இந்தியா தென் ஆப்பிரிக்கா மூன்றாவது டெஸ்ட் நான்காம் நாள் ஆட்டம்
தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்-
தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. இந்திய அணி முதல் இன்னிங்ஸ் 223 & இரண்டாவது இன்னிங்ஸ் 198; தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸ் 210 & இரண்டாவது இன்னிங்ஸ் 212. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.
இந்திய பவுலர்கள் 111 ரன்களுக்குள் தென் ஆப்பிரிக்க அணியின் அனைத்து விக்கட்டுகளையும் எடுக்க கடும் முயற்சி செய்தனர். அவர்களுடைய பந்து வீச்சில் பெரிதாக குறை சொல்வதற்கு எதுவும் இல்லை. புஜாரா இரண்டாவது ஸ்லிப்பில் ஒரு சுலபமான கேட்சைத் தவறவிட்டார். இந்திய அணி வீரர்கள் பல முறை எல்.பி.டபில்யூ, விக்கட் கீப்பர் கேட்ச் ஆகியவற்றிற்கு அப்பீல் செய்தனர். ஆனால் மூன்றாவது அம்பயரால் அவை அனைத்தும் நிராகரிக்கப்பட்டது.
இந்திய அணி 198 ரன் எடுப்பதற்கு 67.3 ஓவர்கள் ஆனது; அதற்குள் அனைத்து விக்கட்டுகளும் இழந்தது. தெனாப்பிரிக்க அணி 211 ரன்கள் எடுக்க 63.3 ஓவர்கள் எடுத்துக்கொண்டது; ஆனால் மூன்று விக்கட்டுகள் மட்டுமே இழந்தது.
ஆடுகளம் மட்டையாடுபவ்ர்களுக்குச் சாதகமானது என முதல் நாளே சொல்லப்பட்டது. அது உண்மை என தென் ஆப்பிரிக்க மட்டையாளர்கள் நிரூபித்தனர். வலுவான பேட்டிங் அணி என எண்ணப்பட்ட இந்திய அணி வீரர்கள் சொதப்பிவிட்டார்கள்.
தென் ஆப்பிரிக்க அணியின் பீட்டர்சன் 82 ரன் எடுத்தார். இன்று அவுட் ஆன ஒரே தென் ஆப்பிரிக்க வீரர் அவர்தான். இவர் முதல் இன்னிங்ஸில் 72 ரன் எடுத்தது நினைவிருக்கலாம். அவர் இந்த மேட்சின் ஆட்ட நாயகராகவும் இந்தத் தொடரின் ஆட்ட நாயகராகவும் அறிவிக்கப்பட்டார்.
இந்திய அணியின் டெஸ்ட் அணிவீரர்களில் புஜாராவையும் ரஹானேயையும் நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெறும். அடுத்து மூன்று ஒருநாள் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன. ஜனவரி 19, 21 மற்றும் 23ஆம் தேதிகளில் ஒருநாள் போட்டிகள் நடைபெறும்.