temple marriage - 2026

வேலூர்:

அண்ணனைத் தள்ளி விட்டு திடீரென மணப் பெண்ணுக்கு தம்பி தாலி கட்டியதால் மண வீட்டார் இடையே பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த செல்லரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் காமராஜ்(54). இவருக்கு ரஞ்சித், ராஜேஷ், வினோத் என 3 மகன்கள். இவர்களில் ராஜேஷ், வினோத் ஆகியோர், திருப்பத்தூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்கின்றனர்.

கடந்த ஜனவரி மாதம், விருதுநகரைச் சேர்ந்த மாலாவுக்கும்(22) ராஜேஷூக்கும்(25) திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி திருமணம், திருப்பத்தூரை அடுத்த வெண்கல்குன்றம் பகுதியில் உள்ள முருகன் கோவிலில் நேற்று காலை 11 மணிக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது இதற்காக பெண் வீட்டார் செல்லரைபட்டியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தனர். நேற்று காலை அனைவரும் வெண்கல்குன்றம் முருகன் கோவிலுக்கு வந்தனர். மண மேடையில், கோவில் குருக்கள் சாமிநாதன் மணமகனிடம் தாலியை எடுத்துக் கொடுத்தார். அதை வாங்கி ராஜேஷ், மாலாவுக்குக் கட்ட முயன்றபோது, பின்னால் நின்று கொண்டிருந்த அவரது தம்பி வினோத்(23) திடீரென ராஜேஷை தள்ளி விட்டு, தன் ஏற்கெனவே வைத்திருந்த தாலியை எடுத்து மாலாவுக்குக் கட்டினார்.

ALSO READ:  சிறுபான்மை தாஜா அரசியல்; அள்ளிவிடும் தவெக., அரசுக்கு இந்து முன்னணி கண்டனம்!

திடீரென நிகந்த இந் நிகழ்வைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். மணமகன் ராஜேஷ் செய்வதறியாமல் திகைத்து நின்றார். இதனால் ஆத்திரமடைந்த மணப்பெண்ணின் உறவினர்கள் வினோத்தை தாக்கினர். பின் மணப்பெண்ணுக்குக் கட்டிய தாலியை கழற்றிவிட்டு, ராஜேஷே மீண்டும் தாலி கட்டும்படி வந்திருந்தவர்கள் கூறினர். ஆனால் அதற்கு அவர், தம்பி தாலி கட்டிய பிறகு, தன்னால் எப்படி மறு தாலி கட்ட முடியும் அழுது கொண்டே கேட்டவர், பின் தான் அணிந்திருந்த முகூர்த்த வேட்டி, சட்டையை கழற்றி எறிந்துவிட்டு, அங்கிருந்து வெளியேறினார். இதனால் மணப்பெண்ணின் உறவினர்கள், ஊர் பஞ்சாயத்தை கூட்டி நியாயம் கேட்டனர்.

மாலை நடந்த ஊர் பஞ்சாயத்தில், தான் அப்பெண்ணை விரும்பியதாக வினோத் கூறினார். அண்ணனுக்கு பெண் பார்க்க, விருதுநகருக்கு நானும் உடன் சென்றேன். அங்கு மாலாவைப் பார்த்ததும், எனக்கு மிகவும் பிடித்து விட்டது. இதனால் நானே மாலாவை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என முடிவு செய்தேன். இதனை பின்னர் மாலாவிடம் மொபைல்போன் மூலம் கூறினேன். முதலில் மறுத்த மாலா, பின்னர் சம்மதித்தார். நாங்கள் போட்ட திட்டப்படிதான் மாலாவுக்கு நான் தாலி கட்டினேன். ஆனால், இந்த விஷயத்தை, என் அண்ணன், தந்தையிடம் நான் கூறவில்லை என்றார்.

ALSO READ:  செல்போனுக்குத் தடை; கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தண்டனையா?

எனக்கு வினோத்தைப் பிடித்திருந்ததால், நானும் இந்த திட்டத்துக்கு சம்மதித்தேன். எனக்கு கணவர் வினோத்தான் என்று கூறினார் மாலா. ஆனால் மாலாவின் கருத்தை அவரது வீட்டார் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், மாலாவுக்கு வினோத் கட்டிய தாலியைக் கழற்றி, பஞ்சாயத்தாரிடம் கொடுத்து விட்டுச் சென்று விட்டனர். இது குறித்த தகவல் பரவியதால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending