வர்தாவும் வினோபாவும்…
-ஜெயஸ்ரீ எம்.சாரி, நாக்பூர்.
ஆச்சார்ய வினோபா பாவே என்றழைக்கப்படும் விநாயக் நரஹரி பாவே, தன்னுடைய கர்ம பூமியாக மஹராஷ்டிர மாநிலத்தில் உள்ள வர்தா நகரத்தை ஏற்படுத்திக் கொண்டார்.
விநாயக் பாவே, மஹாராஷ்டிராவில் காகோடே( Gagode) என்னும் இடத்தில் செப்டம்பர் 11, 1895 பிறந்தார். முதன்முதலாக 1921- ம் வருடம் ஆசார்ய வினோபா பாவே வர்தா வந்தடைந்தார். வர்தாவிற்கு அருகில் பவனார் என்னும் இடத்தில் தாம் (Dham) நதிக்கரையின் அருகாமையில் ஒர் இடத்தில் தங்க இசைந்தார். அப்போதிலிருந்து பதினேழு வருடங்கள் சமூக சேவையிலும், ஆன்மீகத்திலும் அவர் ஈடுபட்டார்.
புகழ்பெற்ற ‘பூதான்’ (பூமி தானம்) இயக்கத்தையும் அவர் பவனாரிலிருந்து தான் தொடங்கினார். பாதயாத்திரையின் மூலம் நிலமில்லா ஏழைகளுக்கு நிலம் தருமாறு செல்வந்தர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டினார்.
இவரது ஆசிரமம் “பிரம்ம வித்யாமந்திர்’ என்னும் பெயரில் பவனாரில் 1959- ம் ஆண்டு தொடங்கினார்.
சந்தையைச் சார்ந்து வாழாமல், தங்களுக்கு தேவையானவற்றை தாமே உருவாக்கி கொள்ளுதல்’ என்பதில் தீவிரமாய் இருந்து வினோபாவின் சீடர்கள் இன்றும் ஆசிரமத்தில் கடைப்பிடித்து வருகின்றனர்.
காந்தியடிகளிின் கொள்கையினால் ஈர்க்கப்பட்டு சுதந்திரப் போராட்டத்திலும் ஈடுபட்டார் வினோபா பாவே. சிறந்த சமூக சேவகர், எம்மதமும் சம்மதம் என்னும் கொள்கையுடையவராய் ‘ஜெய் ஜகத்’ என்னும் கொள்கையைப் பின்பற்றுவராய் இருந்தார்.
காந்தியடிகளின் ஆன்மீக சீடராக வினோபா பாவே கருதப்பட்டார். பகவத் கீதையே தனது வழிகாட்டி என்று கூறிய அவர், தன் தாய் ருக்மிணி தேவிக்காக பகவத் கீதாவை மராட்டிய மொழியில் ‘கீதாயி’ ( கீதா+ஆயி- கீதா அன்னை) என்று மொழிபெயர்த்துள்ளார்.
வர்தாவில் கோபுரி என்னும் இடத்தில் ‘ கீதாயி மந்திரில்’ அவர் எழுதிய ‘கீதாயி’, கற்களில் பொறிக்கப்பட்டுள்ளது. கீதாயி மந்திரின் நுழைவு வாயிலில் ஆசார்ய வினோபா பாவே கைப்பட எழுதப்பட்ட வாசகமான ‘கீதாயி – என் அன்னை, நான் அவரின் குழந்தை. நான் விழுந்தாலும், அழுதாலும், அவர் என்னை பார்த்துக் கொள்வார்’- பார்வையோர்களை வரவேற்கிறது.
காந்தியடிகளின் விருப்பப்படி, ஆசார்யா வினோபா பாவே மற்றும் ஜம்னாலால் பஜாஜ் ஆகியோரின் முயற்சியால் இந்தியாவிலேயே முதன் முதலில் வர்தாவில் உள்ள லெஷ்மி நாராயண் மந்திரில் பிற்படுத்த மக்கள் கடவுளை தரிசிக்க அனுமதிக்கப் பட்டனர். 1928- ம் ஆண்டு ஜுலை திங்கள் 17- ம் நாளன்று அந்த வரலாறு படைக்கப்பட்டது.
அச்சமயத்தில் வினோபா பாவே “எனக்கு இன்று சுவாமி லெஷ்மி நாராயணன் மூர்த்தியில் இருந்து கிடைக்கும் தரிசனம் எனக்கு நேற்று வரை கிடைக்கவில்லை. இப்பொழுதைய இன்பம் விவரிக்கமுடியாது,” என்று உணர்ச்சி பூர்வமாக கூறினாராம்.
காந்தியடிகள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்கு செல்லும் முன் இந்த கோவிலில் வழிபட்டு சென்றதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
ஆசார்யா வினோபாவே தன் 87-ம் வயதில் நவம்பர் 15-ந் தேதி பவனாரில் இயற்கை எய்தினார்.