![இந்து ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க இந்து மக்கள் கட்சி கோரிக்கை! 1 education scholarship for hindu studetns](https://dhinasari.com/wp-content/uploads/2020/07/education-scholarship-for-hindu-studetns.jpg)
இந்து ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இந்து மக்கள் கட்சியினர் சீர்காழி மாவட்ட கல்வி அலுவலர் மூலம் அனுப்பி வைத்த மனு….
தமிழகம் முழுவதும் அனைத்து கல்விக் கூடங்களிலும் துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் முஸ்லீம், கிறிஸ்தவ மாணவர்களுக்கு மத சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் சிறப்பு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. ஆனால், இந்து ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவிகள் எதுவும் வழங்கப்படுவதில்லை.
இது மாணவர்கள் மத்தியில் பிரிவினையை உருவாக்குகிறது. கல்வியில் மத அடிப்படையிலான வேறுபாடுகள், சலுகைகள் ஏற்றுக்கொள்ள முடியாதது.
![இந்து ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க இந்து மக்கள் கட்சி கோரிக்கை! 2 edication scholarship for hindu studetns](https://dhinasari.com/wp-content/uploads/2020/07/edication-scholarship-for-hindu-studetns.jpg)
சில தனியார் பள்ளி, கல்லூரிகள் இதனை பயன்படுத்தி மாணவர்களை மதமாற்றம் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. இந்து மக்கள் கட்சி தொடர்ச்சியாக பல வருடங்களாக பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளான கல்வி வளர்ச்சி நாளை மையமாக வைத்து இந்து ஏழை மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்து வருகிறது.
அதன்படி மாணவர்கள் மத்தியில் மத அடிப்படையில் வேறுபாடு காட்டாமல் இந்து ஏழை மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் அவர்களுக்கு சீர்காழி மாவட்ட கல்வி அலுவலர் மூலமாக கோரிக்கை மனு இன்று 28 .07.2020 செவ்வாய்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் தலைமையில் மாவட்ட அமைப்பாளர் க.பாலாஜி, மாவட்ட செயலாளர் அரு.செல்வம், நகர தலைவர் வெற்றிவேல், ஒன்றிய அமைப்பாளர் அய்யப்பன், மாணவரணி தலைவர் விக்ரம், வை.கோவில் தனசேகரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.