சில பகுதிகளுக்கு முன் குறிப்பிட்டது போல, ரெயில் நிலையத்தில்,ஒருவரை மற்றவர் சந்திக்க இயலாமல் போனாலும், எல்லோரும் ஹிந்து மஹா சபா பவனிற்கு வந்து விட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது.
அங்கே வருபவர்களை வரவேற்க கார்கரேயும், மதன்லால் பஹ்வாவும் இருப்பார்கள் என்பது ஏற்பாடு.
நாதுராம் கட்சியின் முக்கியமான, செல்வாக்கு மிக்க ஊழியர்.பலமுறை கட்சி மாநாடுகளிலும் கூட்டங்களிலும் பங்கேற்க டெல்லி வந்திருக்கிறார்.
கட்சியின் செயலாளர் அஸுதோஷ் லஹிரி நன்கு அறிமுகமானவர்.
கார்கரேயிடம் ஒரு அறிமுகக் கடிதம் கொடுத்து,லஹிரியை சந்திக்கும்படி கூறியிருந்தார் நாதுராம்.
அதன் காரணமாக,ஜனவரி மாதம் 18ந் தேதி பிற்பகலிலிருந்து ஹிந்து மஹா சபா பவனில் 3ஆம் எண் அறை கார்கரே தங்க ஒதுக்கப்பட்டது.
அன்று பிற்பகலில்,மதன்லால்,அங்சேகரை அழைத்துக் கொண்டு சந்தினி செளக் பகுதியிலிருந்த தன் சொந்தக்காரர்களின் இல்லங்களில் தனக்கு பெண் பார்க்கச் சென்று கொண்டிருந்த போது,
ஆப்தே,நாதுராம் மற்றும் கார்கரே,பிர்லா ஹவுஸில் காந்தியின் பிரார்த்தனை கூட்டத்தில் கலந்துக் கொள்ளச் சென்றனர்.
காந்தி உடல் நிலை சரியில்லாததால் படுக்கையில் இருந்தார்.கூட்டத்திற்கு வரவில்லை.
அவர் அனுப்பிய செய்தி ஒலிபெருக்கி மூலம் அவர் சார்பில் வாசிக்கப்பட்டது.
அன்றுதான் காந்தி தன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள எண்ணியிருந்தார்.
அவருடைய சரிதையாசிரியர் D.G.டெண்டுல்கர் கூற்றின்படி,’அன்றைய தினம் அவருக்கும் அவரை சார்ந்த அனைவருக்கும் மகிழ்ச்சியான நாளாக இருந்தது ‘.
அன்றைய தினம் பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள் எண்ணிக்கை வழக்கத்தை விட சற்று கூடுதலாக இருந்தது.
ஒரு விடுதலை நாளை போல பரபரப்பு நிலவிக்கொண்டிருந்தது.
ஆப்தே,நாதுராம்,கார்கரே ஆகிய மூவரும் அந்த பிர்லா தோட்டமெங்கும் சுற்றி வந்து தங்கள் திட்டத்தை முடிவு செய்தனர்.
உண்ணாவிரதம் முடிவிற்கு வந்துவிட்டபடியால்,ஓரிரு நாட்களில் வெளியே வந்து காந்தியே பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்துவார் எனும் நம்பிக்கைஅவர்களுக்கு வந்தது.
எல்லாம் திட்டப்படியே நடக்கிறது எனும் மகிழ்ச்சியுடன் அவர்கள் புது டெல்லி ரயில் நிலையத்திற்குச் சென்றனர்.
ஒன்றன்பின் ஒன்றாக ஒரு மணி நேர இடைவெளியில் பம்பாயிலிருந்து வரவிருந்த பஞ்சாப் மெயில் மற்றும் ஃப்ராண்டியர் விரைவு ரெயில்களுக்காக காத்திருந்தனர்.
திகம்பர் பாட்கேயும் சங்கர் கிஷ்டய்யாவும் ஃப்ராண்டியர் மெயிலில் வர வேண்டும்,கோபால் கோட்ஸே பஞ்சாப் மெயிலில் எதிர்பார்க்கப்பட்டார்.
இரண்டு ரயில்களும் சரியான நேரத்திற்கு வந்தன.
ஆனால் பிளாட்பாரம் நெடுகத் தேடியும் மூவரும் தென்படவில்லை.
நாம் ஏற்கெனவே பார்த்தபடி,பாட்கேயும்,சங்கர் கிஷ்டய்யாவும்,கூடுதலாக ஒரு நாள் பம்பாயில் தங்கிவிட்டபடியால் வரவில்லை.
ஆனால் கோபால் கோட்ஸே பஞ்சாப் மெயிலில் பயணித்து,வந்து சேர்ந்தும் விட்டார்.
அவர் என்ன செய்துவிட்டார் என்றால்,ரயில் முழுவதுமாக நிற்பதற்கு முன்பாகவே,ரயிலிலிருந்து சற்று ஓடிக்கொண்டிருக்கும் போதே இறங்கி விட்டார்.
இறங்கியவர் அங்கேயே நிற்காமல்,அந்த ஜனநெரிசலில்,ஆப்தேயையும்,நாதுராமையும் தேடி இங்கும் அங்குமாய் அலைந்துக் கொண்டிருந்தார்.
அவரும் ரயிலை தவற விட்டு விட்டதாக நாதுராமும்,ஆப்தேயும் நினைத்து விட்டார்கள்.
அவர்கள் ஏமாற்றத்துடன் தாங்கள் தங்கியிருந்த மெரினா ஹோட்டலுக்கு திரும்பிச் சென்றார்கள்.
சற்றே வேதனையும்,நடுக்கமும் அவர்களை ஆட்கொண்டது.
மதன்லால் பஹ்வா வெடிகுண்டுகளை கொண்டு வந்து விட்டாலும்,வரவேண்டிய இரண்டு ரிவால்வர்களும் வந்து சேரவில்லை.
ஒன்று திகம்பர் பாட்கே கொண்டு வர வேண்டியது.இன்னொன்று கோபால் கோட்ஸே கொண்டு வர வேண்டியது.
வழக்கமாக சிறிதளவே மது அருந்தும் ஆப்தே சற்று கூடுதலாக மது அருந்தினார்.
( தொடரும் )
எழுத்து: யா.சு.கண்ணன்