கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே, குடிப்பழக்கம் காரணமாக மனைவி திட்டியதால் மனமுடைந்த கணவர் குடிபோதையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தக்கலை அருகே உள்ள அழகியமண்டபம் பகுதியைச் சேர்ந்த அஜித் (29) அதே பகுதியில் ஜேசிபி ஓட்டுனராக பணி புரிந்துள்ளார். அவருடன் பணியாற்றிய நண்பர் ஒருவர், ஓர் ஆண்டுக்கு முன்னர் இதய நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். இதனால் வருத்தப் பட்ட அஜித், அவரது நண்பரின் மனைவி சஜிதா (28) வுக்கு ஆறுதல் கூறி, தேவையான உதவிகளைச் செய்துள்ளார்.
கணவன் இழந்த நிலையில் தனிமையில் வாழ்ந்து வந்த சஜிதாவும் அஜித்தும் தொடக்கத்தில் நட்பு முறையில் பழகியுள்ளனர். ஆயினும் நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது!
இந்நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து, ஆறு மாதங்களுக்கு முன் ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
அஜீத்தும் சஜிதாவும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், அஜீத்தின் குடிப்பழக்கம் சஜிதாவுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் கணவனை சஜிதா திட்டி புத்திமதி கூறுவதும் வாடிக்கையானது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்றும் இதே போல் அஜித் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது சஜிதா அவரை கடுமையாக திட்டியுள்ளார். பதிலுக்கு அஜித்தும் ஆத்திரம் அடைந்து கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் மனவருத்தம் அடைந்த சஜிதா வீட்டுக்கு வெளியே வந்து அமர்ந்து அழுது கொண்டிருந்தாராம். அந்நேரம், திடீரென வீட்டின் கதவை உள்பக்கமாகப் பூட்டிக் கொண்ட அஜித், சேலையை எடுத்து தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.
வெகுநேரம் கடந்தும் அஜித் வெளியே வராததால், சஜிதா வீட்டின் கதவைத் தட்டியுள்ளார். உள்பக்கம் பூட்டப் பட்டிருந்ததால், அருகில் இருந்தவர்களை அழைத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, அஜித் தூக்கில் தொங்கிய படி, உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளார். இதை அடுத்து, ஊர் மக்கள் அஜித்தை கீழே இறக்கி அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் போதையில் இருந்ததால் மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை மட்டுமே அளித்து, அவரை பரிசோதனை செய்ய சற்று நேரம் ஆகும் என தெரிவித்துள்ளனர்.
அந்நிலையில், அஜித் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். குடிப்பழக்கத்தால் தனது இரண்டாவது கணவனையும் அந்தப் பெண் பறிகொடுத்தது அப்பகுதியினரை சோகத்துக்கு உள்ளாக்கியது.