![உடையவர் திருநக்ஷத்திரம் இன்று: சித்திரை திருவாதிரை! 1 sriramanuja](https://dhinasari.com/wp-content/uploads/2022/05/sriramanuja-1024x576.jpg)
ஸ்ரீராமாநுஜாச்சாரியரின் 1007 வது திரு நட்சத்திரம் இன்று. #ஸ்ரீவைஷ்ணவ_லட்சணம் என ஒன்று இன்று இருக்கிறது என்றால் அதற்கு காரணம் இந்த மஹாபுருஷர் தான். ஸ்ரீ பாஷ்யம் சமைத்த பவிஷதாச்சார்யரும் இவரே.
பலருக்கும் ஒரு சந்தேகம் இருக்கிறது…… அத்வைதம் ஸ்தாபித்த ஆதி சங்கரரும் பரம பவித்ர விஷட்டாத்வைதம் பேசின இந்த ஆதிஷேச அம்சமான இலட்சுமண முனிக்கும் ஒரே நட்சத்திரமா என்று…
ஆம். நம் ஆச்சாரிய மஹநீயர் இருவருக்கும் ஓரே நட்சத்திரம் தான். ஆனால் ஆதிசங்கரருக்கு விசாக (வைகாசி) மாதத்தில் வரும் சுக்லபட்ச திருவாதிரை. இவருக்கு சித்திரை மாதத்தில் வரும் திருவாதிரை.அவர் ஜனித்து இவ்வாண்டோடு 1236 ஆண்டுகள் ஆகுவதாக ஓர் கணக்கு உண்டு.இவருக்கு இது 1007 ஆம் ஆண்டு. அவர் பேசினது… ஸ்தாபித்தது…. #அத்வைதம் என்றால் இவர் ஸ்திரமாக நின்றது #விஷ்டாத்வைதம்.
முன்னது விதை என்ற பின்னது அந்த விதை வெடித்து, கிளர்ந்து விருட்சமாக வளர்ந்து அதில் பூத்துக் குலுங்கிய மலர்.
இங்கு நம்மில் பலரும் ஆதிசங்கரரை சைவம் என்கிற சிறு கோட்பாட்டு வட்டத்தினுள் அடக்கி விடுகிறோம். ஆனால் அது தவறு .அவர் ஆகச் சிறந்த அத்வைத ஏகாங்கி. பல வைணவ குருமார்களும் அத்வைதிகளாக இருந்திருக்கிறார்கள்…… மடங்கள் எல்லாம் அந்நாளில் இருந்திருக்கிறது.
பஜ கோவிந்தம் பேசியதும் ஆதி சங்கரர் தான். கனகதாரா மற்றும் கராவலம்பம் ஸ்தோத்திரம் சமைத்ததும் ஆதிசங்கரர் தான்.கீதா பாஷியத்தை முன்னெடுத்து அன்றிருந்த நாஸ்தீகவாதிகளை நைய புடைத்ததும் ஆதி சங்கரர் தான்.அதன் பொருட்டே ஸ்ரீமத் பாகவத புராணத்தில் மத்தியில் உள்ள மஹாபாரதத்தில், நடுநாயகமாக விளங்கும் கீதைக்கு ……… அந்த உதேசத்திற்கான வியாக்கியானத்திற்கு….., பகவத் கீதை என்று பெயர். ஆதிசங்கர பகவத் பாதர் என்கிற பெயரை அடியொற்றி.
அவருக்கு சற்றேறக்குறைய 180 ஆண்டுகளுக்கு பிறகு ஜனித்த நம் ஜகதாசாரியருக்கு, பவிஷ்யதாச்சாரியர் என்கிற திருநாமம் உண்டு. இஃது காலத்தால் மூத்தவரான நம்மாழ்வார் அவர் தம் மதுரகவி ஆழ்வாருக்கு பொருநை ஆற்றின் கரையில் (தாமிரபரணி) வார்த்த திருவுருவச்சிலையை கொடுத்தது, ஸ்ரீராமாநுஜரின் வருகையை கட்டியம் கூறுவது போல் அமைந்ததெல்லாம் பெறும் வரலாறு.
சம்பிரதாயத்தில் பல ஏற்றமிகு காரியங்களை சாதித்துக் கொடுத்து இருக்கிறார் என்பதை எல்லாம் விட ஆகச் சிறந்த நிர்வாகியாக திகழ்திருக்கிறார். அன்று அவர் ஏற்படுத்தின பத்துக் கொத்து பரிவாரங்கள் இன்றளவும் ஸ்ரீரங்கத்து நிர்வாக செயல்பாடாக இருக்கிறது என்றால்…….. இன்றைய நவீன உலகின் நிர்வாகவியலை அன்றே கையாண்டு வெற்றி கண்டிருக்கிறார் என்பதே நிதர்சனமான உண்மை.
அவரது வாழி திருநாமத்தின் ஓர் வரி…… தென்னரங்கத்து செல்வம் முற்றும் திருத்தி வைத்தோன் வாழியே… என்பதை அனுபவித்து அந்வயக்கவேண்டும். இதன் பொருட்டே அழகிய மணவாளன் அவருக்கு #உடையவர் என்கிற திருநாமத்தை தந்தருளினார்.
இங்கு பின்னாளில் உடையார் என்பதே ராஜ ராஜ சோழனுக்கு உரித்தான பட்டப் பெயர் என்றெல்லாம் கிளம்பினார்கள். கல்வெட்டு ஆதாரங்களை கொண்டு வந்து கொட்டினார்கள். திருவாளர் திரு பாலகுமாரன் எழுதிய ஒரு புத்தகத்திற்கு உடையார் என்பதே பெயர். ஆனால் அது பரகேஸரி உடையார் எனும் முழுப்பெயரை தாங்கி நிற்கிறது. இதன் பொருள் #பர என்பதற்கு எதிரி எனும் பொருளில் கேஸரி என்பது சிங்கத்தை குறிக்கும் சொல்லோடு சேர்த்து எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குபவன் என்கிற ரீதியில் அழைத்திருந்தார்கள்.
ஆனால் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் இதற்கு அர்த்தம் வேறு. தவிர ராஜராஜனுக்கு பிறகு மூன்று ஆண்டுகள் கழித்தே இவரது ஜனனம் அமைந்தது என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
உடையவரின் நிர்வாகத் திறனுக்கு இந்த பெயர் பொருந்தும் என்றாலும் அவரது திருவுள்ளம் எத்தகையது என்பதை அறிவதற்கு சில பல சம்பவங்களை அந்வயக்கவேண்டும். அழகிய மணவாளனுக்கு இரவு பொழுதில் பால் அமுது செய்விக்க நல்ல தரமான பசுக்களை கொண்டு வந்து கொட்டிலில் கட்டி வைத்து பராமரித்து வந்தனர்…. வீதியுலா செல்ல நேர்ந்த சமயத்தில் இதனை கவனித்த நம் ராமாநுஜ முனி அந்த மாட்டிற்கு கருபஞ்சாரு கலந்த நுனி பசும்புல்லை மாத்திரமே உண்ணக் கொடுக்க வேண்டும் என்றும்… பால் கறக்கும் மூன்று நாழிகைக்கு முன்பாக நன்கு குளிர்ந்த நீரில் குளிப்பாட்டிட வேண்டும் என்று அறிவுரை வழங்கி அது சரிவர நடக்கிறதா என கண்காணித்து வந்தார்.
ஏன்…..?
அப்படி நன்கு பராமரிக்கப்பட்ட மாடுகள் மனம் குளிர்ந்து அதிக இனிப்பு சுவை கூடின பாலை தரும் என்பது அவரது உள்ளக்கிடங்க இருந்தது. அந்த பாலை நன்கு காய்ச்சி ஆறவைத்து அழகிய மணவாளனுக்கு இரவில் பாலமுது செய்வித்து வந்திருக்கிறார் என்றால்…. எப்பேர்ப்பட்ட பாவனை அது. இதற்காகவே ஏழு பிரகாரங்களை கொண்ட திருவரங்கத்தில்……, ஏழாவது பிரகாரத்தில் வட கிழக்கில் கொட்டகை அமைத்து அதில் பசுக்களை வைத்து பராமரித்து வந்திருக்கிறார். அந்த இடம் தான் இன்றைய கீழ சித்திரை வீதியின் வட கோடியில் உள்ள கோரத மூலை. இன்றைக்கும் சித்திரை தேர் இந்த இடத்தில் இடத்தில் இருந்து தான் புறப்பாடு கண்டருளப்பண்ணப்படுகிறது.
இந்த உலகில் வேறெங்கேனும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஓர் விஷயம் வழிவழியாக சம்பிரதாயமாக நடைபெறுகின்றனவா என்பதை நினைத்து பாருங்கள்.இதன் வீர்யம் புரியும்.
ராமாநுஜரின் தயையும், தாஸ்ய பாவத்தையும் எத்தனை தூரம் எடுத்து சொன்னாலும் தகும் எனும்மாப்போலே….. அவரது நிர்வாகம் ஸ்ரீரங்கத்தில் எப்படி இருந்திருக்கிறது ஓர் உதாரணம்….. உன் அதிகாரம் என்ன #கிள்ளாக்கு பறக்கிறதா என இன்றளவும் ஒருவரை பகடி செய்ய அங்கு பயன்படுத்துவர்.
அது என்ன கிள்ளாக்கு?????
ராமாநுஜர் திருவரங்கத்தின் சந்தன மண்டப கொரட்டில் (படிக்கட்டு)அமர்ந்து கொண்டு ஓர் அரசரை போல் நீதிபரிபாலனம் நிர்வகித்த காலத்தில் பத்துக்கொத்து பரிவாரங்கள் ஏற்படுத்தி வைத்திருந்தார்.இதிலும் இரண்டு பத்துக்கொத்து இருந்தது.உள்துறை, வெளித்துறை என இரண்டு. இந்த உள்துறை கவனித்தவர் வசித்து வந்ததால் தான் ஆறாம் பிரகாரத்திற்கு உள்துறை வீதி என்றே பெயர். (இன்றைக்கு அது உத்தர வீதி என்பர்)
மற்ற கோவில்களை போல் பராமரிப்பு செய்ய பிரம்மோற்சவம் விழாவின் முன்னதாக என வருடத்திற்கு ஒரு முறை பார்த்து கொள்ளலாம் என்பதெல்லாம் ஸ்ரீரங்கத்தில் நடவாது. நித்தியப்படி அமுது பண்ணி வைக்க நித்தம் நித்தம் மண்பாண்டங்கள் பண்ணிக்கொண்டே இருப்பதில் தொடங்கி பராமரிப்புக்கு என்றே தனியே ஒரு காலவரை ஏற்படுத்தாமல் அப்போதுக்கு அப்பொழுதே வேலை நடக்கும் அங்கு. வருடம் முழுவதும் திருவிழா நடைபெறும் இடமாக இருப்பதால் சவாலான இந்த பணியினை மேற்கொள்ள இவ்வாறான விஷயங்களை முன்னெடுத்து அதனை வகைப்படுத்தி வைத்திருந்தார்.
இவர்களுக்கான உத்தரவு என்பது வெற்றிலையில் …, வெற்றிலைக்காம்பு கிள்ள பயன்படுத்தப்படும் குறளியால், அடையாளம் ஏற்படுத்தி செய்தி அனுப்பி வேலை வாங்கி இருக்கிறார் ராமானுஜர். அந்த குறளிக்கு கிள்ளாக்கு என்று பெயர். உள்துறை வேலைகளில் வெற்றிலையின் இடது புறத்திலும்……, இதுவே வெளி வேலை என்றால் அதனை வலது பக்கத்தில் கிள்ளாக்கு கொண்டு செய்தி அனுப்பி இருக்கிறார்.
அதன் பொருட்டே உன் அதிகாரம் கிள்ளாக்கு பறக்கிறதா என சொல்லடவு ஏற்பட்டுள்ளதாம் இங்கு. இதற்கு கல்வெட்டு ஆதாரங்கள் எல்லாம் காணக்கிடைக்கின்றன. சமையல் குறிப்புகள் எல்லாம் அந்த கல்வெட்டில் இருக்கின்றன என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். இந்த உலகிலேயே சமையல் குறிப்புகள் கல்வெட்டில் இருப்பதும் இங்குதான்,அதிகப் படியான எண்ணிக்கையில் கல்வெட்டுகள் இருப்பதும் ஸ்ரீரங்கத்தில் தான்.
எரிதுரும்பு…. விறகிற்கான பெயர். விடாய் பருப்பு…. மொச்சையை குறிக்கும் சொல் என்பது போன்ற பல சுவையான சுவாரஸ்யமான தகவல்களும் இங்கு கல்வெட்டில் உண்டு என்பது கூடுதல் தகவல்.
என்ன….. சாப்பிடுவதற்கெல்லாமா கோவிலில் முக்கியத்துவம் கொடுத்தார்களா என்றால்… அதற்கும் பதில் இருக்கிறது கல்வெட்டில்…
ஓர் ஆவணி மாத மழை நேரத்தில்….. கோவிலில் மத்யான நேரத்தில் அழகிய மணவாளனுக்கு நாவல் பழங்களோடு ததியமுதம் என்கிற தயிர் சாதம் கண்டருளப்பண்ணி இருக்கிறார்கள். இதற்கு மறுநாள் அவரது திருமேனி வாட்டமுடன் இருப்பதை கண்டு ராமானுஜர், பதற்றம் கொண்டு நேற்றைய தினம் என்ன அமுது செய்வித்தீர்கள் கேட்க மடப்பள்ளியில் இருந்து பதில் வந்திருக்கிறது இது போல கண்ணணுக்கு மிகவும் பிடித்தமான நாவல் பழங்களோடு கூடின ததியமுது என்று.
உடனே விஷயத்தை ஊகித்து அறிந்த அவர், அதன் பொருட்டே ஜலதோஷம் பிடித்து மணவாளன் வாட்டமுடன் இருப்பதை உணர்ந்த அவர் கோவிலினுள்ளே எழுந்தருளியுள்ள தன்வந்திரி சன்னதியில் வைத்து சுக்கு மிளகு திப்பிலி கஷாயம் வைத்து அதனை கண்டருளப்பண்ணிவிட்டு அழகிய மணவாளனுக்கு சமர்ப்பிக்க…… மறுநாள் புதுபொலிவோடு விளங்கினார் என குறித்து வைத்துக்கிறார்கள்…..
எப்பேர்ப்பட்ட பாவனை அது. வேறு எங்கேனும் இப்படியான ஒன்றை அந்வயக்க முடியுமா !!??
விஷயம் அத்தோடு நிற்கவில்லை…, அதன் பின்னான காலத்தில் தன்வந்திரி சன்னதியில் வைத்து கஷாயம் தயாரித்து அதனை அழகிய மணவாளனுக்கு வாரத்தில் ஒரு நாள் கொடுப்பதை வழக்கமாகவே கொண்டிருந்தனர்.மற்ற சன்னதிகளை காட்டிலும் கொஞ்சம் உயர்த்தியே கட்டுவித்து இருக்கிறார்கள். ஏனெனில் பக்தர்கள் புழங்கும் இடத்தை விட சற்று உயரமான இடத்தில் இருந்தால் நோய் தாக்கம் குறையும் என்பதால்… என்கிறார்கள்.
இன்றைய அறிவியலும் இதைத் தான் சொல்கிறது என்றால் எப்பேர்ப்பட்ட ஞானம் இது.
நாம் கோவில்களை…… கோவில் ஊடான அறிவியலை எல்லாம் உணர்ந்து கொள்வதே இல்லை. விஞ்ஞானத்தை ஏற்கும் மனது மெய்ஞானத்தை தள்ளுபடி செய்கிறது. மேற்சொன்ன விஷயங்கள் எல்லாம் இன்றைய இளம் தலைமுறையினருக்கு அபத்தமாக தெரியக்கூடும். அதில் பொதிந்து கிடக்கும் அர்த்தபாவத்தை காண்பித்து கொடுக்கவேயில்லை …..
நாம் நம் கற்றலை போதித்தல் என்கிறோம். கொஞ்சம் நுட்பமான ஆராய்ந்தால் போதை என்கிற வேர் சொல்லிருந்தே போதனை,போதித்தல் என்கிற வார்த்தை வருவதை உணர முடியும். அப்படி என்றால் கற்றுக் கொள்வதென்பது வேறு … கற்றல் எங்கிற பாவனை வேறு.
இவ்வளவு நுணக்கமாக பதம் பிரித்து சொன்னவர்கள் நமது முன்னோர்கள்…. இதில் உச்சம் கண்டவர் நம் ராமாநுஜர்.
இன்றைய தேதியில் #ஸ்ரீ என்கிற எழுத்தை.. வார்த்தையோடு சேர்த்தெழுதுவதை யாரேனும் கண்டால்…. அதற்கு நம் ராமானுஜரே முழு முதல் காரணம். சித்,அசித், ஈஸ்வர தத்துவமாகட்டும், பின்நாளைய பசு, பதி, பாசம் என்பதாகட்டும் இவை எல்லாவற்றிற்குமான மூலம் #ஸ்ரீராமாநுஜர். ஸ்ரீ எனும் பதம் ஜீவக்கோடியில் முதன்மையானவளும்….. ஈஸ்வரக்கோடியில் கடைசியாக இருப்பவளை குறிக்கும் என்பதை காண்பித்து கொடுத்தவர் தான் இந்த யதிராஜர். உயிர்ப்புள்ள ஒன்றை குறிக்க ஸ்ரீ என்கிற பத பிரயோகம் பின்னாளில் வழக்கத்தில் வந்தது. #திரு இதன் தமிழ் உருப்பு.
இதுவே…..
இவையே நம் தமிழ் சமூகத்தின் வார்ப்புரு. மேற்சொன்ன விஷயங்கள் எல்லாம் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் எனும் அளவில் சின்னஞ்சிறு விஷயத்தை மாத்திரமே இந்த நந்நாளில் உங்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறோம். இன்னமும் தெரிந்துகொள்ள… அதில் அமிழ்ந்து அனுபவிக்க ஏராளம் இருக்கின்றது.
❣எம்பெருமானார் திருவடிகளே சரணம்.
- ‘ஜெய் ஹிந்த்’ ஸ்ரீராம்