விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சந்திக்காப்பான் கோயில் தெருவை சேர்ந்தவர் யுவராஜ் (22). கூலித் தொழிலாளியான இவர் விஜய் ரசிகர். இவரது வீட்டின் அருகில் வசிப்பவர் தினேஷ்பாபு (22). இவர் ரஜினி ரசிகர். யுவராஜ், தினேஷ்பாபு இருவரும் நெருங்கிய நண்பர்கள் .
ஊரடங்களால் இருவரும் வீட்டிலேயே இருந்து வரும் நிலையில். நேற்று மாலை தினேஷ்பாபு வீட்டில் நண்பர்கள் இருவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது இருவருக்கும் மது போதை அதிகமான நிலையில் கொரோனா நிவாரணமாக ரஜினி அதிக நிதி கொடுத்தாரா, விஜய் அதிகமாக நிதி கொடுத்தாரா ? என விவாதம் எழுந்துள்ளது.
விளையாட்டாக தொடங்கிய விவாதம் ஒரு கட்டத்தில் நண்பர்கள் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. கைகலப்பு முற்றிய நிலையில், போதையில் தினேஷ்பாபு, யுவராஜை கீழே பிடித்து வேகமாக தள்ளியுள்ளார்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த யுவராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தவறிந்த யுவராஜின் உறவினர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற மரக்காணம் காவல்துறையினர் யுவராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த மரக்காணம் காவல்துறையினர் தினேஷ்பாபுவை கைது செய்தனர். நடிகர்கள் பெரியதா என ரசிகர் சண்டையால் நண்பனையே கொலை செய்த சம்பவம் மரக்காணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.