![திருப்புகழ் கதைகள்: புலவர் பெற்ற மரியாதை! 1 thiruppugazh stories](https://dhinasari.com/wp-content/uploads/2021/05/thiruppugazh-stories-1024x576.jpg)
திருப்புகழ்க் கதைகள் 139
~ முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
அதல விதல முதல் – பழநி
முரசு – புலவர் பெற்ற மரியாதை
முரசால் தமிழ்ப் புலவர் பெற்ற மரியாதை பற்றிய கதை ஒன்று இருக்கிறது. புலவர் மோசிகீரனார் நல்ல வெயிலில் பசிக் களைப்போடு பல காத தூரம் நடந்து வந்திருந்தார். சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையின் அரண்மனைக்குள் அவர் நுழைந்தபோது அலுப்பும், சோர்வும் அவரைக் கிறக்கமடையச் செய்திருந்தன. உறக்கம் கண் இமைகளை அழுத்தியது. எங்கேயாவது ஒரிடத்தில் கொஞ்சநேரம் படுத்து உறங்கினாலொழியக் களைப்பு தீராது என்று தோன்றியது.
அரண்மனையின் முன் பகுதியில் நின்றுகொண்டு சுற்றும் முற்றும் பார்த்தார். அங்கே ஒரு மண்டபத்தின் நடுவில், மேடை மேல் அழகான கட்டில் ஒன்று கிடந்தது. அது அரசனின் முரசு கட்டில். அதனை எளிதில் புலவர் அனுமானித்து இருக்கலாம். ஆனால் புலவருக்கு அப்போதிருந்த களைப்பில் அவற்றையெல்லாம் எண்ணத் தோன்றவில்லை.
வேகமாகச் சென்று அந்தக் கட்டிலில் ஏறிப் படுத்துவிட்டார். கையைத் தலைக்கு தலையணையாக வைத்துக்கொண்டு படுத்தவர் விரைவில் நல்ல தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டார். அவரது உடல் தன்னை மறந்த உறக்கத்தில் உணர்வொடுங்கியிருந்தது. உறக்கத்தின்போது அங்கே மண்டபத்திற்குள் யார் வந்தார்கள்? என்ன செய்தார்கள்? என்பதே அவருக்குத் தெரியாது.
மறுபடியும் அவர் கண்விழித்தபோது திகைப்படையத்தக்க காட்சியைக் கட்டிலின் அருகே கண்டார். மன்னர் மன்னனாகிய பெருஞ்சேரல் இரும்பொறை மயில்தோகையாற் செய்யப்பட்ட விசிறியால் தமக்கு வீசிக்கொண்டிருப்பதைக் அவர் கண்டார். அவருக்குத் தூக்கிவாரிப் போட்டது. கட்டிவிலிருந்து கீழே குதித்து இறங்கினார்.
அதனைக் கண்ட அரசன் “ஏன் எழுந்துவிட்டீர்கள் புலவரே? இன்னும் உறங்க வேண்டுமானால் உறங்குங்கள். இன்னும் சிறிதுநேரம் உங்கள் பொன்னான உடம்புக்கு விசிறியால் வீசுகின்ற பாக்கியத்தை யாவது நான் பெறுவேனே?’ என சிரித்துக் கொண்டே கூறினான்.
அரசனைச் சுற்றி நின்றவர்கள் கையில் பெரிய முரசம் ஒன்றைத் தாங்கிக் கொண்டு நிற்பதைப் புலவர் அப்போதுதான் கவனித்தார். உடனே திடுக்கிட்டார். அவர் உடல் வெடவெட வென்று நடுங்கியது. கண்கள் பயத்தால் மிரண்டன. வாயில் பேச்சு எழாமல் பயத்தினால் நாகுழறியது.
![திருப்புகழ் கதைகள்: புலவர் பெற்ற மரியாதை! 2 arunagiri muruga peruman](https://dhinasari.com/wp-content/uploads/2021/04/arunagiri-muruga-peruman.jpg)
முரசு கட்டிலில் முரசு தவிர வேறு மனிதர்கள் யாராவது ஏறினால் அவர்களை அந்தக்கணமே வாளால் வெட்டிக் கொன்றுவிடுவது வழக்கம். அவர் அரண் மனைக்குள் நுழைந்த நேரத்தில் அந்தக் கட்டில் முரசு இருக்கவில்லை. ஏனெனில், காவலர்கள் முரசத்தை நீராட்டுவதற்கு எடுத்துக் கொண்டு போயிருந்ததுதான்.
மோசிகீரனார் அரசனிடம் தனக்கு ஏன் தண்டனை அளிக்கவில்லை என்று பதட்டத்துடன் கேட்டார். அதற்கு அரசன், “வேறொருவர் இதே காரியத்தைச் செய்திருந்தால் முறைப் படி அவ்வாறு செய்திருக்கத் தயங்க மாட்டேன் புலவரே நான் இந்தப் பக்கமாக வரும்போது கட்டிலில் ஆள் படுத்திருப்பதைக் கண்டு ஆத்திரத்தோடு வாளை உருவிக் கொண்டுதான் வந்தேன். நல்லவேளையாக நீங்கள் அப்போது புரண்டுபடுத்தீர்கள்.
உங்கள் முகத்தைக் கண்டு கொண்டேன். கோபம் அடங்கியது. தமிழுக்கு மரியாதை செய்வது என் கடமை, உருவிய வாளை உறைக்குள் போட்டேன். எழுந்த ஆத்திரத்தை அன்பிற்குள் அடக்கினதைப் போல. அப்போதிருந்தே விசிறியை எடுத்து வீசிக்கொண்டுதான் இருக்கிறேன்.
நடுவில் நீராட்டச் சென்றிருந்த இவர்கள் முரசத்தை வைப்பதற்காகக் கொண்டு வந்தார்கள், உங்கள் அமைதியான உறக்கம் கலைந்துவிடக்கூடாதே’ என்பதற்காக இவர்களை இப்படியே தடுத்து நிறுத்தி வைத்தேன். இப்போதுதான் உங்கள் தூக்கம் கலைந்தது. நீங்கள் எழுந்திருந்தீர்கள்” எனக் கூறினான்.
புலவர் மோசிகீரனார் நன்றிப் பெருக்கினால் கண்களில் நீர் சுரக்க அவனை அப்படியே இறுகத் தழுவிக்கொண்டார். “தமிழுக்காக இவ்வளவு பெரிய மன்னிப்பா? மன்னிக்க முடியாத பிழையை நீங்கள் மன்னித்துவிட்டீர்கள் அரசே!” என்றார். அதற்கு அரசன் “இல்லை புலவரே! நீங்கள் என்னை அதிகமாகப் புகழ்கிறீர்கள். அளவுக்குமீறி நன்றி செலுத்துகிறீர்கள். தமிழுக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம். நான் செய்ததோ மிகச்சிறிய காரியம்”
அதன் பின்னர், அரசன் புலவரை அழைத்துக் கொண்டு அரண்மனைக்குள் சென்றான். மோசிகீரனார் தூக்கக் கிறக்கம் தணிந்து அவனோடு சென்றார். அவர் உள்ளம் தமிழை வாழ்த்திக் கொண்டிருந்தது. தமிழ்ப்புலமைக்குத் தமிழ் அரசு செய்த மரியாதைக்கு இந்தச் சம்பவம் ஒரு சரியான அளவுகோலாக விளங்குகின்றது. இதோ அந்த புறநாநூற்றுப் பாடல்.
மாசற விசித்த வார்புறு வள்பின்
மைபடு மருங்குல் பொலிய மஞ்ஞை
ஒலிநெடும் பீலி ஒண்பொறி மணித்தார்
பொலங்குழை உழிஞையொடு பொலியச் சூட்டிக்
குருதி வேட்கை உருகெழு முரசம்
மண்ணி வாரா அளவை எண்ணெய்
நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை
அறியா தேறிய என்னைத் தெறுவர
இருபாற் படுக்கும்நின் வாள்வாய் ஒழித்ததை
அதூஉம் சாலும்நல் தமிழ் முழுது அறிதல்
அதனொடும் அமையாது அணுக வந்துநின்
மதனுடை முழவுத்தோள் ஒச்சித் தண்ணென
வீசி யோயேவியலிடம் கமழ
இவணிசை உடையோர்க் கல்லது அவணது
உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை
விளங்கக் கேட்ட மாறுகொல்
வலம்படு குரிசில் நீ ஈங்கிது செயலே! (புறநானூறு – 50)
விசித்த = கட்டிய, வார்புறு = வாரையுடைய, மஞ்ஞை = மயில், பீலி= மயில் தோகை, மண்ணி = நீராட்டி, சேக்கை = விரிப்பு, தெறுவர = பிளந்து போக, சாலும் = அமையும், மதன் = வலிமை, முழவு = மத்தளம், குருசில்=அரசனே, இசை = புகழ், வலம்= வெற்றி, பொலம் = பொன், உறையுள் = வசிப்பது.
முரசால் தமிழுக்குக் கிடைத்த மரியாதை இது.