கோவை:
கோவை அருகே நகை பட்டறை தொழிலாளியின் கண்ணில் மிளகாய் பொடி தூவி, ஒன்றரை கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை கெம்பட்டி காலணி பகுதியைச் சேர்ந்த குணசேகரன், அப்பகுதியில் தங்க நகைகள் செய்யும் பட்டறை நடத்தி வருகிறார். அவரிடம் அதே பகுதியைச் நாகராஜன் மற்றும் சரவணன் ஆகியோர் நகை செய்யும் வேலை பார்த்து வந்தனர். இன்று காலை நாகராஜன் மற்றும் சரவணன் நகை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதிகாலை 5 மணியளவில் சரவணன் டீ வாங்குவதற்காக வெளியே சென்றார். அப்போது கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பட்டறையினுள் புகுந்த 3 பேர், நாகராஜின் கண்ணில் மிளகாய்ப் பொடி தூவியும், கத்தியால் தாக்கியும், கடையினுள் இருந்த ஒன்றரை கிலோ எடையிலான தங்க நகைகளை கொள்ளையடித்துவிட்டு, மோப்ப நாய் மோப்பம் பிடிக்காமல் இருப்பதற்காக கடை முழுவதும் மிளகாய்ப் பொடியைத் தூவிவிட்டு அங்கிருந்து கொள்ளையர்கள் தப்பிச் சென்றனராம்.
இந்தச் சம்பவம் குறித்து சரவணக்குமார் போலீசாருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து அங்கே சென்ற போலீசார், காயமடைந்த நாகராஜை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் கொள்ளை தொடர்பாக நாகராஜன், சரவணக்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறன்றனர்.