பஸ்களில் ஏறி அமர்ந்ததும் ஜன்னல் ஓர சீட் வேண்டும் என்றால், பக்கத்தில் அமர்ந்து கொண்டு, உவ்வே என்று ஒரு குமட்டு குமட்டி நடிப்பு ஆக்ஷன் கொடுத்தால்… ஜன்னலோர சீட்காரர் எழுந்து இடம் கொடுத்து… நீயே உட்கார்ந்து வா என்று சொல்லி நகர்ந்து விடுவார்.
அப்படி ஒரு ஐடியாவை, கொரோனா வைரஸ் பயத்தை பயன்படுத்தி ஒரு பெண் தன்னை ஆபத்தில் இருந்து விடுவித்துக் கொண்டிருக்கிறார். இது போல் இப்போது கேலி செய்யும் வீடியோக்களும் சீனாவில் பரவலாகி விட்டது. அப்படி ஒரு வீடியோ இது…
ஆனால் நிஜத்திலும் இப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது. சீனாவில் கொரோனா வைரஸ் முதலில் கண்டறியப்பட்ட வூஹான் நகரில் இருந்து சுமார் 150 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது ஜிங்ஷான் நகரம். இங்கு கடந்த வாரம் 25 வயதுள்ள இளம்பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது கொள்ளையடிப்பதற்காக வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர், அந்தப் பெண் தனியாக இருப்பதை அறிந்து, அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். கூச்சலிட்ட அப்பெண்ணின் கழுத்தை நெரித்தும், வாயை மூடியும் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
மர்மநபரிடம் இருந்து தப்பிப்பதற்காக அப்பெண் சமயோஜிதமாக யோசித்து பலமாக இருமி உள்ளார். மேலும் தன்னை பலாத்காரம் செய்ய வந்த மர்ம நபரிடம், தான் வூஹான் நகரில் இருந்து வந்திருப்பதாகவும், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட தன்னை சிகிச்சைக்காக தனிமையில் வைத்துள்ளதாகவும் கூறிவிட்டு.. மேலும் பலமாக இருமி உள்ளார்.
அவ்வளவுதான் அந்த மர்மநபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். பின்னர் அப்பெண் அளித்த புகாரின் பேரில் மர்ம நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.