
தமிழகம் இதுவரை கண்ட ஆளுநர்களில், மிகச் சிறந்த ஆளுநர் ஆர்.என்.ரவி. அவர் தற்போது பதவிக்காலம் முடிவு பெறுவதை ஒட்டி, தமிழகத்திலிருந்து மாற்றப்பட்டு அவரது சேவை மேலும் அதிகம் தேவைப்படும் மேற்கு வங்கத்திற்கு ஆளுநராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
தைரியமான ஓர் ஆளுநராக தன் பதவிக் காலம் முழுமைக்கும் இருந்தவர். ஆளுநர் என்ற பதவிக்கு மிகச்சிறந்த பொருத்தமானவராக, அந்தப் பதவியின் கௌரவத்தை பொறுப்பை சரியான வகையில் வெளிப்படுத்திய மிகச்சிறந்த நபராகவே தமிழர்களாகிய நாம் அவரைப் பார்க்க முடிந்தது. ராஜ் பவன் என இருந்ததை மக்கள் பவன் என மாற்றி, எளியோரும் அந்த ஆளுநர் மாளிகையில் அடி எடுத்து வைத்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தங்களை ஒரு கௌரவம் நிறைந்தவர்களாக மனதில் எண்ண வைத்த செயல்பாடு ரவீந்திர நாராயணன் ரவிக்கு உரியது. அந்த வகையில் மக்கள் உள்ளங்களை வென்ற மகத்தான நிர்வாகி என்று உறுதியாகச் சொல்லலாம்.
தம் பதவிக் காலத்தில் ஆர். என். ரவி செய்த செயல்கள் மகத்தானவை. அதுவும் அயோக்கியர்கள் முழுக்க நிறைந்த தமிழக அரசியல் களத்தில் தனி ஒருவராக நின்று தாக்குப் பிடித்த தன்மைக்காகவே அவரைப் பாராட்ட வேண்டும். இவருக்கு முன் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித்தை, வயதான காலத்திலும் இந்த அயோக்கியர்கள் என்ன பாடு படுத்தினார்கள் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். மத்திய அரசு திட்ட நிதியில் கட்டப்பட்ட கழிவறைகளின் உறுதித் தன்மையை சோதனையிடச் சென்றவரை, ஒரு பெண் குளித்துக் கொண்டிருக்கும் போது எட்டிப் பார்த்தார் என்ற ரீதியில் மிகக் கேவலமான முறையில் தங்களது ஊடகங்களை வைத்து பிரச்சாரம் செய்த அயோக்கியர்கள் நிறைந்த களம் இது. இந்தக் களத்தில் ஆளுநராக ஆர் என் ரவி வந்தபோது, இவர் எப்படி சமாளிக்க போகிறார் என்ற சந்தேகம் நமக்கும் எழவே செய்தது.

ஆனால் பொறுப்பாக, பொறுமையாக, நிகழ்வுகளைக் கையாண்டதில் ஆர் என் ரவி மக்கள் உள்ளங்களை வெகுவாகவே வென்றார்.
தமிழக அரசின் கண்களில் விரலை விட்டு ஆட்டியதில் ஆளுநரின் பதவி என்பது வெறும் ரப்பர் ஸ்டாம்ப் அல்ல என்பது வெளித் தெரிந்தது. தமிழக அரசியல் சக்திகள், தங்கள் ஊடகங்களை வைத்துக்கொண்டு ஒன்றிய அரசு என பிரச்சாரம் செய்து இந்திய தேசியத்தில் இருந்து தனித்து செயல்பட்டு அச்சுறுத்திய போதெல்லாம், அதற்கு சரியான பதிலடி தந்தவர். பிரிவினைவாதிகளுக்கு தமிழக அரசு துணைபோவது போலச் செயல்பட்ட போதெல்லாம், அதை ஓர் இந்தியனாக எதிர்கொண்டு சரியான திசைக்கு திருப்ப முயன்றவர்.
தமிழக அரசியல் களத்தில் அவமானப்படுத்தப்பட்ட போதும் அவற்றை தாங்கிக் கொண்டு, பொறுமையாக விஷயங்களை அணுகினார்.
தமிழ் தமிழ் என்று மொழியின் மீது ஏதோ பற்று கொண்டவர்களைப் போல அரசியல் அலட்டல்களையும் ஆர்ப்பாட்டங்களையும் செய்து வந்த ஆளும் தரப்பின் மத்தியில், உண்மையாகவே தமிழ் மொழியின் மீது ஈடுபாடு கொண்டு ஆளுநர் மாளிகையின் கதவுகளை இலக்கியவாதிகளுக்கு திறந்து விட்டு தமிழ் வளர்ச்சியில் தன் பங்கை சரியாக செலுத்தினார். தமிழ் எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் பலரை ஆளுநர் மாளிகைக்கு வரவழைத்து கௌரவித்தார். தமிழில் செம்மையாகப் பல புத்தக முயற்சிகளை ஆதரித்தார்.

முக்கியமாக இதற்கு முன்பு இருந்த ஆளுநர் புரோகித்தைப் போல் பல்கலை., துணை வேந்தர் நியமனங்களில் ஊழலற்ற நடைமுறையை கொண்டு வர பெரிதும் துணை நின்றார்.
இந்த விவகாரத்தில் தமிழக ஆட்சியாளர்கள் எத்தனையோ குட்டிக்கரணம் அடித்தும் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டி உலுக்கிய போதும், நீதியை தங்களுக்கு சாதகமாக வளைத்த போதும் உறுதியாக நின்று உண்மை நின்றிட பாடுபட்டார் ஆர்.என்.ரவி.
சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பி வைக்கும் பரிந்துரையை ஆளுநர் எவ்வளவு காலத்துக்கு நிறுத்தி வைக்கலாம் என்பதை இந்திய அளவுக்கான சட்டப் பிரச்சினை ஆக்கி குடியரசுத் தலைவர் – உச்ச நீதிமன்றம் என விளக்கங்களை வெளியிடும் அளவுக்கு தேசிய அளவிலான தீர்வுக்கு வழி வகுத்தார்.

தமிழகத்தின் பாரம்பரிய கலை வரலாற்று பொக்கிஷங்களை எந்தவித தயக்கமும் இல்லாமல் ஒவ்வொரு ஊராகச் சென்று நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று பலரை ஊக்குவித்து பல அமைப்புகளையும் உயிர் கொடுத்து கை தூக்கி விட்டார். அவ்வாறு, ஆளுநர் பரவலான மக்களை சென்றடைந்தார்.
இத்தகைய ஒரு சிறந்த நபர், நம் தமிழகத்தை விட்டுச் செல்வது நமக்கெல்லாம் சற்று வருத்தம் அளிக்கவே செய்கிறது.
தமிழக அரசியல் அனுபவம், அவருக்கு மனக்கசப்பையே அளித்திருக்கும். என்றாலும் பொறுமை இழக்காமல், தமது ஐபிஎஸ்., என்ற கடந்த கால கரடுமுரடு அனுபவங்களை ஒதுக்கித் தள்ளி மென்மையான மனிதராகவே நிகழ்வுகளை அணுகினார்.
தன்னால் ஏற்க முடியாத சர்ச்சைக்குரிய மசோதாக்களைத் தவிர, மற்ற அனைத்து மசோதாக்களுக்கும் உடனுக்குடன் ஒப்புதல் வழங்கினார். முக்கியமாக, ஆளுநர் உரைகளின் போது அவர் காட்டிய உறுதிப்பாடு வியக்கத்தக்கது. உண்மைக்கு மாறானது, தேசியத்துக்கு எதிரானது என்று அவர் கருதிய வாசகங்களை கவர்னர் உரைகளின் போது அப்படியே வாசிப்பது தர்மசங்கடமானது என்பதை உணர்ந்து, அதைத் தவிர்த்தது குறிப்பிடத்தக்க செயல்பாடுதான். அந்த வகையில் ஒரு முன்னுதாரணத்தை அவர் ஏற்படுத்தி இருக்கிறார்.

இது போன்ற ஒரு சந்தர்ப்பத்தில் அவர் சட்டசபையிலிருந்து வெளியேறியபோது, பின்னாலிருந்து ஓர் அமைச்சர் ‘போய்யா’ என்ற மோசமான உடல் மொழியில் காட்டிய சைகையை இந்தத் தமிழகம் பார்த்தது. அப்போதும் உடனடி அரசியல் எதிர்வினை ஆற்றாமல் தனது போது பதவிக்கு உரிய கௌரவத்தை காப்பாற்றினார்.
உயர் பதவிகளில் இருப்பவர்களிடம் இப்படிப்பட்ட முதிர்ச்சியைக் காண்பது அரிது.
ஆர் என் ரவி போன்றவர்களை தமிழகமும் தமிழக மக்களும் தான் தவற விடுகிறார்கள். தேர்தல் அறிவிக்கப்பட்ட இந்த நேரத்தில் ஆளுநர் ரவியின் செயல்பாடு எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது தமிழகத்தில் உள்ள தேசியவாதிகளுக்கு தெரிந்திருக்கிறது! அதனால் தான் இந்த நேரத்தில் அவர் மாற்றம் தேவையா என்கின்ற ஒரு சர்ச்சையையும் அவர்கள் முன்வைத்து வருகிறார்கள். அதற்காக உள்துறை அமைச்சகத்துக்கும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள். அது நாம் புரிந்து கொள்ள தக்கதே. எனினும் தமிழகத்தை விட மிக மோசமான நிலையில் இருக்கும் மேற்கு வங்கத்திற்கு அவரது சேவை மிக முக்கிய தேவை என்பதை மத்திய அரசு உணர்ந்து இருப்பதையே இந்தப் இடமாற்றம் காட்டுகிறது.
வரும் காலத்தில் பாரத அரசின் குடியரசுத் தலைவராகவே பதவி வகிக்கும் அளவுக்கு நற்தகுதி அவருக்கு இருக்கிறது. அவரது எதிர்காலம் மட்டுமல்ல, நம் நாட்டின் எதிர்காலமும் அதன் மூலம் சிறப்பாக அமைய வாழ்த்துவோம்!



