சிட்னி:
ஆஸ்திரேலியாவுடனான 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. கடைசி பந்தில் 4 ரன் அடித்து சுரேஷ் ரெய்னா வெற்றிக்கு வழிவகுத்தார்.
ஏற்கெனவே முதல் இரு டி20 போட்டிகளிலும் வென்று தொடரை வென்ற இந்திய அணி, 3வது டி20 போட்டியிலும் வென்று ஆஸ்திரேலியாவை 3-0 என்ற கணக்கில் முழுவதும் வென்று சாதனை படைத்தது.
ஏற்கெனவே 2 போட்டிகளில் தோல்வி அடைந்ததால், கடைசிப் போட்டியான இந்தப் போட்டிக்காக, வாட்சன் கேப்டன் பொறுப்பை ஏற்றிருந்தார். இன்று டாஸ் வென்ற வாட்சன், முதலில் பேட் செய்யப் போவதாக அறிவித்தார். இதை அடுத்து களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 197 ரன் எடுத்து 198 ரன் என்ற கடின இலக்கை நிர்ணயித்தது.
காவாஜா 14 ரன்னும் மார்ஷ் 9 ரன், மேக்ஸ்வெல் 3 ரன்னும் எடுத்து ஏமாற்றிய போதும், வாட்சன் தனி ஆளாக நின்று அதிரடி காட்டி 71 பந்துகளில் 124 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஹெட் 26 ரன்னும், லைன் 13 ரன்னும் எடுத்தனர். இறுதியில் 5 விக்கெட் இழப்புக்கு 197 ரன் எடுத்தது ஆஸ்திரெலிய அணி.
198 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியில், துவக்க வீரர் ரோஹித் அதிரடி காட்டினார். 38 பந்துகளில் 52 ரன் எடுத்தார் அவர். அவருடன் களம் இறங்கிய தவான் 9 பந்துகளில் 26 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த விராட் கோலி தனது வழக்கமான அதிரடியில் 36 பந்துகளில் 50 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். வெற்றிக்கு வெகு தொலைவு இருந்த நேரத்தில் களம் இறங்கிய சுரேஷ் ரெய்னா, 25 பந்துகளில் 49 ரன் குவித்து வெற்றி இலக்கை பூர்த்தி செய்தார். அவருடன் உதவியாக யுவராஜ் சிங் 12 பந்துகளில் 15 ரன் எடுத்தார்.
இறுதியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.
தொடர் நாயகன் விருதை விராட் கோலியும், இன்றைய ஆட்ட நாயகன் விருதை வாட்சனும் பெற்றனர்.