
— ஜெயஸ்ரீ எம். சாரி
மஹாராஷ்டிர மாநிலத்தில் ‘தர்பண்’ என்னும் நாளிதழை வெளியிட்ட பால்சாஸ்திரி ஜாம்பேகர் அவர்களின் பிறந்த நாளான ஜனவரி 6-ஆம் தேதியை மராட்டி பத்திரிகையாளர் தினமாக கொண்டாடப்படுகிறது.
1812- ஆம் ஆண்டில் பிறந்த பால்சாஸ்திரி ஜாம்பேகர் தன்னுடைய 20-ஆவது வயதில் மராட்டியில் முதல் நாளிதழை ‘தர்பண்’ எனும் பெயரில் தொடங்கினார். தன்னுடைய 34 வயது வரையே வாழ்ந்த ஜாம்பேகர் தன் நாளிதழ் மூலமாக மக்களை ஆங்கில ஏகாதிபத்தை எதிர்க்க விழிப்புணர்வை ஏற்படுத்தினார். கல்வி, வரலாறு, மக்களை நல்வழிப்படுத்துதல், சமூக சீர்திருத்தம், குழந்தைகள் கல்வி எனப் பல்வகைத் துறைகளில் தன் எழுத்துகளினால் சாதித்தார். அவரின் கோட்பாடுகள் இன்றும் மராட்டிய பத்திரிகை உலகில் ஒரு கருவூலமாக உள்ளது. மராட்டியை தாய்மொழியாகக் கொண்ட ஜாம்பேகர் சமஸ்கிருதம், பெங்காலி, குஜராத்தி, கன்னடம், தெலுங்கு, பார்ஸி, ஃப்ரான்சு, கிரேக்க மற்றும் லத்தீன் மொழிகளையும் அறிந்திருந்தார்.
ஜாம்பேகர் – மராட்டிய பத்திரிகைகளின் தந்தை அவர்களை இந்நாளில் வணங்குகிறேன்.
இன்று காலையில் எனக்கு வர்தா நகரில் இருக்கும் என் பத்திரிகையாள நண்பர் கைப்பேசியில் அழைத்து எனக்கும் மராட்டிய பத்திரிகையாளர் தினத்திற்கான வாழ்த்தினை தெரிவித்த போது மனதிற்கு நிறைவாய் இருந்தது.
உடனே, என் நினைவலை பின்னோக்கி சுழன்றது. நான் 2007 – ஆம் ஆண்டு ‘தி ஹித்வாத்’ என்னும் ஆங்கில நாளிதழின் வர்தா அலுவலத்தில் மொழிபெயர்ப்பாளராய் சேர்ந்தேன். ஒரு நாளைக்கு குறைந்த பட்சமாக பத்து செய்திகளையாவது மராட்டியில், ஹிந்தியில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும்.
வர்தா மாநிலத்தில் இருந்த கிட்டத்தட்ட 50 நிருபர்களிடமிருந்து செய்திகளை சேகரிக்கும் பணியும் இருந்தது.
முன்னாள் ஜனாதிபதி பிரணப் முகர்ஜி அவர்களின் வர்தா விஜயத்தின் போது நேரிடையாக அவரது நிகழ்வில் செய்தி சேகரித்தது ஒரு மறக்க முடியாத அனுபவம்.
ஒரு படிக்காத மேதையாய் இருந்தபோதிலும் திறமையாய் தன் கிராமத்தை நிர்வகித்த பெண் ‘சர்பஞ்ச்’ ஒருவரைப் பற்றிய செய்தியைப் பிரசுரித்த போது அதற்காக எனக்கு பெரும் பாராட்டு கிடைத்தது.
ஒருமுறை மகாத்மா காந்தியின் பெயரில் வர்தாவில் இயங்கும் பல்கலைகழகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பிற்கு பிறகு அசைவ உணவு பரிமாறப்பட்டதாக நான் கேள்விப்பட்டவுடன் சம்மந்தப்பட்ட அதிகாரியிடம் கடிந்து கொண்டபோது அவர், தாங்கள் செய்த தவறுக்காக என்னிடம் மன்னிப்பு கோரினார். அந்தச் சம்பவத்திற்கு பிறகு, பல பத்திரிகையார்களுக்கு என் மேல் இன்னும் மரியாதை கூடியதாகச் சொன்னார்கள்.
வர்தாவில் புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தின் ஆண்டு விழாவினை ஒவ்வொரு வருடமும் விவேகானந்தர் ஜெயந்தியில் இருந்து கொண்டாடுவார்கள். அதற்கான பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழச்சியை ஏற்பாடாகி இருந்தது. நான் எங்கள் நாளிதழ் சார்பில் அதில் கலந்துக் கொண்டேன். அச்சந்திப்பு முடிந்தது. அலுவலகம் வந்தேன். செய்தியை அனுப்பினேன். வீடும் வந்து சேர்ந்தேன். பிறகு, என் அலுவலகத்தில் இருந்து தொடர்பு கொண்டார்கள். “காலையில் நீங்கள் சென்ற கல்வி நிலையத்தின் தலைவர் பேசிகிறார், பேசுங்கள்,” என்றனர். அந்தத் தலைவரோ வணக்கம் எல்லாம் கூறிவிட்டு, “நாங்கள் கொடுத்த பரிசுப்பொருளை உங்களைத் தவிர மற்ற பத்திரிகையாளர்கள் வாங்கிக்கொண்டனர். நீங்கள் ஏன் மறுத்தீர்கள்?” – எனக் கேட்டார். “நீங்கள் எங்களை வரவேற்றபோதே பரிசுப்பொருளை கொடுத்திருந்தால் நான் வாங்கிக் கொண்டு இருப்பேன். நிகழ்ச்சியின் இறுதியில் நீங்கள் கொடுக்கும் பரிசுப்பொருளைப் பெற நான் காத்திருக்க என்னக்குரிய இன்றைய நேரம் காத்திருக்கவில்லை,” என்றேன், நான். அதன்பின்னர், அந்தக் கல்வி நிலையத்தில் பத்திரிகையாளர் சந்திப்பின் முறையையே மாற்றி அமைத்ததாக இப்போதும் பலர் என்னிடம் கூறுகின்றனர்.
ஒருநாள் நான் அலுவகத்தில் இருந்த போது ஒருவர் அங்கு வந்து எங்கள் கல்வி நிறுவனம் கொடுத்த செய்தியை மொழிபெயர்த்தவர் யார், எனக் கேட்க என்னை அலுவலக வரவேற்பு அறைக்கு அழைத்தனர். நானும் வந்தேன். ‘நீங்கள் தான் செய்தியை தயாரித்தீர்களா?
செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பிரபல வல்லுநர் வர்தாவில் ஒரு வழிகாட்டி நிகழ்ச்சியில் பேசியதை நீங்கள் ஒருவர் தான் நேர்மறை வாக்கியங்களில் மாற்றியுள்ளீர்கள். அதற்காக உங்களுக்கு நன்றி தெரிவிக்க சொன்னார்,” என்றார். எனக்கு அப்பொழுது தான் மூச்சே வந்தது.
சி. ஐ. டி. யூ அமைப்பு எனக்கு கௌரவித்த போது அந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் அங்கு கூடியிருந்த ‘ஆஷா ஒர்க்கர்ஸ்’ என்று அழைக்கப்படும் ஊழியர்களிடம் என் பணியினைச் சுட்டிக்காட்டி இவரைப் போல ஆங்கில செய்தியாளர்களின் செயல்களினால் தான் மஹாராஷ்டிர அரசில் இருக்கும் வேற்று மொழி உயர் அதிகாரிகளுக்கு நம் கோரிக்கைகள் செல்கிறது,” என்று சொன்னது இன்றும் காதில் சுழல்கிறது.
நாக்பூரில் உலக பிரசித்திப் பெற்ற லதாமங்கேஷ்கர் அவர்களின் பெயரில் உள்ள கார்டனின் அவலநிலையைக் கோடிட்டு நான் செய்தியாக வெளியிட்டதும் ஒரு மறக்க முடியாத தருணம்.
இவ்வாறாக, மராட்டிய மண்ணில் பத்திரிகையாளராய் நான் பணியாற்றியது பசு மரத்தாணி போல உள்ளது.




