டணி’. சுயநலத்தோடு தொடங்கிய இந்தக் ‘கூட்டு’ நம் கண் முன்னால், நாம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே சரிந்து விட்டது. உயர்ந்த லட்சியம் ஒன்று இல்லாமல் போனதே இதற்குக் காரணம்.
சிநேகம் எந்த நோக்கத்த்தோடு ஆரம்பமாகிறது என்பதில் முக்கியத்துவம் உள்ளது. அது இரு மனிதர்களிடையே இருக்கலாம். அல்லது இரு கட்சிக்களுக்கு இடையே, இரு தேசங்களுக்கு இடையே இருக்கலாம். சுயநலமும் வக்கிர புத்தியும் இருந்தால் அந்த நட்பு நிலைக்காது.
நட்பை எவ்வாறு நிலைநிறுத்திக் கொள்வது என்று கூறும் சுலோகம் –
இச்சேத்யேன ஸ்திராம் மைத்ரீம்
த்ரீணி தத்ர ந காரயேத்
வாக்வாதம் அர்த்த சம்பந்தம்
தத்பத்னீ பரிபாஷனம்
பொருள் – நண்பர்களைச் சம்பாதிப்பது ஒரு கலை. அந்த நட்பை நிலைநிறுத்திக் கொள்வது சற்று சிரமம். இரு சினேகிதர்களின் இடையே நட்பு கெடாமல் இருக்க வேண்டுமென்றால் மூன்று விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். ஒன்று – வாக்குவாதம் – அபிப்பிராயங்கள் வேறுபட்ட போது நண்பர்களிடையே வாக்குவாதம் நிகழக் கூடாது. அது சிறிது சிறிதாகப் பெரிதாகி முற்பகல் நிழல் போல குறைந்து கொண்டே வந்து நட்பையே கெடுத்து விடும். இரண்டாவது – பணம் கொடுக்கல் வாங்கல். மூன்றாவது – பெண்கள். வரலாற்றில் நடந்த பல போர்களுக்குக் காரணம் இவையே என்பதை அனைவரும் அறிவர்.
நட்பு மெதுவாக வளருமா? வளர்ந்த நட்பு குறையுமா? என்பது இந்த நியாயத்தில் உள்ள முக்கியமான அம்சம். மத்தியான வெயில் போல ஆரம்பமாகி எல்லையற்றதாக மாறிய நட்புக்கு எடுத்தக்காட்டாக விவேகானந்தரும் (நரேந்திரர்), சந்திரகுப்தரும் தம் குருமார்களோடு ஏற்படுத்திக் கொண்ட நட்பைக் கூறலாம். இந்த இரண்டையும் ‘அபராஹ்ன சாயா’ நியாயத்திற்கு எடுத்துக்காட்டாக ஆய்வாளர்கள் வர்ணிக்கின்றனர்.
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சருக்கும் நரேந்திரருக்கும் இடையே நிலவிய குரு சீடர் உறவை வர்ணிப்பது யாருக்கும் சாத்தியமில்லை. தன்னிடம் வந்த நரேந்திரரை ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் மிகக் கடுமையாகச் சோதித்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஒரு பைத்தியம் என்று முதலில் நரேந்திரர் நினைத்தார். இவர்களின் அறிமுகம் மத்தியான நிழலைப் போல உருவானது. ஒவ்வொரு நாளும் வளர்ந்தது.
“ஐயனே, தாங்கள் இறைவனைப் பார்த்தீர்களா?” என்று நரேந்திரர் வினா எழுப்பினார்
“ஆமாம் உன்னைப் பார்ப்பது போலவே பகவானையும் பார்க்கிறேன். உன்னோடு உரையாடுவது போலவே பகவானுடனும் பேசுகிறேன்” என்று நரேந்திரருக்கு வியப்பூட்டும் பதிலை அளித்தார் குருதேவர். அந்த பதில் நரேந்திரனின் இதயப் பலகையில் நிரந்தரமான முத்திரையைப் பதித்தது. பல முறை சோதித்தபிறகு நரேந்திரர், ஸ்ரீ ராமகிருஷ்ணரை குருவாக ஏற்கத் தொடங்கினார்.
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் மீதி சீடர்களைப் போல நரேந்திரரைத் தனக்கு சிச்ருஷை செய்ய அனுமதிக்கவில்லை. நரேந்திரரை ஒரு தனித்துவம் வாய்ந்த மனிதராகக் கருதினார். சோதனைகளின் ஒரு பகுதியாக தன் தரிசனத்திற்காக வந்த நரேந்திரரோடு பலமுறை பேசாமல் பாராமுகமாக இருந்திருக்கிறார்.
“மகனே, நரேந்திரா, வாய் திறந்து உன்னோடு ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்த போதும் நீ இங்கு தக்ஷிணேஸ்வரத்திற்கு வந்து கொண்டே இருக்கிறாய். என்ன காரணம்?” என்று ஒரு முறை ஸ்ரீ ராமகிருஷ்ணர் கேட்டார்.
அதற்கு, “ஐயனே, உங்கள் பேச்சைக் கேட்பதற்காக நான் இங்கு வரவில்லை. உங்கள் மீது உள்ள ஆழமான பக்தியால் உங்களை தரிசிப்பதற்கு இங்கு வருகிறேன்” என்று நரேந்திரர் அன்பு பொங்க பதிலளித்தார்.
இன்னொருமுறை, “நான் கடினமான தவம் செய்து சாதித்த தெய்வீக சக்திகளை உனக்குத் தாரை வார்க்கிறேன்” என்று கூறி நரந்திரனுக்குப் பெரிய பரீட்சை வைத்தார். அதற்கு நரேந்திரர் சம்மதிக்காமல், “எனக்கு வேண்டாம்” என்று தீர்மானமாகக் கூறிவிட்டதால் ஸ்ரீ ராமகிருஷ்ணர் மட்டற்ற ஆனந்தம் அடைந்தார்.
பொருளாதாரச் சிக்கல்கள், தாயாதிகள் தொடுத்த வழக்குகள் போன்றவற்றால் மனம் கலங்கிய நரேந்திரருக்குக் கருணை நிறைந்த ஸ்ரீ ராமகிருஷ்ணர், “உன் குடும்பத்திற்கு உணவுக்கும் உடைக்கும் குறைவு இருக்காது” என்று ஆசியளித்தார். அவரை குருவாக ஏற்கும் முன் நரேந்திரர் பல வினாக்களை எழுப்பித் தன் சந்தேகங்களைத் தீர்த்துக் கொண்டார்.
இவ்வாறு இவர்கள் இருவரின் உறவு மத்தியான நிழலைப் போல வளர்ந்து உயர்ந்தது. ஒருவருக்காக ஒருவர் வாழ்ந்தார்கள். குருதேவரின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு விவேகானந்தராக மாறினார் நரேந்திரர். நம் தேச வரலாற்றையே மாற்றியமைத்த இரட்டையர் இவர்கள்.
அதே போல் மற்றுமொரு ஆதரிசமான குரு சிஷ்யர், சாணக்கியரும் சந்திரகுப்தரும். பிரம்மமுகூர்த்த நேரத்தில் நீராடச் சென்ற விஷ்ணுகுப்தருக்கு ஒரு நாள் நடைபாதையில் ஒரு பெரிய முள் குத்தி அதிக ரத்தம் வழிந்தது. மிகுந்த கோபத்திற்கு ஆளான விஷ்ணுகுப்தர், அந்த முட்செடியை வேரோடு பிடுங்கி ஒரு குழியில் போட்டு மூடினார்.
அதை கவனித்த சிறுவன் சந்திரகுப்தன் வியப்போடு, “ஆச்சார்யரே, நீங்கள் செய்த செயல் எனக்கு விளங்கவில்லை. உங்களுக்கு ஒரு சின்ன முள் குத்தியது. அதற்காக அங்கிருந்த முள் செடியையே நாசம் செய்துவிட்டீர்களே” என்று கேட்டான்.
தேசத்தில் முட்கள் இல்லாமல் செய்ய வேண்டும் என்று சங்கல்பம் எடுத்த சாணக்கியரின் பதில் சிறுவனிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது. அப்போதிலிருந்து அவருக்கு சேவை செய்து வந்தான். சந்திரகுப்தனின் தாய் முராதேவியின் அனுமதியோடு அவனுக்கு கல்வியறிவு புகட்டி சிறந்தவனாகச் செதுக்கி தனனந்தனைப் போன்ற கர்வம் பிடித்தவனுக்கு புத்தி புகட்ட சந்திரகுப்தனை பேரரசனாக்கும் வரை சாணக்கியர் கடுந்தவம் புரிந்தார். இவர்கள் இருவரின் நட்பாலும் சிந்தனையாலும் பாரத தேசம் அகண்ட பாரதமாக வளர்ச்சியடைந்தது. மேலை நாட்டோர் நம் புண்ணிய பாரதத்தை வக்கிரமாகப் பார்க்கும் செயலை அதன்பிறகு என்றுமே செய்யத் துணியவில்லை. இந்த குரு, சீடர் உறவின் சக்தியானது அதன் பின்னர் வந்த மூன்று நூற்றாண்டுகளுக்கு பாரத தேசத்தின் மீது ஆதிக்கம் செலுத்தியது.
பிரதமர் நேருவின் காலத்தில் தேசத்துரோக இடது சாரிகள் காங்கிரஸ் கட்சியோடு செய்த சுயலத்தோடு கூடிய நட்பால் தேசத்தின் முன்னேற்றத்திற்கு ஊறு விளைந்து இந்தியா ஏழ்மையில் மூழ்கியது. திட்டங்கள் தோல்வியுற்றன. இந்திரா காந்தியின் காலத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தீய சிநேகம் எமெர்ஜென்சிக்கு வழி தீட்டி, தேசத்திற்குத் தீராத ஆபத்தை விளைவித்தது. செக்யூலரிசம், சோஷலிசம் என்ற இடதுசாரி கொள்கைகள் அரசியல் சாசனத்தில் புகுத்தப்பட்டன. அதன் தீய பரிணாமங்களை நாடு தற்போது எதிர்கொள்கிறது.
இடதுசாரியோடு முஸ்லீம் சமுதாயம் செய்த சிநேகம் அயோக்கிய சிநேகமாக குறிப்பிடத்தக்கது. தேசத்தின் மீதும் தெய்வத்தின் மீதும் பக்தியில்லாத கூட்டதோடு நட்பு செய்த காங்கிரசைப் போலவே முஸ்லீம் சமுகம் கூட மிகத் தீவிரமான நட்ஷ்டதிற்குள்ளானது. ராம ஜன்ம பூமியை ஹிந்துக்களுக்கு ஒப்படைக்க வேண்டுமென்று எண்ணிய அயோத்தி முஸ்லீம் தலைமையோடு இடது சாரி, கபட நட்பு செய்து, ‘அது கோவிலே அல்ல என்று கூறுவதற்கு எங்களிடம் பல ஆதாரங்கள் உள்ளன’ என்று கூறி அவர்களைப் போராடும்படி உசுப்பேற்றி விட்டது. இறுதியில் சுப்ரீம் கோர்ட் கையை விரித்து விட்டது.
“ராமஜென்ம பூமியை ஹிந்துக்களிடம் ஒப்படைத்திருந்தால் சமரசம் மலர்ந்திருக்கும். கம்யூனிஸ்ட்களை நம்பி மோசம் போனோம்” என்று தேச முன்னேற்றத்தில் நாட்டமுள்ள முஸ்லீம் தலைவர்கள் பச்சாதாபம் அடைந்தது தற்கால சரித்திரம்.
‘பூர்வாஹ்ன அபராஹ்ன சாயா’ நியாயத்தின் மூலம் அறிய வேண்டிய நீதி என்னவென்றால், நட்பு சுயநலமின்றி தொடங்கப் பட வேண்டும் நிதானமாக வளர வேண்டும். எல்லையற்று விரிவடைய வேண்டும். உலகிற்கு நாகரிகத்தை கற்றுத் தந்த பாரத தேசத்தை விஸ்வகுரு, விஸ்வ மித்திரன் என்று ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உலகு கௌரவித்து வருகிறது.