கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே சீனாவில் இருந்து கப்பலில் வந்த பூனையை என்ன செய்வது என்று தெரியாமல் சென்னை துறைமுக அதிகாரிகள் குழம்பி போயுள்ளனர். சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து பரவிய உயிர்கொல்லி ‘கொரோனா வைரஸ்’ உலகையே அச்சுறுத்தி வருகிறது.
இதனால் சீனாவில் இருந்து தங்கள் நாட்டுக்கு திரும்பும் ஒவ்வொரு பயணிகளையும் உன்னிப்பாக கண்காணிக்க ஒவ்வொரு நாடும் உத்தரவிட்டுள்ளது. எங்கே வெளிநாட்டில் இருந்து வரும் மனிதர்கள் மூலமாக கொரோனா பரவி விடுமோ என்ற அச்சம் அனைவரிடத்திலும் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவிலும் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் கடந்த மாதம் சீனாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு விளையாட்டு பொருட்களை ஏற்றி வந்த கப்பலில் இருந்த கண்டெய்னரில் பூனை ஒன்று கூண்டில் அடைக்கப்பட்டு இருந்தது.
இதனைப் பார்த்த துறைமுக அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்து வந்த சுகாதாரத்துறையினர் பூனைக்கு மருத்துவப் பரிசோதனை செய்தனர். சோதனையின் முடிவில் பூனைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.
இருந்தாலும் அதிகாரிகளிடம் இருந்த அச்சம் போகவில்லை. இதனால் சில நாட்கள் பூனை தனிமைப்படுத்தப்பட்டு, பாதுகாப்பான இடத்தில் வைத்து கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டது.
பூனை கூண்டில் இருந்தாலும் அந்த கூண்டு இருந்த கண்டெய்னர் பக்கமே யாரும் போகவில்லை. உள்ளே இருந்த பொருட்களை வெளியே எடுக்கவும் இல்லை. பூனையை அனுப்பியது யார் என்றே தெரியாமல் அதிகாரிகளும் குழம்பி போயுள்ளனர்.
விதிப்படி, வெளிநாடுகளில் இருந்து கண்டெய்னரில் உயிருடன் வரும் விலங்குகளுக்கு 3 நாட்கள் யாரும் உரிமை கோரவில்லை எனில், வந்த இடத்திற்கே திருப்பி அனுப்பப்படும். அதன்படி, குட்டி பூனையால் எதற்கு வம்பு என சீனாவிற்கே அனுப்ப முடிவு செய்துள்ளனர்.