தூத்துக்குடி உடுமலையில் மக்கள் அதிகம் வழிபடும் கோயில் களை இடிக்க முயற்சித்ததால் இன்று போராட்டம் நடந்தது.
தூத்துக்குடி 2ம் கேட் ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில் பாதை விரிவாக்கத்திற்காக ரயில்வே ஸ்ரீவரத விநாயகர் கோவிலை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹிந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் .
தூத்துக்குடி 2ம் கேட் ரயில் நிலையத்தில் இரண்டாவது கூடுதல் ரயில் பாதை விரிவாக்கத்திற்காக அங்குள்ள ரயில்வே ஸ்ரீவரத விநாயகர் கோயிலை இடித்து அகற்ற நிர்வாகம் முடிவு செய்தது. கோர்ட்டிலும் அனுமதி பெறப்பட்டுள்ளது. நேற்றிரவு கோயில் நிர்வாகத்தினர் அங்குள்ள பொருட்களை அப்புறப்படுத்தினர். இன்று காலை இடிக்கும் பணி துவங்கிய நிலையில் மாவட்ட நிர்வாகி ராகவேந்திரன் தலைமையில் ஹிந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர்
இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம்,
உடுமலைபேட்டை அருகே கோவில்களை இடிக்க வந்த அதிகாரிகளை தடுத்து, தீக்குளிப்பு முயற்சி, தடியடி,தள்ளுமுள்ளு என பல மணி நேரம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் குவிக்கப்பட்டு, பரபரப்பு நிலவியது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை பள்ளபாளையம் செங்குளம் பகுதியிலுள்ள நீர் நிலை ஆக்கிரமிப்புகளை, நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றும் பணி, நேற்று துவங்கியது. முதற்கட்டமாக, 300க்கும் மேற்பட்ட போலீசாருடன், அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம், 22 வீடுகளை அகற்றினர்.தொடர்ந்து, அங்கிருந்த ஆதிகருவண்ணராயர் வீரசுந்தரி கோவிலை இடிக்க சென்ற போது, மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர.
ஆயிரக்கணக்கான மக்கள் வழிபடும் இக்கோவில், பல நுாற்றாண்டு பழமை வாய்ந்தது. நீர் வழித்தடத்திற்கும், கோவிலுக்கும் தொடர்பு இல்லை. மின் இணைப்பு, வரி செலுத்துவது உள்ளிட்ட ஆவணங்கள் உள்ளது. கோவிலை இடிக்க அனுமதிக்கமாட்டோம்’ என எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதிகாரிகளும், போலீசாரும் கோவிலுக்குள் நுழைவதை தடுக்க, ஒரு கி.மீ., துாரத்திற்கு முன், பிரதான வாயிலை அடைத்து உள்ளே நுழைய விடாமல், பெண்கள், ஆண்கள் என, 500க்கும் மேற்பட்டோர் தடுத்தனர். போலீசார் தடியடி நடத்தியும், விலகாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென அங்கிருந்த சிலர் கெரசினை தங்கள் மேல் ஊற்றிக்கொண்டு, தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வோம் என எச்சரித்தனர்.
அருகிலிருந்த போலீசார் மீதும் கெரசின் விழுந்ததால், தீயணைப்பு துறை வாகனத்தால் தண்ணீர் அடிக்கப்பட்டது. ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக, அதிகாரிகளும், போலீசாரும் முயன்றும் கோவிலுக்குள் நுழைய முடியவில்லை. இதையடுத்து, திருப்பூர் எஸ்.பி., சசாங் சாய், ஆர்.டி.ஓ., கீதா ஆகியோர் மக்களிடம் பேச்சு நடத்தினர்.
இதில், ஏப்10 வரை அவகாசம் வழங்கப்படும். அதற்குள், உரிய ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, இடிப்பு நடவடிக்கையை தவிர்த்து கொள்ள அறிவுரை வழங்கினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு மக்கள் திரும்பிச்சென்றனர்.
![தூத்துக்குடி உடுமலையில் மக்கள் அதிகம் வழிபடும் கோயில் களை இடிக்க முயற்சி. 1 Tamil News large 2991132](https://dhinasari.com/wp-content/uploads/2022/03/Tamil_News_large_2991132.jpg)
![தூத்துக்குடி உடுமலையில் மக்கள் அதிகம் வழிபடும் கோயில் களை இடிக்க முயற்சி. 2 IMG 20220325 WA0081](https://dhinasari.com/wp-content/uploads/2022/03/IMG-20220325-WA0081.jpg)