கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள சீனாவின் டியாஞ்சின் நகரில் இருந்து சென்னை வந்த விமானத்தில், தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவர் மட்டும் பயணித்தது தெரிய வந்துள்ளது.
சீனாவை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இதனால், 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பாதிப்பு உலகின் பல நாடுகளை எட்டியுள்ளது. இந்தியாவிலும் கேரளாவை சேர்ந்த மாணவி ஒருவர் மூலம் பரவியுள்ளது.
அந்த மாணவி, திருச்சூரில் உள்ள அரசு மருத்துவமனையில் இருந்து மருத்துவ கல்லூரிக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக ஏராளமானோர் சீனாவில் இருந்து வெளியேறி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையை சேர்ந்த எம். வேலம் என்ற மாணவி சீனாவின் டியாஞ்சின் நகரில் எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு படித்து வருகிறார். இவர் நேற்று(ஜன.,30) விமானம் மூலம் சொந்த ஊர் திரும்பியுள்ளார். பல்வேறு விமான நிறுவனங்களும் சீனாவுடனான போக்குவரத்தை நிறுத்தியுள்ள நிலையில், அங்கிருந்த வந்த கடைசி நபர் இவராகத்தான் இருக்கும் எனக்கூறப்படுகிறது.
டியாஞ்சினில் இருந்து சிங்கப்பூர் வழியாக வந்த விமானத்தில் இவர் ஒருவர் மட்டுமே பயணித்துள்ளார்.
விமானத்தில் தான் மட்டுமே இருக்கும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.இது தொடர்பாக வேலமின் தந்தை முத்து கூறுகையில், சீனாவில் இருந்து மருத்துவ சேவையாற்ற வேலம் விரும்பினார். ஆனால், தங்களின் விருப்பத்தின் பேரில் தாயகம் திரும்பியுள்ளார்.
அவரை, விமான நிலையத்தில் முறையான மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே வெளியேற அனுமதிக்கப்பட்டார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.