சென்னை:
இலங்கைக்கு அண்மையில் பயணம் மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் மோடியைக் கொல்ல சதி நடந்ததாக பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை ஊடகங்கள் இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ளன. மேலும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை மர்ம நபர்கள் சிலர் இந்நிகழ்ச்சிகளின் போது பின் தொடர்ந்ததாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 12ஆம் தேதி சர்வதேச வெசாக் மாநாடு, கொழும்பு பண்டார நாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருத்தினராகக் கலந்து கொண்டார். அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி அரங்குக்குள் நுழைய முற்பட்டுள்ளனர். அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்திற்குள் முஸ்லிம் நபர் ஒருவர் கத்தரிக்கோலுடன் உள்ளே நுழைய முயற்சி செய்தார் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அவ்வாறு அவர் நுழைந்தபோது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் அவரைக் கைது செய்து குருந்துவத்தை போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அந்த நபர் முஸ்லிம் மதத் தலைவர் போல் கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தினுள் நுழைய முயற்சி செய்துள்ளார் என்று தெரிகிறது. இவர், நரேந்திர மோடி கலந்து கொண்ட கூட்டத்தில், சீன பிரதிநிதி ஒருவர் செல்லும் அனுமதி அட்டையுடன் செல்ல முயற்சி செய்ததும் தெரியவந்துள்ளது. இந்த நபரைக் கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இதனையடுத்து அவரை மேற்படி மருத்துவ அறிக்கைக்காக அங்கொட மருத்துவமனைக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாம்.
கைது செய்யப்பட்ட அடையாளங்களை வெளியிடாவிட்டாலும், அவரின் மகள் தெமட்டகொட பிரதேசத்தை சேர்ந்தவர் என கூறப்பட்டுள்ளது. இதேநேரம் அன்று பெண் ஒருவரும் பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தினுள் அனுமதியின்றி நுழைய முயற்சி செய்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
மோடியை தாக்குவதற்காகவே இவர்கள் வந்திருக்கலாம் என்று கூறப்படுவதால், இந்தச் செய்திகள் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.