வைகோவின் ஞாபக சக்தி மிக அபாரமானது! எங்கோ காங்கோவில் 1963 ல் கொல்லப்பட்ட போராளி பெயரை துணைப்பெயர், முதற்பெயர் உட்பட நினைவுகூர்வார்!
உலக வரைபடத்திலேயே துக்குணியூண்டு நாட்டில் ராணுவ சர்வாதிகாரத்துக்கு எதிராக, பீரங்கிக்கு நெஞ்சை நிமிர்த்தி நின்ற எவனோ ஒரு சிறுவனின் தாய், தகப்பன் எல்லார் பெயரையும் ‘கட கட’ என்று நினைவுகூர்வார்!
இன்னும் கிளிநொச்சியில், யாழ்ப்பாணத்தில், வவுனியாவில், மாத்தளையில்… ஈழப் போரில் உயிர்விட்ட (விடுதலைப் புலிகளை மட்டும்) இளைஞர்களைத் தேதிவாரியாக நினைவுகூர்வார்!
ஒரு சிறுகுறிப்பு, துண்டுச்சீட்டு கூட இல்லாமல் (ஆமாம் ‘துண்டுச் சீட்டு’தான்) எதையும் பார்க்காமல், ஜிப்பா பாக்கெட்டில் கையை விட்டபடி ஸ்டைலா அப்பப்ப தலையைக் கோதிவிட்டபடி, தோளை லேசாகக் குலுக்கியபடி, மடைதிறந்த வெள்ளமாக….
மாவோவின் நடைப்பயண (LONG NARCH) புரட்சியில் வழி நெடுக சீனாவின் ஒவ்வொரு ப்ராவின்ஸ் வாரியாக உயிர்விட்டவர்களின் பெயர்கள்….
எங்கோ சோமாலியப் புரட்சியில் உயிர்த்தியாகம் செய்தவர்கள்…
ஃபிரெஞ்சுப் புரட்சிக்குப் பின் கில்லடின் எந்திரத்தில் வைத்துக் கொல்லப்பட்ட அரச குலப் பிரபுக்கள்… அவ்வளவு ஏன் அந்த ‘கில்லடின்’ சிரச் சேதம் செய்யும் கருவியை இயக்கியவன் பெயரைக் கூட அநாயாசமாக நினைவு கூர்வார்! அந்த சரளமான பேச்சும், அவர் ஸ்டைலாக மேடையில் நிற்பதும் அவ்வளவு அழகு!
அவ்வளவு விவரமும் விரல் நுனியில் அவருக்கு! அவ்வளவு நினைவாற்றல் அவருக்கு! GREAT REALLY GREAT!
ஆனால் என்ன ஒண்ணு, திமுக-வில் இருந்து இவர் மீது கொலைப்பழி சுமத்தி இவரை வெளியேற்றியதும், இவருக்காகத் தீக்குளித்த…
இடிமழை உதயன், நொச்சிப்பட்டி தண்டபாணி இரண்டு பேரையும்தான் மறந்து தொலைச்சிட்டார்!
- முரளி சீதாராமன்