11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தேதிகளை அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
12ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 3ம் தேதி முதல் 13ம் தேதி வரையிலும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 14ம் தேதி முதல் 25ம் தேதிக்குள்ளும் செய்முறை தேர்வுகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள் பொதுப் பிரிவு மற்றும் தொழிற்கல்வி பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகளை புதிய பாடத்திட்டத்தின்படி பிப்ரவரி 3ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரையிலான நாட்களில் கண்டிப்பாக நடத்த வேண்டும்.
குறிப்பிட்ட தேதிகளுக்குள் எந்த நாட்களில் எந்தெந்த பாடங்களுக்கு செய்முறை தேர்வுகள் நடைபெறுகிறது என்பது குறித்த முடிவை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் முடிவு செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
பொதுப்பிரிவு மற்றும் தொழிற்பிரிவு மாணவர்களுக்கான தேர்வுகளை குறிப்பிட்ட நாட்களுக்குள் முடித்து மதிப்பெண் பட்டியலில் உள்ளீடு செய்திருக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்முறை தேர்வின் மதிப்பெண் பட்டியலை அரசு தேர்வுகள் இயக்ககத்திற்கு மார்ச் 3ம் தேதிக்குள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அனுப்ப வேண்டும் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககத்தின் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசு தேர்வுத்துறை இயக்கம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் செய்முறை தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.