ராமர் படத்தை பெரியார் செருப்பால் அடித்தார் என்று ரஜனி பேசியதாகச் சொல்லி ஊடகங்களில் விவாதங்கள் நடக்கின்றன. பெரியார் மீது வீசப்பட்ட செருப்பு, அவர் வந்த வாகனத்திற்குப் பின்னால் இருந்த வாகனத்தில் விழுந்தது, அதைக் கொண்டு பெரியாரின் தொண்டர் ராமர் படத்தைச் செருப்பால் அடித்ததாக விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன.
ஆனால்-
பெரியார் ராமரைச் செருப்பால் அடித்தார் என்று ரஜனி பேசவே இல்லை! சொல்லாத ஒன்றை வைத்துக் கொண்டு இத்தனை கும்மி!
நான் அந்தக் கூட்டத்திற்குப் போயிருந்தேன்.அதன் வீடியோவையும் பார்த்தேன். உண்மையில் ரஜனி சொன்னது என்ன? (verbatium) “நைன்டீன் செவன்டி ஒன்ல, சேலம்ல, பெரியார் அவர்கள், ஸ்ரீராமச்சந்தர மூர்த்தி-சீதை உடையில்லாம, செருப்புமாலை போட்டு ஒரு ஊர்வலம் போனாங்க” (சந்தேகம் இருப்பவர்கள் வீடியோவைப் போட்டுக் கேட்டுக் கொள்ளலாம். இணைப்பு முதல் கமெண்ட்டில்)
இதில் எங்காவது பெரியார் அடித்தார் என்று ரஜனி சொல்லியிருக்காரா? செருப்பு மாலை போட்டு ஊர்வலம் போனார்கள் என்று சொல்லி இருக்கிறார். அந்த ஊர்வலம் பெரியார் ஏற்பாடு செய்த ஊர்வலம் என்று சொல்கிறார். அது தி.க நடத்திய ஊர்வலம் என்பதை தி.க. வினரே ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்
சரி, செருப்புமாலை போடப்பட்டதா? இதைக் குறித்து செய்தியளர்களிடம் அன்றைய முதல்வர் கருணாநிதி பேசியதை 1.2.1971 அன்று தினத்தந்தி வெளியிட்டிருக்கிறது. அதில் கருணாநிதி, “அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்தபோது,1967ல் நடைபெற்ற தேர்தலில் கும்பகோணத்தில் சங்கராச்சாரியார் படத்திற்கு திராவிடர் கழகத்தினர் செருப்பு மாலை போட்டு வைத்ததை அப்போதிருந்த காமராஜரும் கண்டிக்கவில்லை.ஆட்சியும் கண்டிக்கவில்லை. அப்போது பார்த்துக் கொண்டிருந்ததைப் போல் இப்போதும் பார்த்துக் கொண்டிருக்கலாம் என்று போலீசார் எண்ணிவிட்டார்கள் போலும்” (இது இன்றைய தினத்தந்தியில் மீள் பிரசுரம் ஆகி உள்ளது)
இது சொல்வது என்ன?
1.வணக்கத்திற்குரியவர் என்று இந்துக்கள் கருதுபவர்களுக்குச் செருப்பு மாலை போடும் வழக்கம்/கலாசாரம் தி.க.வில் உண்டு
2.அப்போது (1967ல்) செய்ததைப் போல இப்போதும் (1971லிலும்) செய்தார்கள். அதைப் போலீஸ் பார்த்துக் கொண்டிருந்தது
சரி, ஆபாசம் இருந்ததா?
அதற்கும் அந்த சந்திப்பில் கருணாநிதியே பதில் சொல்லியிருக்கிறார்
“மதவாதிகள் மனம் புண்படும்படியாக ராமர் சிலை போன்றவைகளை சேலம் மாநாட்டு ஊர்வலத்தில் ஆபாசப்படுத்தியதாகவும் வந்த செய்திகண்டு நான் வருத்தப்படுகிறேன்”
இப்போது ஊடகங்கள் சொல்லட்டும்: ரஜனி மன்னிப்புக் கேட்க வேண்டுமா?
- மாலன் நாராயணன்