தேமுதிக கொடி உருவாக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு தொண்டர்களுக்கு விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார்.
தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தை நடிகர் விஜயகாந்த் 2005ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி மதுரையில் நடந்த மாநாட்டில் தொடங்கினார். ஆனால், அதற்கு முன்பே விஜயகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் நிர்வாகிகள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றனர்.
2000ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி ரசிகர் மன்றத்திற்கான கொடியும் உருவாக்கப்பட்டது. அதுதான் தற்போது தேமுதிகவின் கொடியாக இருந்துவருகிறது. கொடி உருவாக்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு தேமுதிக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் #விஜயகாந்த்.
கொடியிலுள்ள சிவப்பு, மஞ்சள், கறுப்பு நிறங்கள் மற்றும் நீலநிறத்திலான ஜோதி குறித்தும் கடிதத்தில் விளக்கியுள்ளார்.
சிவப்பு நிறம் சாதி, மதம், மொழி என நாம் வேறுபட்டாலும், நம் அனைவரின் ரத்தமும் சிவப்பு நிறத்தால் ஒன்றானது என்ற உணர்வால் ஒன்றுபடவேண்டும் என்பதைக் குறிப்பதாகவும், மஞ்சள் நிறம் செல்வமும், வளமும் அனைவருக்கும் சமமாக கிடைத்து, ஒவ்வொருவரின் வாழ்வாதாரமும் சிறப்பாக அமைய வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுவதாகவும், கறுப்பு நிறம் மூடநம்பிக்கை, கெட்ட எண்ணங்கள், வறுமை, நோய், தீவிரவாதம் போன்ற எதிர்மறை நிலையில்லாமல், நாடு சிறக்க வேண்டும் என்பதை குறிப்பதாகவும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். அதுபோலவே அனைவரின் வாழ்விலும் பிரகாசமான ஒளி பரவி நாட்டுக்கும், வீட்டுக்கும், நல்லது நடக்க வேண்டும் என்பதை குறிப்பதற்காக நீல நிற ஜோதி உள்ளது என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, “2000 ஆம் ஆண்டு நம் கொடி அறிமுகப்படுத்தியவுடன் பட்டி, தொட்டி எங்கும் நம் கொடி பட்டொளி வீசி பறக்கச் செய்து, இதுவரை எந்த கழகமும் கண்டிராத இமாலய வெற்றிக்கு இணையாக, குறுகிய காலத்தில் நம் கொடி அனைத்து கிராமங்களிலும் ஏற்ற செய்த பெருமை நம் தொண்டர்களையே சேரும். 2005 ஆம் ஆண்டு நமது ரசிகர் மன்றம், தேமுதிகவாக மாறிய போதும், ரசிகர் மன்றக் கொடியை கழக கொடியாக மாற்றி, நம் கொடிகள் இல்லாத கிராமமே இல்லை என்ற சாதனை படைத்த தொண்டர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்” என்று கூறியுள்ள #விஜயகாந்த், “இந்த இருபது ஆண்டுகளில் எத்தனையோ வெற்றிகளையும், தோல்விகளையும், துரோகங்களையும், சூழ்ச்சிகளையும், சோதனைகளையும் சந்தித்த போதும், எதற்கும் மனம் தளராத என் படை தளபதிகளாக இருப்பவர்களே என்னுடன் உறுதுணையாக, நம்பிக்கையாக, பக்கபலமாக இருக்கிறார்கள். இவர்களால் தான் என்றுமே நமது கழகம் வீறுகொண்டு வெற்றிநடை போட்டு வருகிறது” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும், “இனிவரும் காலங்களிலும் லஞ்சம், ஊழலற்ற, நேர்மையான, தைரியமான, அனைவருக்கும் சமமான வாழ்வு அளிக்கும் நம் தமிழகத்தை உருவாக்க வீறுநடை போடுவோம். எந்த நோக்கத்திற்காக நம் கொடி அறிமுகப்படுத்தப்பட்டதோ, நம் கட்சி ஆரம்பிக்கப்பட்டதோ, அந்த இலக்கை நோக்கி நாம் அசுர பலத்துடன் உழைத்து வெற்றி பெறுவோம்” என்றும் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் விஜயகாந்த் கூறியுள்ளார்.