
அகநானூறும் புறநானூறும் ராமனைப் பற்றிச் சொல்லும் செய்திகள்
கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்
ஆசிரியர், கலைமகள்
வென்வேல் கவுரியர் தொன்முது கோடி,
முழங்கிரும் பௌவம் இரங்கும் முன்றுறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த,
பல்வீழ் ஆலம் போல,
ஒலி அவிந்தின்றால் இவ் அழுங்கல் ஊரே. அகநானூறு -70
மதுரைத் தமிழ் கூத்தனார் கடுவன் மள்ளனார் இயற்றிய “அகநானூறு” தொகுப்பில் இருக்கும் 70 வது பாடலின் பொருள் பின்வருமாறு:
பாண்டியன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த “தொன்முதுகோடி” என்னும் தனுஷ்கோடியில் கடலோரத்தில் இருந்த ஆலமரத்தடியில் அமர்ந்துகொண்டு இராமன் வேத மந்திரங்களை வாய்விட்டுச் சொல்லிக் கொண்டிருந்தான். இந்த நிகழ்வானது இலங்கையில் ராவணனை வெற்றி கொண்டபின் மேற்கொண்டது ஆகும். ராமபிரான் எழுப்பிய வேத ஒலியைக் கேட்டு அம்மரத்தில் இருந்த பறவைகளும், ராமரது படைகளும் கொஞ்சம் கூட ஒலி எழுப்பாமல் கேட்டுக்கொண்டிருந்தனவாம்!!
இலம்பாடு உழந்த என் இரும்பேர் ஒக்கல்,
விரற்செறி மரபின செவித்தொடக்குநரும்,
செவித்தொடர் மரபின விரற் செறிக்குநரும்,
அரைக்கு அமை மரபின மிடற்று யாக்குநரும்,
மிடற்கு அமை மரபின அரைக்கு யாக்குநரும்,
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை,
வலித்த கை அரக்கன் வௌவிய ஞான்றை,
நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின்,
செம்முகப் பெருங்கிளை இழை பொலிந்தாங்கு . புறநானூறு 378
சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னியை ஊன்பொதி பசுங் குடையார் அகநானூறில் பாடிய பாடலாகும். இப்பாடலின் பொருள் :
சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி தன்னைப் பாடிய புலவர் ஊன்பொதி பசுங்குடையாருக்கு பலவகையான அணிகலன்களைப் பரிசாக வழங்கினார்.புலவரின் உறவினர்கள் அந்த அணிகலன்களை முன்பின் பார்த்ததில்லை. எனவே அவர்கள் விரலில் அணிய வேண்டியதைக் காதிலும், காதில் அணிய வேண்டியதை விரலிலும், இடுப்பில் அணிய வேண்டியதைக் கழுத்திலும், கழுத்தில் அணியவ வேண்டியதை இடுப்பிலும் அணிந்துகொண்டனராம்.
இது எப்படி இருந்தது? என்று கேட்டால் இராமனுடன் வனவாசம் வந்திருந்த சீதையை இராவணன் தூக்கிக் கொண்டு சென்றபோது அவள் தன் அணிகலன்களை ஒவ்வொன்றாகக் கழற்றி எறிந்துகொண்டு சென்றதைக் கண்ட குரங்குகள் அந்த அணிகலன்களை எங்கு அணிந்துகொள்வது எனத் தெரியாமல் அணிந்துகொண்டதைப் போல இருந்ததாம்!
இன்று ஸ்ரீ ராம நவமி
ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்….
ஜெய் ஸ்ரீ ராம்.



