![ஆவி புகும், பெற்றோர் இறப்பர்.. 7 வயது சிறுமியை மிரட்டி மதமாற்ற முயற்சி! 1 cross blood stained1](https://dhinasari.com/wp-content/uploads/2019/06/cross-blood-stained1.jpg)
ஈரோடு அருகே, சிறுமியை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயற்சி செய்ததை கண்டித்து, போலீசில் பெற்றோர், ஹிந்து முன்னணியினர் புகாரளித்தனர்.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி யூனியன், ஈஞ்சம்பள்ளி பஞ்சாயத்துக்குட்பட்ட மடத்துப்பாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜன், 44, விவசாயி. இவருடைய ஏழு வயது சிறுமி இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
அதே பகுதியில், குடியிருக்கும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த உஷாராணி, வெர்ஜினியா ஆகிய இருவரும், சிறுமியை வலுக்கட்டாயமாக கிறிஸ்தவ மதத்திற்கு மாற வற்புறுத்தியுள்ளனர்.
மதம் மாறாவிட்டால் உன் பெற்றோருக்கு பயங்கர பிரச்னை வந்து, இருவரும் இறந்துவிடுவார்கள், உன் உடலில் ஆவி புகுந்து விடும் என, தவறான வார்த்தைகளை கூறி சிறுமியை மிரட்டி உள்ளனர்.
மேலும், அருகில் உள்ள கிறிஸ்தவ வழிபாட்டு தலத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். தொடர்ந்து இருவரும் சிறுமியை தொந்தரவு கொடுத்து, மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டதால், மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி, தன் பெற்றோரிடம் கூறியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த பெற்றோர், உஷாராணி மற்றும் வெர்ஜினியா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மொடக்குறிச்சி தொகுதி ஹிந்து முன்னணி பொறுப்பாளர் முருகன் தலைமையில், மலையம்பாளையம் போலீசில் நேற்று புகார் மனு அளித்தனர். மனு மீது வழக்குப்பதிவு செய்த மலையம்பாளையம் போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.