![சேவாபாரதி தொடர்ந்த அவதூறு வழக்கில் ‘சுரேந்தர் என்ற நாத்திகன்’ மீது நோட்டீஸ்! 1 madurai-collector-sevabharati1](https://dhinasari.com/wp-content/uploads/2020/08/madurai-collector-sevabharati1.jpg)
‘கறுப்பர் கூட்டம்’ என்ற யூ-டியூப் சேனலில் இந்து மதத்தை சேர்ந்த கடவுள்களையும், இந்த மதத்தினரின் உணர்வுகளைகளையும் புண்படுத்தும் வகையில், கருத்துக்கள் பகிரப்படுவதாக, பாஜக வழக்கறிஞர் பிரிவின் சார்பில், ஜூலை 13, 2020 அன்று, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், ‘கறுப்பர் கூட்டம்’ யூ-டியூப் சேனல் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இதற்கிடையே கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலை சேர்ந்த செந்தில் வாசன் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார், ஜூலை 15, 2020 அன்று, சென்னை வேளச்சேரியில் கைது செய்தனர். மேலும், கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலைச் சேர்ந்த சுரேந்திரன், ஜூலை 16, 2020 அன்று, காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
“கறுப்பர் தேசம்” என்ற பெயரில், “சாத்தான் குளம் இரட்டை கொலை” சம்பவம், “சேவாபாரதி அமைப்பால் நிகழ்த்தப்பட்ட படுகொலை” என்று அவதூறான செய்திகள் அடங்கிய ஒளிப்பதிவை “சுரேந்தர் என்கிற நாத்திகன்” யூ-டியூப் சேனல் (You Tube) இல் வெளியிட்டது.
இந்த நிகழ்வு, “சேவா பாரதியின்” நற்பெயருக்கு களங்கம் விளைவித்தது. அதனால், ஒரு கோடி ஓராயிரம் ரூபாய், நஷ்ட ஈடு கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சேவாபாரதி சார்பாக அதன் தலைவர் ரபு மனோகர் தொடுத்த வழக்கு C.S.No.60/2021 பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு முடியும் வரை, “சேவாபாரதி”க்கு எதிராக அவதூறான செய்திகளை வெளியிட இடைக்கால தடை உத்தரவு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது.
சேவாபாரதி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரவியின் (Gupta & Ravi) வாதங்களைக் கேட்டு மேற்படி மனுவில் “சுரேந்தர் என்கிற நாத்திகனுக்கு” நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு மனு மீதான விசாரணையை 19.3.21 க்கு தள்ளி வைத்து உத்தரவு பிறப்பிக்கப் பட்டது.