![தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு போகாதீங்க! எல்லையோர ஊர்க்காரங்க எச்சரிக்கை இருங்க! 1 sengottai](https://dhinasari.com/wp-content/uploads/2016/11/sengottai.jpg)
உலகெங்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் உயிர்க்கொல்லி தொற்றான கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவிலும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகியிருக்கிறது.
சீனாவில் இருந்து ஐரோப்பா மற்றும் வளைகுடா நாடுகளுக்குப் பரவி, அங்கிருந்து வருபவர்கள் மூலம் இந்தியாவுக்கு இறக்குமதியாகியிருக்கிறது இந்த வைரஸ். இந்தியாவில் அதிகபட்சமாக வைரஸ் பரவலைச் சந்தித்திருக்கும் மாநிலமாக கேரளம் திகழ்கிறது.
கேரளாவில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்த தம்பதியும் அவர்களது மகனும் பிப்ரவரி 29 ஆம் தேதி தரையிறங்கினர். அவர்கள் இத்தாலி நாட்டுக்கு சுற்றுலா சென்றதை மறைத்து தங்களது மாவட்டமான பத்தனம்திட்டவின் மாவட்ட தலைநகரமான பத்தனம்திட்ட டவுனுக்கு சென்றனர்.
கேரள சுகாதாரதுறை பணியாளர்களின் அதிதீவிர தேடலுக்குப் பின்னர் மார்ச் ஏழாம் தேதி
இவர்கள் இத்தாலிக்குச் சென்று திரும்பியிருக்கும் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அவர்கள் மூவரையும் பத்தனம்திட்ட அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி வைத்தனர்.
இந்நிலையில் அவர்களுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் அவர்கள் மூவருக்கும் கொரோனா தொற்று பாசிடிவ் என்று கண்டறியப்பட்டது. அவர்களது குடும்பத்தில் நேரடி தொடர்பில் இருந்த அவரது 93 வயது தந்தை, 85 வயது தாய், அவரது தங்கை மற்றும் தங்கை கணவர் ( அவர்களது இரண்டு வயது குழந்தை) தம்பி மற்றும் தம்பி மனைவி ஆகியோருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட குடும்பம் பத்தனம்திட்ட அருகில் உள்ள பத்தனம்திட்டவில் இருந்து அச்சங்கோவில் வழியே தமிழகம் வரும் பகுதியான ராணி (Ranni) என்ற ஊருக்கு கடந்த பத்து நாட்களில் அடிக்கடி சென்று வந்திருப்பது தெரியவருகிறது. சுகாதாரத்துறை இந்த ராணி ஊரை ஹை ரிஸ்க் ஏரியாவாக அறிவித்துள்ளது!
அந்த தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள் அருகில் உள்ள மாவட்டங்களான எர்ணாகுளம், கோட்டயம், கொல்லத்துக்கும் பயணம் செய்திருப்பது தெரிய வந்துள்ளது. பத்தனம்திட்டா, எர்ணாகுளம், கோட்டயம், கொல்லம் ஆகிய நான்கு மாவட்டங்களிலும் சுகாதார அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களுக்கு அருகில் இருக்கும் எல்லையோர தமிழக மாவட்டங்களான தென்காசி (தென்காசி, செங்கோட்டை தாலுகாக்கள்), தேனி மாவட்டம் ( போடி, கம்பம், தேனி ஊர்கள்) உள்ளிட்ட ஊர்களில் இரு மாநில மக்களின் புழக்கம் அதிகம் இருக்கும் என்ற நிலையில், இந்தப் பகுதிகளில் அதிக எச்சரிக்கை தேவைப்படுகிறது.
![தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு போகாதீங்க! எல்லையோர ஊர்க்காரங்க எச்சரிக்கை இருங்க! 2 bus sengottai1](https://dhinasari.com/wp-content/uploads/2019/08/bus-sengottai1.jpeg)
இந்நிலையில், தமிழக மக்கள் மிக அவசிய தேவையன்றி கேரளாவுக்கு செல்வதை தவிர்ப்பது மிகச் சிறந்தது என்று எச்சரிக்கை விடுக்கிறார்கள் அதிகாரிகள்.
குறிப்பாக, தென்காசி, செங்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து சபரிமலை, ஆரியங்காவு, அச்சங்கோவில் உள்ளிட்ட ஐயப்பன் தலங்களுக்கு அதிக அளவில் மக்கள் சென்று வருவர். அடுத்த வாரம் சபரிமலை நடை மாத பூஜைக்காக திறந்து வைக்கப் பட்டு, பூஜைகள் நடைபெறும் நிலையில், பக்தர்கள் எவரும் வரவேண்டாம் என்று சபரிமலை தேவஸ்வம் போர்டு கேட்டுக் கொண்டிருக்கிறது.
இருந்த போதும், தென்காசி மாவட்ட பகுதிகளில் இருந்து பத்தனம்திட்ட மாவட்டத்திற்கு ( அதிலும் ராணி மற்றும் பத்தனம்திட்ட ஊருக்கு) பயணம் செய்தவர்கள், குறிப்பாக கடந்த இரண்டு வாரத்திற்குள் வந்து போனவர்கள் யாருக்கேனும் கொரோனா தொற்று அறிகுறிகள் தென்படுமாயின் உடனே தமிழக சுகாதாரத்துறையின் உதவி எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதன் காரணத்தால், தமிழக கேரள எல்லையான தென்காசி மாவட்டம் செங்கோட்டை பேரூந்து நிலையத்திற்கு வரும் தமிழக அரசு பேருந்துகள், கேரள மாநில அரசு பேருந்துகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இயந்திரம் மூலம் நகராட்சி சார்பில் மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.