நோபல் பரிசு என்பது ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும் பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும் உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசு ஆகும்.
அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் சில நிறுவனங்களுக்கும் வழங்கப்படுவது உண்டு. மார்ச் 2005 வரை 770 நோபெல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், சிலர் இந்தப் பரிசைப் பெற்றுக்கொள்ள மறுத்ததும் உண்டு.
இது வேதியியலாளர் ஆல்ஃபிரட் நோபெல் என்பவரால் 1895ல் தொடங்கப்பட்டது. முதல் பரிசு 1901 ல் வழங்கப்பட்டது. சில ஆண்டுகள் ஒரு பரிசு கூட அறிவிக்கப்படாமல் போனதும் உண்டு. எனினும், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது இந்தப் பரிசு அறிவிக்கப்படும். நோபெல் பரிசு, திரும்பப் பெறத்தக்கதல்ல.
இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம் அல்லது உடலியங்கியல் மற்றும் அமைதி ஆகியவையே ஆல்ஃபிரட் நோபெல் அவர்களின் உயில் படி ஏற்படுத்தப்பட்ட பரிசுகளாகும். பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு 1968 ல் சுவீடன் நடுவண் வங்கியினால் அதன் 300 வது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக ஏற்படுத்தப்பட்டது.
பரிசு பெறும் ஒவ்வொருவரும், ஒரு தங்கப்பதக்கமும் ஒரு பட்டயமும், நோபெல் அறக்கட்டளையின் அவ்வருட வருமானத்தைப் பொறுத்து பரிசுப் பணமும் பெறுவர்.
2019-ம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் வில்லியம் ஜி,கெலின், சர் பீட்டர் ரேட்கிளிஃப் , கிரேக் எல். செமன்ஸா ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மனித உடல் கிடைக்கும் ஆக்ஸிஜனின் அளவை பொறுத்து செல்களை எவ்வாறு தகவமைத்து கொள்கிறது என்பதை கண்டுபிடித்ததற்காக இந்த 3 மருத்துவர்களுக்கு நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட உள்ளது.
இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறுபவர்கள் குறித்து நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா வாழ் கனடா நாட்டுக்காரரான விஞ்ஞானி ஜேம்ஸ் பீப்ளஸ், சுவிஸ் நாட்டை சேர்ந்த வானியல் ஆய்வாளர்கள் மைக்கேல் மேயர், திதியர் க்யூலாஸ் ஆகியோருக்கு இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், அண்டவியல் குறித்த ஆய்வுக்காக ஜேம்ஸ் பீப்ளஸ் பாதி பரிசை பகிர்ந்து கொள்கிறார். இதேபோல் சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள கோள்கள் குறித்த ஆய்வுக்காக மைக்கேல் மேயரும், திதியர் க்யூலாசும் மீதமுள்ள பரிசை பகிர்ந்து கொள்கின்றனர்.
2019ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு, ஜான் பி. குட்எனாப், ஸ்டான்லி விட்டிங்காம், அகிரா யோஷினா ஆகிய மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. எடைக் குறைவான லித்தியம்-அயன் பேட்டரி தொடர்பான ஆராய்ச்சியில் புதிய வளர்ச்சியை எட்டியதற்காக இந்த நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.