சேலம் அருகே பாலத்தில் இருந்து ஆம்னி பஸ் 30 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 16 பேர் படுகாயம் அடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து பொள்ளாச்சி நோக்கி ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது சேலம் கொண்டாலம்பட்டி அருகே பட்டர்பிளை என்ற பாலத்தில் வந்து கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்தது.
விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் கிரேன்கள் மூலம் பள்ளத்தில் விழுந்த பஸ்சை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்தவர் பொள்ளாச்சியை சேர்ந்த தனசேகர் என தெரியவந்துள்ளது.
விபத்து குறித்து அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி மீட்புப் பணிகளைப் பார்வையிட்டார். அதிக பார்சல்களை ஏற்றி வந்ததுதான் இந்த விபத்துக்குக் காரணம் என சேலம் மாநகர ஆணையர் சங்கர் தெரிவித்தார்.