இந்தியாவில் மே 19 – இன்றைய நிலவரப்படி, கொரோனாவால், 1,01,139 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,163 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 4,970 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இரு வாரங்களில் இரு மடங்கு அதிகரித்துள்ளது கொரோனா பாதிப்பு!
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில்… இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 96,169 லிருந்து 1,01,139 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 3,029 லிருந்து 3,163 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரம், கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டவர்களின் எண்ணிக்கை 36,824 லிருந்து 39,173 ஆக அதிகரித்துள்ளது.
ஒரே நாளில் 4,970 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, 134 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த அதிகரிப்புக்குக் காரணமாகக் கூறப் படுவது… கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், நோய்த்தொற்று உறுதி செய்யப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றும், உயிரிழப்பும் கணிசமாக உயர்ந்து வருகிறது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரு மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளது. மே 6ஆம் தேதி காலை 49,391 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். 1694 பேர் உயிரிழந்திருந்தனர். குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 14,182 ஆக இருந்தது. அன்றைய நிலவரப்படி புதிய நோய்த்தொற்று என்பது 3000-க்குள் இருந்தது.
தற்போது இந்த எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. இன்று மொத்த பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்துள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 35.058 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 1249 பேர் உயிரிழந்துள்ளனர்.
இரண்டாமிடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்தில் 11,760 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்கள் இவை… பாதிப்பும் உயிரிழப்பும்!
மகாராஷ்டிரா – 35058 (1249)
தமிழ்நாடு – 11760 (81)
குஜராத் – 11745 (694)
தில்லி- 10054 (168)
ராஜஸ்தான் – 5507 (138)
மத்திய பிரதேசம் – 5236 (252)
உத்தர பிரதேசம் – 4605 (118)
மேற்கு வங்காளம் – 2825 (244)
ஆந்திரா – 2474 (50)
பஞ்சாப் – 1980 (37)
தெலங்கானா – 1597 (35)