தமிழக பாஜகவின் தலைமை அலுவலகமாக உள்ள கமலாலயம் 1998கடைசியில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் முக்தா சீனிவாசனிடம் இருந்து வாங்கப்பட்டது. Preview தியேட்டராக இருந்த இடத்தை வாங்கி சிலபல மாறுதல்களுடன் நம் கட்சி தலைமை அலுவகமாக மாற்றப்பட்டது. இதற்கு பெரிதும் உதவியாக இருந்து முடித்துக் கொடுத்தவர் மறைந்த மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம்.
1998ல் திருச்சி பாராளுமன்ற உறுப்பினராக முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட போது 11,400 ஓட்டில் வெற்றி பெற்றார். ஆனால் 13மாதங்களில் தன் சீரிய செயல்பாட்டால், மக்களிடம் ஏற்படுத்திக் கொண்ட நெருக்கத்தால் 1999ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் கிட்டத்தட்ட 90ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 1984 முதல் 1998 வரை திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற உறுப்பினராகவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் முக்கிய பிரமுகராகவும் இருந்த L அடைக்கலராஜின் அரசியல் வாழ்க்கை திருச்சியில் ரெங்காவின் அரசியல் பிரவேசத்திற்குப் பின் முடிவுக்கு வந்தது.
திருச்சி மாநகர, மாவட்ட முன்னேற்றத்திற்கும் கட்சிக்கு வேலை செய்யும் எளிய தொண்டனுக்கும் உறுதுணையாக இருந்தார் ரங்கா. அரசு அதிகாரிகளை எப்படி deal செய்ய வேண்டுமோ அப்படி deal செய்வதில் வல்லவர் ரங்கா. அப்போதைய திருச்சி கலெக்டராக இருந்த மூர்த்தி சம்பவம் ஒரு உதாரணம்.
என் நண்பர் ஒருவர் குடும்பமே நம் சித்தாந்தத்தில் இணைத்துக் கொண்டு மிகத் தீவிரமாக தொண்டு செய்பவர்கள். ஒருவர் மத்திய அரசு சார்பான துறையில் பணியில் இருந்தார். அடல்ஜியின் அரசு முதல்முறையாக பதவியேற்ற ஒரே மாதத்தில் பெங்களுர் மாற்றல் செய்யப்பட்டார். வார விடுமுறை நாட்களில் சென்னை வந்து குடும்பத்துடன் இருந்து விட்டு திங்கட்கிழமை பெங்களூர் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். நம் தரப்பில் இருந்து முக்கியமான ஒருவர் மாற்றலை நீக்கக் கோரி பரிந்துரை செய்தார்.
அதன்பின் அவர் கான்பூரிலிருந்து 150கிமீ தள்ளி transfer செய்யப்பட்டார். நொந்து போன நண்பன் பல விதங்களில் முயற்சி செய்தார், வெறுத்துப் போனார். அதன் பின் நம் வீரத்துறவி கோபால்ஜி ஏதோ ஒரு வேலையாக டெல்லி சென்ற போது நம் நண்பனையும் உடன் அழைத்துச் சென்று ரங்காவிடம் மீண்டும் சென்னைக்கு மாற்றம் பெற்றுத்தருமாறு வலியுறுத்தினார். அப்போது விவசாயத் துறை அமைச்சராக இருந்தவரை நேரில் சந்தித்து அடுத்த நாளே நம் நண்பனுக்கு transfer வாங்கிக் கொடுத்தார்.
1997கடைசியில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அத்வானி முன்னிலையில் டெல்லியில் இணைந்தார். இணைந்த பின் சென்னையில் அப்போது அஜிஸ் நகரில் இருந்த (தற்போது தென் சென்னை மாவட்ட அலுவலகம்) பாஜக தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அப்போது நான் தென் சென்னை மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர்.
அவருடன் விஜய நல்லேந்திரன், முன்னாள் MLA செங்கோட்டுவேலு, தற்போதைய சேலம் கோட்ட பொருப்பாளர் முருகேசன் என பலரும் வந்ததிருந்தனர்.மாடியிலிருந்து ஒரு ஆள் மட்டுமே தாராளமாக வரக் கூடிய படியில் கீழே இறங்கி வரும்போது என் தோளில் கை போட்டுக் கொண்டு அப்போதைய சூழ்நிலை தொடர்பாக ஓரிரு நிமிடத்தில் என்ன கேட்க முடியுமோ அதை கேட்டார். பிரமித்துப் போனேன்.
வாஜ்பாய் தலைமையிலானா ஆட்சிக்கு ஆதரவை ஜெயலலிதா விலக்கிக் கொண்ட பின் சட்ட அமைச்சர் தம்பிதுரை ராஜிநாமா செய்தார். அவர் அமைச்சராக இருந்த போது Central Government Standing counselல் நம் வழக்கறிஞர் ஒருவரை கூட நியமிக்க ஒப்புக்கொள்ளவில்லை. மாறாக அனைத்தையும் அதிமுக வக்கில்களையே நியமித்தார். அப்போதைய வக்கீல் அணி தலைவர் மாயவரம் ராஜேந்திரன் நம் தலைவர்கள் மூலம் தம்பித்துரையிடம் பேசியும் பலனில்லை.
ஆதரவை வாபஸ் பெற்றவுடன் ரங்கா மின்சாரத் துறையுடன் கூடுதலாக பாராளுமன்ற விவகாரம் மற்றும் சட்ட அமைச்சர் என 3துறையை இடைக்காலமாக கவனித்தார் என்றால் எந்த அளவுக்கு அவர் முக்கியத்துவம் பெற்றிருந்தார் என விளங்கும். தம்பித்துரை வெளியேறிய அடுத்த நொடி அண்ணன் மாயவரம் ராஜேந்திரன் கோரிக்கையை ஏற்று அனைத்து அதிமுக வக்கீல்களையும் மத்திய அரசு பொறுப்பிலிருந்து நீக்கி விட்டு முழுவதும் நம் கட்சிக்காரர்களை நியமித்தார் ரங்கா.
1999ல் பிரும்மாண்டமான மாநில மாநாட்டை திருச்சியில் நடத்தினார். அவர் மின்சாரத் துறை அமைச்சராக இருந்தபோது தான் நாட்டின் எதிர்கால வளர்ச்சியை கணக்கில் கொண்டு தனியாருக்கு மின்சாரம் தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டது. முதன் முதலில் காரைக்காலில் ஒரு தனியார் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. அதானல் தான் நம் நாடு இன்று மின்சார உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளது.
1984மதல் பாராளுமன்ற உறுப்பினர்; 1991 முதல் 1994வரை நரசிம்மராவ் மந்திரி சபையில் Science and Technology இணை அமைச்சர்.
அர்ஜுன் சிங், N D திவாரி, ஷீலா தீட்ஷித், வாழ்ப்பாடியார் ஆகியோர் திவாரி காங்கிரஸ் ஆரம்பித்தார்கள். இவர்களுடன் இணைந்து தமிழ் நாட்டில் திவாரி காங்கிரஸ் கட்சியில் 1997 கடைசி வரை இருந்தார்.1996ல் சேலம் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார்.
NSUI எனப்படும் மாணவர் காங்கிரஸ் ஆரம்ப கால தலைவர்களில் ஒருவர்; ராஜிவ்காந்தியின் தனிப்பட்ட நண்பர்; அப்பா மத்திய அமைச்சர்; தாத்தா மாநில முதல்வர்; அத்தை கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி தலைவர்… – என பல்வேறு சிறப்புகள் கொண்டவரும் தமிழக பாஜகவிற்கு உத்வேகமாகத் திகழ்ந்தவருமான ரெங்கராஜன் குமாரமங்கலத்தின் 20ம் ஆண்டு நினைவு நாள் இன்று.
– ஓமாம்புலியூர் ஜெயராமன் (பாஜக., பிரமுகர்)