சென்னை: திமுக., அமமுக., இவை எல்லாம் நாட்டுக்குத் தேவையில்லாத கட்சிகள் என்றும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறினார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்.
தமிழகத்தில் பொதுத் தேர்தலுக்காக கூட்டணி அமைக்கும் முயற்சிகள் தீவிரம் அடைந்துள்ளன. அதிமுக., வாய் திறக்காவிட்டாலும், கூட்டணிப் பேச்சு முடிந்துவிட்டதாக, பாஜக.,வின் முரளிதர்ராவ் கூறியிருக்கிறார்.
இந்நிலையில், பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வருகிறது. ஆயினும் கட்சியில் தனக்கு செல்வாக்கு சரிந்து வருவதாலும், பாஜக., தன்னை உதாசீனம் செய்வதாலும், ஒதுங்க மறுக்கும் தம்பிதுரை அவ்வப்போது கூட்டணி குறித்த எதிர்மறைக் கருத்துகளைத் தெரிவித்து குழப்பமும் சலசலப்பும் ஏற்படுத்தி வருகிறார்.
இத்தகைய சூழநிலையில், சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்… நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து, கட்சியில் இருக்கும் தனிப்பட்ட மனிதரின் எந்த கருத்தையும் ஏற்க முடியாது. கடசியின் கருத்து என்பது அனைவரும் சேர்ந்து கூறுவது.
திமுக.,வே எங்களின் பிரதான எதிரி! துரோகி என்பது அமமுக.! எனவே.. திமுக, அமமுக கட்சிகள் நாட்டுக்கு அவசியமில்லை. இவ்விரு கட்சிகளைத் தவிர யாருடன் வேண்டுமானாலும் அதிமுக கூட்டணி வைத்துக் கொள்ளலாம். யாருடன் கூட்டணி என்பதை தலைமை முடிவு செய்து அதனை அதிகாரப் பூர்வமாக அறிவிக்கும். அப்போது தான் கூட்டணி யாருடன் என்பது தெரியவரும்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவின் இலக்கு 40 தொகுதிகளையும் அப்படியே கைப்பற்றுவதுதான். பாஜக, தேமுதிக கூட்டணி என்ற தகவல்களுக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. என்றார்.