ஆபாசப் படங்கள் பார்ப்பவர்கள் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தமிழகக் காவல்துறைக்கு சில மாதங்களுக்கு முன்னர் தகவல் கொடுத்தது.
அதன் படி, ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யும் நபர்களின் லிஸ்டை காவல்துறை தயார் செய்தது. அதன் பின்னர் ஆபாசப் படம் பார்ப்பது தொடர்பாகத் திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இது ஆபாசப் படங்கள் பதிவிறக்கம் செய்பவர்களை பீதி அடையச் செய்தது. சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.டி.ஜி.பி ரவி, ஆபாசப் படங்கள் பார்ப்பவர்கள் பட்டியல் குறைந்துள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இது தொடர்பான விசாரணை மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய மையம் கொடுத்த தகவலின் பேரில், தொழில்நுட்ப ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதாவது ஆபாசப் படங்களைப் பதிவிறக்கம் செய்பவர்களின் ஐபி முகவரியைக் கண்டுபிடிக்கும் பணி நடைபெற்றது.
அதில் சுமார் 600க்கும் மேற்பட்ட நபர்களின் முகவரி கண்டுபிடிக்கப் பட்டதாகவும், சென்னையில் மட்டும் 150 பேரின் முகவரிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கோவையில் 40 பேரிடமும் திருச்சியில் 20 பேரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், அந்த 600 பேர் பற்றிய தகவலும் மாவட்ட வாரியாக காவல்துறையினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆபாச வீடீயோக்கள் பதிவிறக்கம் செய்தது உறுதி செய்யப்பட்டால் கைது நடவடிக்கை தொடரும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.