சென்னையில் கடன் தொல்லை காரணமாக சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயதான சேகர் என்பவர், ஆயுதப்படையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார். சென்னை தி நகரில் உள்ள விஸ்வ இந்து பரிஷத் அலுவலகத்திற்கான பாதுகாப்பு பணியை இவர் மேற்கொண்டு வந்துள்ளார். விஸ்வ இந்து பரிஷத் அலுவலகத்தில் பணியில் இருந்தபோது நேற்று மாலை கையில் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு சேகர் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட சேகர், தனது சொந்த ஊரில் வீடு கட்டுவதற்காக சுமார் 25 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியதாகவும், கடனை திருப்பி கொடுக்க முடியாததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.