இந்தியா – இலங்கை இரண்டாவது ஒருநாள் ஆட்டம். கொல்கொத்தா, 12.01.2023
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இலங்கை அணியை (39.4 ஓவரில் 215 ஆல் அவுட், ஃபெர்னண்டோ 50, குசால் மெண்டிஸ் 34, துனித வெல்லாலகே 32, சிராஜ் 3/30, குல்தீப் யாதவ் 3/51) இந்திய அணி (43.2 ஓவரில் 219/6, கே.எல். ராகுல் 64*, ஹார்திக் 36, ஷ்ரேயாஸ் 28, லஹிரு குமாரா 2/64, கருணாரத்னே 2/51) 4 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
டாஸ் வென்ற இலங்கை அணித் தலைவர் முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்தார். இலங்கை அணி பேட்ஸ்மேன்கள் முழு 50 ஓவர்கள் பேட்டிங் செய்யாமல் அதிரடியாக விளையாடுகிறேன் என்று 40 ஓவர்களுக்குள் அவுட் ஆனார்கள்.
இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் அவிஸ்கா ஃபெர்னாண்டோ அதிரடியாக பேட்டிங் செய்து 17 பந்துகளில் 20 ரன்கள் அடித்து, சிராஜ் பந்தில் க்ளீன் போல்ட் ஆனார். இரண்டாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த, அறிமுக வீரர் நுவாணிந்தோ பெர்னாண்டோ மற்றும் குஷால் மெண்டிஸ் அற்புதமாக விளையாடி 73 ரன்கள் சேர்த்தனர்.
17 ஓவர்களில் 102/1 என்ற ஸ்கோர் எடுத்து இலங்கை அணி பலமான நிலையில் இருந்தது . அப்போது அக்சர் படேல், குல்தீப் யாதவ் பவுலிங் செய்ய வந்தனர். குல்தீப் யாதவ் அடுத்தடுத்து இலங்கை பேட்ஸ்மேன்களை வரிசையாக ஆட்டமிழக்கச் செய்தார். 102/1 என்று இருந்த இலங்கை அணியின் ஸ்கோர் 125/6 என்று ஆனது
தனஞ்செய டி சில்வா 0 ரன்கள், சரிதா அசலங்கா 15 ரன்கள், பெரிதும் எதிர்பார்க்க பட்ட கேப்டன் தசுன் ஷானகா 2 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். அறிமுக தொடக்க வீரர் பெர்னாண்டோ அற்புதமாக விளையாடி 50 ரன்கள் எடுத்தார். சுப்மன் கில் செய்த அற்புதமான பீல்டிங்கால் இவர் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
இதனால் 39 ஓவர்களில் 215 ரன்கள் எடுத்து இலங்கை அணி வீரர்கள் ஆல்அவுட் ஆனார்கள். இந்திய பந்துவீச்சாளர்களில் குல்தீப் யாதவ் 3 விக்கெட், முகமது சிராஜ் 3 விக்கெட் , உம்ரன் மாலிக் 2 விக்கெட் எடுத்தனர்.
எளிய இலக்கை இந்திய அணி சிரமப்பட்டு அடைந்தது. பத்து ஓவர் முடிவதற்குள் ரோஹித் ஷர்மா (17 ரன்), சுப்மன் கில் (21 ரன்), விராட் கோலி (4 ரன்) ஆகியோர் ஆட்டமிழந்தனர். ஆனால் அப்போது அணியின் ரன்ரேட் 6.7 என அதிகமாகவே இருந்தது. நன்றாக விளையாடிக் கொண்டிருந்த ஷ்ரேயாஸ் ஐயர் 15ஆவது ஓவரில் 28 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 86/4.
இலங்கை அணி வெற்றி பெறுமோ என்ற எண்ணம் அனைவருக்கும் ஏற்பட்டது. அதன் பின்னர் மீதமிருந்த 35 ஓவர்களில் 129 ரன் கள் மட்டுமே அடிக்க வேண்டி இருந்ததால் கே.எல். ராகுலும் ஹார்திக் பாண்ட்யாவும் நிதானமாக ஆடினார்கள். 35ஆவது ஓவர் முதல் பந்தில் ஹார்திக் 36 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அப்போது இன்னமும் 55 ரன் தேவைப்பட்டது.
அணியின் ஸ்கோர் 191 ஆக இருக்கும்போது அக்சர் படேல் (21 ரன், 21 பந்துகள், ஒரு ஃபோர், ஒரு சிக்சர்) ஆட்டமிழந்தார். அதன் பின்னர் 43.2 ஓவரில் இந்திய அணி 219 ரன் கள் எடுத்து இலங்கை அணியை 4 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இந்த வெற்றியின் மூலம் இந்தத் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. ஆட்டநாயகனாக குல்தீப் யாதவ் அறிவிக்கப்பட்டார். அடுத்த ஆட்டம் திருவனந்தபுரத்தில் வருகின்ற 15ஆம் தேதி நடக்கவுள்ளது.