பரமபதித்த ‘வைணவச் சுடர்’ தெ.ஞானசுந்தரம்!

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Published:

the gnanasundaram - 2026

தமிழறிஞர் தெ.ஞானசுந்தரம் ஞாயிற்றுக் கிழமை நேற்று காலமானார். அவரது மறைவு பற்றி அவரது குடும்பத்தினர் தெரிவித்த தகவல்…

எங்களது தகப்பனார் தெ.ஞா என அன்புடன் அழைக்கப்படும் ‘முனைவர் தெ.ஞானசுந்தரம்’ அவர்கள் நேற்று மாலை (25.1.26) 3.00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்னாரது இறுதி ஊர்வலம் 28.01.2026 புதன்கிழமை காலை 8.30 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து புறப்பட்டு வேலங்காடு தகன பூமியில்(RTO அலுவலகம், New Avadi Road, கீழ்பாக்கம் Water tank அருகில்) 10.00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இங்ஙனம்-
தி.மணிமேகலை (மனைவி), ஞா.அருண்மொழி(மகன்), ஞா.மாதவன்(மகன்).


தெ. ஞானசுந்தரம் 1941 செப்டம்பர் 24ம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்தின் தேரழுந்தூரை அடுத்த குழையூர் என்னும் சிற்றூரில் பிறந்தார். தமிழ்ப் பேராசிரியர், நூலாசிரியர், ஆராய்ச்சியாளர், சொற்பொழிவாளர், பட்டிமன்றப் பேச்சாளர் என பல தளங்களில் முத்திரை பதித்தவர்.  கும்பகோணம் அரசுக் கல்லூரியில் பொருளியல் இளங்கலைப் பட்டம் பெற்றவர் பின்னாளில் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். வைணவ உரைவளம் என்னும் பொருண்மையில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். இவ்வாராய்ச்சி மணிப்ரவாள நடையில் அமைந்த திவ்யப் பிரபந்த உரைகளைப் பற்றியது. பேராசிரியர் மு. வரதராசனாரின் மாணவராகத் திகழ்ந்தவர்.

பச்சையப்பன் கல்லூரி, பரமத்தி வேலூர்க் கந்தசாமிக் கண்டர் கல்லூரி, சென்னைக் கந்தசாமி நாயுடு கல்லூரி ஆகியவற்றிலும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அரிய கையெழுத்துச் சுவடித் துறையிலுமாக 37 ஆண்டுகள் தொடர்ந்து பணிசெய்துள்ளார். 1993ல் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவரானார். மாலைக் கல்லூரிப் பொறுப்புப் பேராசிரியராகவும் அதே கல்லூரியில் பொறுப்பு முதல்வராகவும் பதவி வகித்து 2000ஆம் ஆண்டில் பணி ஓய்வு பெற்றார். 

புதுவை நடுவண் பல்கலைக்கழக கம்பன் இருக்கையின் முதல் பேராசிரியர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன துணைத்தலைவர் என பொறுப்புகள் வகித்தார். நூல்கள் பல எழுதியுள்ளார். விருதுகள் பல இவரை அலங்கரித்துள்ளன.

ALSO READ:  அருந்தமிழ் 50: திறனாய்வு!

பேராசிரியர் தமிழறிஞர் தெ.ஞானசுந்தரம் குறித்த அடியேனது நினைவலைகள்…

வயதில் மூத்த நண்பர் ஒருவர் ஒருமுறை சொன்னார்… ‘உன்னோட ஃபேஸ்புக் போஸ்ட்ல பெரும்பாலும் இரங்கல் குறிப்புதான் பெரிதா இருக்கு. ஆனா மனதின் ஆழத்தை வெளிப்படுத்தும் விதமா இருக்கு, படிக்கும் போதே கண்கள் கலங்குகிறது’ என்றார். 12 வருடம் முன் அண்டை வீட்டுக்காரரான செங்கோட்டை வி. ஜனார்த்தனன் ஐயா காலமான போது அவருடனான அனுபவங்களை எழுதியிருந்தேன். அதைப் படித்து விட்டு கண்கலங்கியதாக தெரிவித்த தெ. ஞானசுந்தரம் ஐயா, ‘தங்கள் கட்டுரையைப் படித்தேன். கடைசிப்பகுதியில் இழையும் சோகம் கண்களைக் கலங்கச் செய்தது. நான் அவரைச் சென்று பார்த்த வீடு நீங்கள் சிறுவயதில் .ஓடியாடியது என்பதை அறிய மகிழ்ச்சி’ என்றார் தனிப்பட்ட தகவலில்! காரணம், அவர்கள் அந்நாளைய பட்டிமன்றம், இலக்கியக் கூட்டங்களில் ஒன்றாகப் பங்கெடுத்தவர்கள்.

உரையாடலில் தெ.ஞா. ஐயாவும் விளையாட்டாகச் சொன்னார், உங்கள் இரங்கல் குறிப்பைப் படிக்கும் போது, தன்னைப் பற்றியும் இப்படியான உள்ளந்தொடும் அனுபவங்களைக் கேட்டுவிட்டு, மனநிறைவுடன் உலகை விட்டுப் போகணும்னு ஒருத்தருக்குத் தோன்றும் என்றார். ஐயா இது அடியேனை கலம்பகம் பாடுநர் என்று குறிப்பிடுமாப் போலே தோன்றுதலால், அடியேனுக்குள் கலக்கம் அதிகமாகி விட்டது என்றேன்! சிரித்தபடியே கடந்தார்.

அவருடனான பழக்கம் ஏற்பட்டது 2002ல். அப்போது சேக்கிழார் ஆராய்ச்சி மையம் சார்பில் ஒரு கருத்தரங்கு. சென்றிருந்தேன். அதில் பேசிய அறிஞர்களில் இவருடைய பாணி என்னை வெகுவாய் ஈர்த்திருந்தது. அந்த வருட கலைமகள் தீபாவளி மலரில் அறிஞர்களின் உரைகளைத் தொகுத்து எழுதினேன். அப்போதுதான் அவருடன் முதல் சந்திப்பு. பார்த்த மாத்திரத்தில் உள்ளத்தால் அணைத்துக் கொண்டார். (கலைமகள் தொகுப்பை இங்கே ஏற்கெனவே பதிவிட்டிருக்கிறேன். சுட்டி… https://www.facebook.com/share/1BknVMpLJp/ )

பின்னாளில் நான் தினமணி பணியில் இருந்த போது, அடிக்கடி பேசிக் கொள்ளும் வாய்ப்பு இருந்தது. சொல் விளையாடல் மட்டுமல்ல, அவர் தினமணிக்காக நிறைய எழுதினார். தினமணியின் மீது தனித்துவமான விருப்பு அவருக்கிருந்தது. குறிப்பாக தமிழ் மணி கட்டுரைகள், நடுப்பக்க கட்டுரைகள் இவை மீது! சில கட்டுரைகள் குறித்து, அல்லது சில சொற்கள் குறித்து விளக்கமோ விமர்சனமோ தனிப்பட்ட வகையில் பேசிக் கொள்வோம். எனினும் அவர் எவரைக் குறித்தும் தனிநபர் விமர்சனமாக எதையும் முன்வைத்ததில்லை! அவை அடியேனுக்கு மேலும் பாடம் எடுப்பது போலிருக்கும். இறுதி மூச்சு உள்ள வரை நான் கற்கும் மாணவனே என்ற எண்ணம் எனக்குள் உண்டு. சார்ந்திருக்கும் துறை மட்டுமல்லாது வேறு துறைகளிலும் கவனம் செலுத்துவேன். ஒவ்வொரு கால கட்டத்தில் ஒவ்வொரு துறை சார்ந்து கற்றல் இருக்கும். தொழில்நுட்பம், மென்பொருள், வலைத்தள நுப்டம் இப்போது ஏஐ- செயற்கை நுண்ணறிவு சார் நுட்பங்கள் என…! இருந்தாலும், அடிப்படையை நாம் மறந்துவிடலாகாது என்பதற்கான ஊன்றுகோல்தான் தெ.ஞா. போன்ற அறிஞர்களின் நட்பும் தொடர்பும்!

ALSO READ:  வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

தெய்வச் சேக்கிழார் மேடையில் அவரை முதலில் சந்தித்திருந்தாலும், வைணவ இலக்கியங்களில் கரை கண்டவர் தெ.ஞா. என்பதை அவருடனான பழக்கம் அடியேனுக்குப் புரிய வைத்தது. குறிப்பாக, மணிப்ரவாள நடை, வைணவ உரை நடை இவை குறித்து அடிக்கடி பேசிக் கொள்வோம். அவர் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டதும் இந்தத் தலைப்பில் தான் என்பதால், நமக்குக் கூடுதலாக இவை குறித்த தகவல்கள் அவரிடம் இருந்து வந்து சேர்ந்தன.

கல்கியின் தீபம் இதழ்ப் பணியில் இருந்த போது, நம் இதழ்களிலும் நீங்கள் எழுதலாமே! என்றேன். அப்போது தன் ஆசையை இப்படிப் பகிர்ந்து கொண்டார்…
“நூல் எழுதும் பணியில் உள்ளேன். திவ்வியப் பிரபந்த மலர்கள் என்னும் பெயரில் ஆழ்வார்கள் பாசுரங்களில் சிலவற்றைக் குறித்து எழுத வேண்டும் என்னும் வேட்கை உண்டு. பெருமாள் திருக்குறிப்பு இருக்குமேல் நிறைவேறும். |தங்களுக்கு இசைவாயின் இம் முயற்சியை மேற்கொள்வேன். அவ்வப்பொழுது எழுதித் தருகிறேன்.” – என்றார். ஆனால் அது நிறைவேறவில்லை. அதற்குள் காலம் பல மாறுதல்களை அவரவர் வாழ்க்கையில் தோற்றுவித்து விட்டது.

ALSO READ:  தாமிரபரணிக் கரை ஆலயத்தில்... வழிபாட்டில் திருவள்ளுவர்!

பேஸ்புக் தொடர்பில் வந்த பின் என் பதிவுகளுக்கு அடிக்கடி பதில் போடுவார். ஒரு முறை நேர்மறை – எதிர்மறை – உடம்பாடு – என்பது குறித்த சொற்களில் விவாதம் வந்தபோது, ஐயா, எதிர்மறையைத் தவறு என்று சொல்லவில்லை. உடம்பாடு என்பதை நேர்மறை என்று சொல்வது தான் தவறு என்று தெரித்துள்ளேன் – என்று பதில் விளக்கம் அளித்தார்.

அதுபோல், பிறந்த நாள் வாழ்த்தை பேஸ்புக் உள்டப்பியிலும் வாட்ஸ்அப்பிலும் தெரிவிப்பதில் அவர் தவறியதில்லை. ஒருமுறை தமிழ் மற்றும் சம்ஸ்க்ருதத்தில் என அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். பதிலுக்கு அவரும் அதே பாணியில் நன்றி தெரிவித்தார். எம்மொழியும் எனக்கு இனிய மொழியே! என்ற குறிப்புடன்! ஆக ஒரு சிறந்த தேசியச் சிந்தனையாளர் அவர். இப்போது பத்ம விருதுகள் பற்றி செய்தி எழுதிக் கொண்டிருந்த நேரத்தில் தெ.ஞானசுந்தரம் ஐயா பரமபதித்த செய்தி எட்டியது. அப்போது அடியேனுக்குத் தோன்றியது, இவரின் தெய்வத் தமிழ்ப் பணிக்காக மத்திய அரசு பத்ம விருது கொடுத்திருக்க வேண்டும்; முயற்சி செய்திருக்கலாம்! தவற விட்டுவிட்டோமே! என்று!

இன்னும் அவரைப் பற்றி நிறையக் குறிப்பிடலாம்தான். ஆனால் இரங்கல் குறிப்புகளை இனியும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்க எனக்கு விருப்பம் இல்லை. இப்போதோ, எனக்கு நானே கலம்பகம் படித்துக் கொள்ளும் இயலா நிலைக்கு உடலும் உள்ளமும் தள்ளப்பட்டுவிட்டதால், அவர் நினைவுகளை உள்ளத்தில் இருத்தி வெறுமனே அசைபோடுகிறேன்!

அன்பன்
செங்கோட்டை ஸ்ரீராம்

Related articles

Recent articles

spot_img