திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று கண்டறியப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 670 ஆக உயர்ந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்துக்கு வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்கள், சென்னை உள்ளிட்ட பிறமாவட்டங்களில் இருந்து வந்தவர்களால் நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மாவட்டத்தில் நேற்று வரையில் 644 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. அவர்களில் 428 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 212 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்தில் பொதிகை நகர் பகுதியில் 3வயது குழந்தை உள்ளிட்ட 2 பேருக்கு பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 24 பேருக்கு மாவட்டம் முழுக்க பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 670 ஆக அதிகரித்துள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சியில் சமூக இடைவெளியை பின்பற்றாத 14 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாதா சன்னதி தெரு, ஜவஹர்லால் தெரு ஆகிய பகுதிகளில் மாநகராட்சி கண்காணிப்பு குழுவினர் ஆய்வின்போது, ஹோட்டல், கடைகள் என 9 நிறுவனங்களில் பாதுகாப்பு முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைப் பின்பற்றாததும் கண்டறியப்பட்டது. இதையடுத்து ரூ.14 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
இதுபோல் தச்சநல்லூர் மண்டலத்தில் கண்ணம்மன் கோயில்தெரு, பெருமாள் தெற்கு ரத வீதிகளில் செயல்பட்டு வந்த 3 கடைகளுக்கும், பாளையங்கோட்டை மண்டலத்துக்கு உட்பட்ட முருகன்குறிச்சி, திருவனந்தபுரம் சாலை ஆகிய பகுதிகளில் 2 கடைகளும் சீல் வைக்கப்பட்டன.